search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "revamping"

    ஊத்துக்கோட்டை அருகே சேதமடைந்துள்ள சிற்றம்பாக்கம் தடுப்பணை கரைகளை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.
    ஊத்துக்கோட்டை:

    ஊத்துக்கோட்டை அருகே உள்ள சிற்றபாக்கம் பகுதியில் 1983-ம் ஆண்டு ஆரணி ஆற்றின் குறுக்கே 480 மீட்டர் தூரத்துக்கு தடுப்பு அணை கட்டப்பட்டது. 10 அடி உயரம் கொண்ட இந்த அணையில் சேமித்து வைக்கும் தண்ணீரை தேவைப்படும்போது கிருஷ்ணா நதி கால்வாய் மூலம் பூண்டி ஏரிக்கு திறந்து விடுவது வழக்கம்.

    வெள்ளம் ஏற்பட்டால் உபரிநீர் ஆரணி ஆற்றில் பாய்ந்து செல்லும். உபரி நீர் தானாக ஆற்றில் பாய்வதால் தடுப்பு அணைக்கு ஆபத்து ஏற்படாமல் இருக்க 480 மீட்டர் தூரத்துக்கு கரைகள் அமைக்கப்பட்டது.

    கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பேய் மழைக்கு ஆரணி ஆற்றில் வரலாறு காணாத வெள்ளம் ஏற்பட்டது. இதில் தடுப்பு அணைக்கு ஒட்டி அமைக்கப்பட்ட கரைகள் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டது.

    இதையடுத்து 2016-ம் ஆண்டு ரூ.1 கோடி செலவில் பெரிய பெரிய பாறாங்கற்களை கொண்டு கரைகள் சீரமைக்கப்பட்டது.

    இந்நிலையில் கடந்த செப்டம்பர், அக்டோபர், நவம்பர் மாதங்களில் பெய்த பலத்த மழைக்கு ஆரணி ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு தடுப்பு அணை முழுவதுமாக நிரம்பியது. இதனால் உபரி நீர் ஆரணி ஆற்றில் பாய்ந்தது.

    தண்ணீர் கரை புரண்டு ஓடியதால் தடுப்பு அணைக்கு ஒட்டி உள்ள கரைகள் மீண்டும் சேதமடைந்து உள்ளன. இது இன்னும் சரி செய்யப்படாமல் உள்ளது.

    கோடை வெயில் காரணமாக தடுப்பு அணை தற்போது முழுவதும் வறண்டு காணப்படுகிறது. எனவே இப்போது கரைகளை சீர்செய்யும் பணிகளை மேற்கொள்ள வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.


    ×