என் மலர்
நீங்கள் தேடியது "நர்சு கத்திக்குத்து"
தாளவாடி:
தாளவாடி அருகே உள்ள எரக்க நல்லி கிராமத்தைச் சேர்ந்தவர் ராமன். இவரது மகள் ரத்தினம்மாள் (வயது 25) நர்சிங் படிப்பு முடித்து கோவையில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் தங்கி பணிபுரிந்து வருகிறார்.
இந்நிலையில் ரத்தினம்மாளுக்கு திருமண ஏற்பாடுகள் நடந்து வந்தன.
தாளவாடி அடுத்த அருள்வாடி கிராமத்தைச் சேர்ந்த தேவராஜ் (29) என்பவருக்கு ரத்தினம்மாளை இரு வீட்டு பெற்றோரும் பேசி முடிவு செய்தனர். இதையடுத்து ரத்தினம்மாள் தனது வேலையை விட்டு வீட்டில் இருந்துள்ளார். ரத்தினம்மாள் செல்போனில் நண்பருடன் அடிக்கடி பேசி வந்துள்ளார். இதனால் சந்தேகமடைந்த தேவராஜ் ரத்தினம்மாளிடம் யாருடன் செல்போனில் பேசிக் கொண்டிருக்கிறாய் என்று கேட்டு உள்ளார்.
இது தொடர்பாக அவர்களுக்கு இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் கோபம் அடைந்த ரத்தினம்மாள் திருமணத்தை நிறுத்தி விடுமாறு பெற்றோரிடம் கூறியுள்ளார்.
இதுகுறித்து தேவராஜ் பெற்றோர்களுக்கும் ரத்தினம்மாள் பெற்றோர்கள் திருமணத்தை நிறுத்தி விடலாம் தகவல் தெரிவித்து விட்டனர்.
இந்நிலையில் நேற்று முன்தினம் இரவு 10 மணி அளவில் தேவராஜ் ரத்தினம்மாள் வீட்டிற்கு வந்தார். இந்த நேரத்தில் இங்கே ஏன் வந்தீர்கள் என்று ரத்தினம்மாள் பெற்றோர் கேட்டனர். அதற்கு தேவராஜ் நான் ரத்தினம்மாளிடம் தனியாக பேச வேண்டும் என்றார். அதற்கு அவரது பெற்றோர் மறுப்பு தெரிவித்தனர். இதனால் கோபமடைந்த தேவராஜ் தான் மறைத்து வைத்திருந்த கத்தியால் ரத்தினம்மாள் முதுகுப் பகுதியில் குத்தினார். அவரது அலறல் சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்து தேவராஜை மடக்கி பிடித்தனர்.
ரத்தினம்மாள் 108 ஆம்புலன்ஸ் மூலம் கர்நாடக மாநிலம் சாம்ராஜ் நகரில் உள்ள அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார்.
இதுகுறித்து ரத்தினம்மாள் பெற்றோர் கொடுத்த புகாரின் பேரில் தாளவாடி போலீசார் வழக்கு பதிவு செய்து தேவராஜை கைது செய்தனர்.






