என் மலர்
நீங்கள் தேடியது "Samba Crops"
- அணை திறக்கப்பட்ட சில வாரங்களுக்கு பிறகு நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.
- தஞ்சையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு வீசி வருகிறது.
தஞ்சாவூர்:
தஞ்சை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை உள்பட காவிரி டெல்டா மாவட்டங்களில் குறுவை பாசனத்துக்காக மேட்டூர் அணை கடந்த ஜூன் மாதம் 12-ந் தேதி திறக்கப்பட்டது.
குறிப்பிட்ட தேதியில் திறக்கப்பட்டதால் டெல்டா மாவட்டங்களில் இலக்கை விஞ்சி 5 லட்சம் ஏக்கரில் குறுவை சாகுபடி செய்யப்பட்டது .
ஆனால் அணை திறக்கப்பட்ட சில வாரங்களுக்கு பிறகு நீர்மட்டம் படிப்படியாக குறைய தொடங்கியது.
இது தவிர கர்நாடக அரசு உரிய தண்ணீரை தமிழகத்திற்கு வழங்காமல் ஏமாற்றியது.
இதனால் 2.5 லட்சம் ஏக்கருக்கு மேல் குறுவை பயிர்கள் தண்ணீர் இன்றி கருகின. மேலும் போதிய நீர் இல்லாததால் கடந்த மாதம் மேட்டூர் அணை மூடப்பட்டது.
இதனால் அடுத்து சம்பா, தாளடி சாகுபடி டெல்டா மாவட்டங்களில் கேள்விக்குறியாக உள்ளது.
இருந்தாலும் பல இடங்களில் வடகிழக்கு பருவ மழையை நம்பி விவசாயிகள் சம்பா சாகுபடியை தொடங்கி விட்டனர்.
இதற்கிடையே கடந்த வாரம் வடகிழக்கு பருவ மழை தொடங்கி விட்டதாக வானிலை ஆய்வு மையம் அறிவித்தது.
இருந்தாலும் தஞ்சை உள்பட டெல்டா மாவட்டத்தில் இதுவரை எதிர்பார்த்த அளவுக்கு பெரிய அளவில் மழை பெய்யவில்லை. ஆங்காங்கே ஒரு சில இடங்களில் மட்டுமே மழை பெய்து வருகிறது.
மேலும் தஞ்சையில் கடந்த சில நாட்களாக பனிப்பொழிவு வீசி வருகிறது.
இந்நிலையில் தஞ்சாவூர் அருகே உள்ள 8 கரம்பை, ரெட்டிபாளையம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் காவிரி நீர் மற்றும் பருவ மழையை நம்பி நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்த விவசாயிகள் தற்போது தண்ணீர் இன்றி தவித்து வருகின்றனர்.
போதிய தண்ணீர் இல்லாததால் சம்பா பயிர்கள் கருகி வருவதாக வேதனைப்பட்டுள்ளனர்.
சாகுபடி செய்த பல வயல்களில் தண்ணீர் இன்றி பாலம் பாலமாக வெடித்து காட்சியளிக்கிறது.
இது குறித்து விவசாயிகள் கூறும்போது :-
ஆற்றுப் பாசனம் மற்றும் பருவமழையை நம்பி நேரடி விதைப்பு மற்றும் நடவு செய்தோம்.
மழையும் இதுவரை சரியாக பெய்யவில்லை.
ஆற்றிலும் போதிய தண்ணீர் வரவில்லை . தற்போது சம்பா சாகுபடி செய்த வயல்கள் அனைத்தும் மிகப்பெரிய பாதிப்படைந்துள்ளது.
ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் வரை செலவு செய்துள்ளோம்.
டீசல் இன்ஜின் மூலம் அருகில் இருக்கக்கூடிய தேங்கி தண்ணீரை பாய்ச்சி காப்பாற்ற முயற்சி செய்து வருகிறோம்.
இந்த நீர் போதுமானதாக இருக்காது.
இன்னும் தண்ணீர் தேவைப்படுகிறது.
இதனால் சம்பா பாதிக்கப்பட்ட வயல்களில் அரசு அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு வந்து ஆய்வு செய்து உரிய இழப்பீடு வழங்க வேண்டும்.
காவிரியில் உரிய தண்ணீரை திறந்து விட வேண்டும் என்றனர்.






