search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "shifting"

    கூடலூரில் பஸ் நிறுத்தங்களை போக்குவரத்து போலீசார் அடிக்கடி மாற்றுவதால் கிராம மக்கள் அதிருப்தி அடைந்து உள்ளனர்.
    கூடலூர்:

    கூடலூரில் இருந்து ஓவேலி, தேவர்சோலை, பாட்டவயல், பந்தலூர், சேரம்பாடி, ஊட்டி, கோவை, ஈரோடு, சேலம், திருப்பூர் உள்ளிட்ட இடங்களுக்கு அரசு பஸ்கள் இயக்கப்படுகிறது. இதுதவிர கேரள-கர்நாடகா பஸ்களும் வந்து செல்கிறது. இதேபோல் ஓவேலி, பந்தலூர் பகுதியை சேர்ந்தவர்கள் வேலைநிமித்தம் காரணமாக கூடலூருக்கு தினமும் வந்து செல்கின்றனர். இதனால் கூடலூர் புதிய பஸ் நிலையத்தில் இருந்து ஓவேலிக்கு செல்லும் பஸ்கள் சக்தி விநாயகர் கோவில் அருகே உள்ள நிறுத்தத்தில் நின்று பயணிகளை அழைத்து செல்வது வழக்கம்.

    இதேபோல் ஊட்டியில் இருந்து வரும் பஸ்கள் கோவிலின் எதிர்புறம் பயணிகளை இறக்கி விட்டு செல்வது வாடிக்கை. மேலும் அதே பகுதியில் சாலையோரம் இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டன. இதனால் பயணிகள், பொதுமக்கள், வாகன ஓட்டிகள் எந்தவித சிரமம் இன்றி பயன் அடைந்து வந்தனர்.

    இந்த நிலையில் கடந்த 3 மாதங்களுக்கு முன்பு போக்குவரத்து போலீசார் தேசிய நெடுஞ்சாலையின் நடுவில் வரிசையாக இரும்பு தடுப்பு கம்பிகளை வைத்தனர். இதனால் கூடலூர்- ஊட்டி தேசிய நெடுஞ்சாலையில் போக்குவரத்து நெருக்கடி ஏற்பட்டது. இதைதொடர்ந்து இருசக்கர வாகனங்களை சாலையோரம் நிறுத்துவதற்கு போலீசார் தடை விதித்தனர். ஆனால் ஆட்டோ, ஜீப் உள்ளிட்ட வாகனங்கள் சாலையில் நிறுத்தி கொள்ள போலீசார் அனுமதி வழங்கினர். இருசக்கர வாகனங்கள் சாலையோரம் நிறுத்த அனுமதிக்காததால் நகராட்சி வணிக வளாகத்தில் நிறுத்தப்பட்டன. ஆனால் வியாபாரிகள் எதிர்ப்பு காரணமாக நகராட்சி வணிக வளாகத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த நகராட்சி நிர்வாகம் தடை விதித்தது.

    இதனால் கூடலூர் கடைசி பகுதியான ராஜகோபாலபுரத்தில் இருசக்கர வாகனங்களை நிறுத்த போலீசார் அனுமதித்தனர். இதனிடையே அரசு பஸ்கள் நிறுத்தும் இடத்தை போக்குவரத்து போலீசார் மாற்றி உள்ளனர். இதனால் கிராம மக்கள் கடும் அதிருப்தி அடைந்து உள்ளனர். ஏற்கனவே பயன்படுத்தி வந்த பஸ் நிறுத்தத்தில் ஆட்டோ, ஜீப் மற்றும் தனியார் வாகனங்களுக்கு அனுமதி வழங்கப்பட்டு உள்ளது. இது குறித்து இருசக்கர வாகன ஓட்டிகள், கிராம மக்கள் கூறியதாவது-

    கூடலூரில் போக்குவரத்து போலீசாரின் குளறுபடியால் வாகன நிறுத்தும் இடங்கள் அடிக்கடி மாற்றி அமைக்கப்படுகிறது. மேலும் நாளுக்குநாள் போக்குவரத்து நெருக்கடி அதிகரித்து வருகிறது. சாலையின் இருபுறமும் உள்ள ஆக்கிரமிப்புகளால் தேசிய நெடுஞ்சாலை குறுகலாகி வருகிறது. இதனால் ஆக்கிரமிப்புகளை அகற்றி சாலையை விரிவாக்கம் செய்ய வேண்டும். அவ்வாறு செய்தால் மட்டுமே வாகனங்கள் நிறுத்த போதிய இடம் கிடைக்கும். இல்லை எனில் இப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு கிடைக்காது.

    இவ்வாறு அவர்கள் கூறினர். 
    ×