search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Shi Yan 6"

    • கப்பல்கள் அனைத்துமே உயர் தொழில் நுட்பம் கொண்ட உளவு கப்பல்கள் ஆகும்.
    • கப்பல் கடல் ஆய்வுப் பணியில் ஈடுபட்டது.

    புதுடெல்லி:

    இலங்கை கடல் பகுதியில் ஆய்வு பணி என்ற அடிப்படையில் சீன உளவு கப்பல்கள் அவ்வப்போது இலங்கைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது. இந்தியாவும் இதற்கு அடிக்கடி எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. சீன உளவு கப்பல்கள் இலங்கையின் அம்பன் தோட்டா, கொழும்பு உள்ளிட்ட பல பகுதிகளுக்கு அடிக்கடி வந்து செல்கின்றன. இந்த கப்பல்கள் அனைத்துமே உயர் தொழில் நுட்பம் கொண்ட உளவு கப்பல்கள் ஆகும். இந்த கப்பல்கள் இலங்கை கடல் பரப்பில் இருக்கும் பொருளாதார வளம் பற்றி ஆய்வு செய்வ தற்காகவே வருவதாக சொல்லப்படுகிறது. ஆனால் அந்த கப்பல்கள் இந்தியாவை உளவு பார்ப்பதற்காகவே இலங்கை கடல் பகுதிக்கு அடிக்கடி வருவதாக இந்தியா குற்றம் சாட்டுகிறது.

    சீனாவின் உளவு கப்பலான 'ஷி யான்-6' கடந்த அக்டோபர் மாதம் இலங்கைக்கு வந்தது. அந்த கப்பல் இலங்கை கடல் பகுதிக்கு வெளியே இந்திய பெருங்கடல் பகுதியில் நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த கப்பல் கடல் ஆய்வுப் பணியில் ஈடுபட்டது. ஆனால் அந்த கப்பலும் இந்தியாவை உளவு பார்க்க வந்ததாகவே இந்தியா சார்பில் இலங்கை அரசிடம் தெரிவிக்கப்பட்டது. இந்தியாவின் எதிர்ப்பையும் மீறி 'ஷி யான்-6' கப்பல் தனது ஆய்வுப்பணியை முடித்து விட்டு கடந்த 2-ந்தேதி சிங்கப்பூர் சென்றடைந்தது. இந்த கப்பல் ஆய்வு பணிக்காக இலங்கையை சென்றடையும் முன்பு சென்னையில் இருந்து 500 கடல் மைல் தொலைவில் காணப்பட்டது.

    ஷி யான்-6

    ஷி யான்-6

    இந்த நிலையில் இந்திய கடல் பகுதிக்கு அடுத்த மாதம் மேலும் ஒரு சீன உளவுக்கப்பல் வருகிறது. இந்த கப்பல் 5 மாதம் தங்கி இருந்து ஆய்வு செய்ய முயற்சி மேற்கொண்டு வருகிறது. இந்த உளவு கப்பலை இலங்கை மற்றும் மாலத்தீவு துறைமுகங்களில் நிறுத்த திட்டமிடப்பட்டு உள்ளது. இதற்காக அந்த 2 நாடுகளிடமும் சீனா அனுமதி கேட்டுள்ளது.

    இந்த கப்பல் வருகிற ஜனவரி மாதம் 5-ந்தேதி முதல் மே மாதம் வரை 5 மாதங்கள் இந்திய பெருங் கடலின் தெற்கு பகுதியில் ஆய்வு மேற்கொள்ள உள்ளது. இதையறிந்த மத்திய அரசு, இலங்கை, மாலத்தீவு ஆகிய இரு நாடுகளுடனும் ஏற்கெனவே பேசி சீனாவின் உளவு திட்டத்தை எடுத்துக்கூறி சீன உளவு கப்பல் இந்திய பெருங்கடல் பகுதியில் ஆய்வு செய்வதை அனுமதிக்க வேண்டாம் என்று கேட்டுக்கொள்ளப்பட்டது.

    இதற்கிடையே சீனாவின் உளவு கப்பலான 'ஷியாங் யாங் ஹாங் 03' தென் சீன கடல் பகுதியில் உள்ள ஷியாமென் கடற்கரையில் நிறுத்தப்பட்டு உள்ளது. 2 நாடுகளிடமும் அனுமதி பெற்ற பிறகு அந்த கப்பல் மலாக்கா வழியாக மாலத் தீவு மற்றும் இலங்கைக்கு பயணிக்கும்.

    இந்த உளவு கப்பல் 4813 டன் எடை கொண்டது. இந்த கப்பலில் நவீன தொழில்நுட்பத்துடன் கூடிய ஆய்வு கருவிகள் மற்றும் கண்காணிப்பு உபகரணங்கள் இடம்பெற்று உள்ளன.

    இலங்கையை சீனா தனது கட்டுப்பாட்டில் வைத்து இருப்பதாலும், மாலத்தீவு அரசு தற்போது சீனாவுக்கு ஆதரவாக இருப்பதாலும் உளவு கப்பலை அனுப்பி இந்தியாவை உளவு பார்க்க இந்த இரு நாடுகளையும் பயன்படுத்துகிறது. சீனாவின் தந்திரத்தை அறிந்ததால் இந்தியா சீன கப்பல் வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. இது தொடர்பாக இலங்கை அதிபர் ரணில் விக்கிரமசிங்கேயுடன், பிரதமர் நரேந்திர மோடி ஏற்கெனவே கடந்த ஜூலை மாதம் எடுத்துக் கூறியுள்ளார். ஆனாலும் கடந்த முறை சீன கப்பலுக்கு ரணில் விக்கிரமசிங்கே அனுமதி அளித்தார்.

    சீனா ஏற்கனவே கம்போடியா, மியான்மர், இலங்கை, பாகிஸ்தான், ஈரான் மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்சில் உள்ள துறைமுகங்களை எதிர்கால கடற்படை நடவடிக்கைகளை கருத்தில் கொண்டு கையகப்படுத்தியுள்ளது. மேலும் இந்த துறைமுகங்களில் முதலீடும் செய்துள்ளது. இந்திய பெருங்கடல் முழுவதிலும் சீனா தனது தடத்தை விரிவுபடுத்த முயல்வதால் அதை தடுக்கும் முயற்சியில் இந்தியா ஈடுபட்டு வருகிறது.

    • சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவது தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் கவலை தெரிவித்தன.
    • சீனாவின் தொடர் ஆதிக்கத்தின் முக்கிய நடவடிக்கையாக இலங்கையின் கடல் வளங்களை ஆராய சீனா ஆராய்ச்சி கப்பலை அனுப்பி வைத்துள்ளது.

    கொழும்பு:

    இலங்கையின் பாதுகாப்பு தொடர்பான விஷயங்களில் சீனா தொடர்ந்து தனது அத்துமீறலையும், ஆதிக்கத்தையும் செலுத்தி வருகிறது.

    இதற்கிடையே இந்தியா மற்றும் அமெரிக்கா எழுப்பிய எதிர்ப்புகளுக்கு மத்தியில் சீன ஆய்வுக் கப்பலான 'ஷியான் 6' கடந்த 23-ந்தேதி கொழும்புவை வந்தடைந்தது. தனது இரண்டு நாள் ஆராய்ச்சியை இலங்கை கடற்கரையில் இன்று தொடங்க உள்ளதாக இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்

    இலங்கையின் மேற்குக் கரையோரப் பகுதியிலும், இலங்கையின் தேசிய நீர்வள ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் (நாரா) மற்றும் ருஹூனா பல்கலைக்கழகம் ஆகியவற்றுடன் இணைந்து இந்த ஆய்வு மேற்கொள்ளப்படும் என்று கொழும்பில் உள்ள வெளி விவகாரத்துறை தெரிவித்துள்ளது.

    ஏற்கனவே கடந்த 2020 டிசம்பரில் சீனாவின் கடல் சார் ஆராய்ச்சிக் கப்பல்களில் ஷியான் 6 என்ற ஆராய்ச்சிக் கப்பல் சேர்க்கப்பட்டது. புவி மற்றும் இயற்பியல் ஆய்வில் கவனம் செலுத்தும் நாட்டின் முதல் அறிவியல் ஆராய்ச்சிக் கப்பலாகக் கருதப்படும் இது சுமார் 80 நாட்களுக்கு கடலில் இயங்கத் திட்டமிடப் பட்டுள்ளது.

    13 ஆராய்ச்சிக் குழுக்கள் 28 ஆராய்ச்சி திட்டங்களுடன் 12 ஆயிரம் கடல் மைல்கள் முழுவதும் பயணம் செய்து தனது ஆய்வு பணிகளை சீன கப்பல் செய்ய திட்டமிட்டுள்ளது.

    சீனக் கப்பல்கள் இலங்கைக்கு வருவது தொடர்பாக இந்தியாவும் அமெரிக்காவும் கவலை தெரிவித்தன. இது தொடர்பாக இந்த மாத தொடக்கத்தில் பெய்ஜிங்கில் இலங்கை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நடத்திய பேச்சுவார்த்தையிலும் இந்த விவகாரம் குறித்து பேசப்பட்டது.

    கடந்த செப்டம்பரில், இந்தியாவின் முதல் உள் நாட்டில் கட்டப்பட்ட போர்க் கப்பலான 'ஐ.என்.எஸ். டெல்லி' இலங்கைக்கு நல்லெண்ணப் பயணத்தை மேற்கொண்டது. கடந்த வாரம், கொரிய கடற்படையின் ரோக்ஸ், குவாங் கேட்டோ தி கிரேட்' மற்றும் சமீபத்தில், ஜப்பான் கடல் சார் நவீன போர்க்கப்பல் இலங்கையின் வடகிழக்கு கரையோரத்தில் அமைந்துள்ள திரிகோணமலை துறைமுகத்துக்கு வந்தடைந்தது குறிப்பிடத்தக்கது.

    சீனக் கப்பல்களின் வருகை குறித்து இந்தியா பலமுறை கவலை தெரிவித்து வரும் நிலையில், வெளிநாட்டுக் கப்பல்களின் வருகைக்கு நிலையான செயல்பாட்டு நடைமுறை பின்பற்றப்படும் என்று இலங்கை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    சீனாவின் தொடர் ஆதிக்கத்தின் முக்கிய நடவடிக்கையாக இலங்கையின் கடல் வளங்களை ஆராய சீனா ஆராய்ச்சி கப்பலை அனுப்பி வைத்துள்ளது. இது இந்தியா மற்றும் அமெரிக்க நாடுகள் இலங்கைக்கு அளித்து வரும் நட்புறவில் விரிசலை ஏற்படுத்துமா? என்ற கேள்வியையும் ஏற்படுத்தி உள்ளது. 

    • கப்பல் மொத்தம் 1115 டன் எடை, 129 மீட்டர் நீளம் மற்றும் 17 மீட்டர் அகலம் கொண்டது.
    • இந்தியப் பெருங்கடல் பகுதியை சுற்றி வளைக்கும் நோக்கத்துடன் செயல்படும் சீனா அதற்கு தளமாக இலங்கையை பயன்படுத்தி வருகிறது.

    புதுடெல்லி:

    சீனாவின் உளவு கப்பலான ஷி யான்-6 வருகிற 23-ந்தேதி இலங்கைக்கு வர உள்ளது. இந்த கப்பல் இலங்கையின் கொழும்பு மற்றும் அம்பாந்தோட்டை ஆழ்கடல் துறைமுகங்களில் நிறுத்தப்பட உள்ளதாக கூறப்படுகிறது.

    3,999 டன் எடை கொண்ட இந்த கப்பல் குவாங்சோவில் உருவானது. தற்போது தென் சீனக் கடலுக்குள் தெற்கு திசையில் பயணிக்கும் இந்த உளவுக் கப்பல் மலாக்கா கடல் பகுதி வழியாக இலங்கையை அடைகிறது. இலங்கை பொருளாதார மண்டலம் மற்றும் தெற்கு இந்தியப் பெருங்கடலின் பகுதியை ஆய்வு செய்வதற்காக இந்த கப்பல் வருவதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

    இந்த கப்பலில் 20 அதி நவீன அறிவியல் ஆய்வு கருவிகள் உள்ளன. 13 ஆய்வு குழுவினர் இதில் இடம்பெற்று உள்ளார்கள். இந்த கப்பல் 17 நாட்கள் முகாமிட்டு இலங்கை கடற் பரப்பில் ஆய்வுகளை மேற்கொள்ள உள்ளதாகவும் இலங்கை கடற்படை உறுதிப்படுத்தி உள்ளது. இந்த கப்பல் மொத்தம் 1115 டன் எடை, 129 மீட்டர் நீளம் மற்றும் 17 மீட்டர் அகலம் கொண்டது.

    இந்தியப் பெருங்கடல் பகுதியை சுற்றி வளைக்கும் நோக்கத்துடன் செயல்படும் சீனா அதற்கு தளமாக இலங்கையை பயன்படுத்தி வருகிறது. இலங்கைக்கு பொருளாதார மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களில் உதவுவது போல துறைமுகங்கள் மற்றும் கடற்படை தளங்களை நோக்கி கவனம் செலுத்தி வருகிறது.

    சீனாவின் உளவு மற்றும் போர்க் கப்பல்களின் மூலம் 750 கி.மீ. தூரம் வரையிலான இடங்களைக் கண்காணிக்க முடியும். அதன்படி, இலங்கைக்கு மிக அண்மையில் உள்ள இந்தியாவின் ஸ்ரீஹரி கோட்டா ராக்கெட் ஏவுதளம், கல்பாக்கம் அணுமின் நிலையம், கூடங்குளம் அணுமின் நிலையம் மற்றும் இந்தியாவின் தென் மாநிலங்களில் அமைந்திருக்கும் 6 கடற்படைத் தளங்களை இந்தக் கப்பல் மூலம் உளவு பார்க்க வாய்ப்பு உள்ளது. இதனால், சீன கப்பல்களின் வருகைக்கு இந்தியா கடும் எதிர்ப்புத் தெரிவித்து வருகிறது. எதிர்ப்பை மீறி இலங்கை சீன கப்பலுக்கு அனுமதி அளித்துள்ளது.

    அதிநவீன ஆய்வக கட்டமைப்பு மற்றும் கண்காணிப்பு வசதிகளை கொண்ட இந்த கப்பலின் செயல்பாடுகள் இலங்கை கடற்பரப்பில் முன்னெடுக்கும் பட்சத்தில் அது இந்தியாவின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாகவே அமையும். எனவே இந்திய பெருங்கடலுக்குள் ஷி யான் - 6 கப்பலை அனுமதிக்க வேண்டாம் என்று மத்திய அரசு இலங்கையை வற்புறுத்தி உள்ளது.

    சீனாவின் ராணுவக் கப்பல்களுக்கு இலங்கை இடம் கொடுப்பது இது முதல் முறையல்ல. கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம் பாலிஸ்டிக் ஏவுகணைகளைக் கண்காணிப்பதில் பெயர் பெற்ற சீனக் கப்பலான யுவான் வாங்-5 அம்பாந்தோட்டை துறைமுகத்தில் நிறுத்தப்பட்டது.

    மற்றொரு உளவு கப்பல் ஏற்கனவே கடந்த ஆண்டு ஏப்ரல் மாதம் 20-ந் தேதி இலங்கைக்கு வருகை தந்ததோடு 10 நாட்கள் இலங்கை கடற்பரப்பில் முகாமிட்டிருந்தது.

    சீனாவின் போர்க்கப்பலான ஹை யாங் 24 சில வாரங்களுக்கு முன்னர் 138 மாலுமிகளுடன் கொழும்பு துறைமுகத்தில் தங்கியிருந்தது. இலங்கையின் தற்போதைய ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கே பிரதமராக இருந்த காலத்தில், சீனாவின் பெய்ஜிங் கடனாகக் கொடுத்த தொகையைத் திருப்பிச் செலுத்துவதற்காக, அம்பாந்தோட்டை துறைமுகத்தை 99 வருட குத்தகைக்கு சீனாவிடம் ஒப்படைத்திருந்தார்.

    இலங்கைக்கு அதிக கடன் வழங்கியுள்ள நாடாக சீனா உள்ளது. அது போல இலங்கையின் தற்போதைய பொருளாதார நெருக்கடியில் இந்தியா 3.5 பில்லியன் டாலர் கடனை வழங்கி உள்ளதுடன் எரிபொருள், மருந்துகள், அரிசி, பால் பவுடர் மற்றும் உணவுப் பொருட்களையும் கொடுத்து உதவி உள்ளது.

    எனினும், இந்தியாவின் பாதுகாப்புக்கு அச்சு றுத்தலை ஏற்படுத்தும் வகையில் அடுத்தடுத்து சீன உளவு கப்பல்களுக்கு இலங்கை அரசு அனுமதி வழங்கி வருகிறது. இதனால் இலங்கை - இந்தியாவுடனான உறவில் பாதிப்பை ஏற்படுத்துமா? என்ற கேள்வி எழுந்துள்ளது.

    ×