என் மலர்
நீங்கள் தேடியது "Ramajayam murdered case"
- அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார்.
- சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தமிழகத்தின் முக்கிய கொலை குற்றவாளிகள், வெவ்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
செம்பட்டு:
அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் ராமஜெயம் கடந்த 2012-ம் ஆண்டு கொலை செய்யப்பட்டார். 10 ஆண்டுகள் ஆகியும் அந்த வழக்கின் குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படாத நிலையில் கடந்த 6 மாதங்களுக்கு முன் சி.பி.சி.ஐ.டி. சிறப்பு புலனாய்வு பிரிவு போலீசார் இந்த வழக்கை விசாரணை செய்ய நீதிமன்றம் உத்தரவிட்டது. அதன்படி சிறப்பு புலனாய்வு பிரிவு அதிகாரிகள் தமிழகத்தின் முக்கிய கொலை குற்றவாளிகள், வெவ்வேறு குற்றசம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என பலரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்நிலையில் அந்த வழக்கின் விசாரணை நிலை குறித்து கேட்டறிய சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகில் அக்தர் விமானம் மூலம் திருச்சி வந்தார்.
திருச்சி விமான நிலையத்தில் அவரிடம் நிருபர்கள் பேட்டி கண்டனர். அப்போது நிருபர்கள் கேட்ட கேள்விகளுக்கு அவர் அளித்த பதில்கள் வருமாறு:-
கேள்வி: ராமஜெயம் கொலை வழக்கு சிறப்பு புலனாய்வு குழுவுக்கு வந்த பிறகு ஏதேனும் முன்னேற்றம் உள்ளதா?
கேள்வி: விசாரணை சென்று கொண்டிருக்கிறது. அதன் பிறகு தான் சொல்ல முடியும்.
கேள்வி: புதிதாக உண்மை கண்டறியும் சோதனை ரவுடிகள் மீது நடத்த உள்ளதாக சொல்கிறார்களே?
பதில்: கிடையாது, விசாரணை முடிந்ததற்கு பிறகு தான் கூறுவோம்.
கேள்வி: ராமஜெயம் கொலை செய்யப்பட்டு 10 வருடம் ஆகிவிட்டது. கண்டுபிடிப்பதற்கு வாய்ப்பு உள்ளதா?
பதில்: 10 வருடங்களில் என்ன நடந்தது என்று நாங்கள் சொல்ல முடியாது. ஆனால் இந்த ஆறு மாதங்களில் என்ன செய்தோம் என்று நாங்கள் சொல்ல முடியும்.
கேள்வி: வருகிற 30-ந் தேதியுடன் ஓய்வு பெற போகிறீர்கள். அதற்கு முன் கொலையாளிகளை கண்டுபிடிக்க வாய்ப்பு உள்ளதா?
பதில்: சொல்ல முடியாது.
கேள்வி: விசாரணை பழைய முறையில் நடைபெறுகிறதா? ஏதேனும் மாற்று முறையில் நடைபெறுகிறதா?
பதில்: இப்போது சொல்ல முடியாது. விசாரணை சென்று கொண்டிருக்கிறது.
கேள்வி: விசாரணைக்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு கொடுக்கிறார்களா?
பதில்: 100 சதவீதம் ஒத்துழைக்கின்றனர்.
இவ்வாறு அவர் பதில் அளித்தார்.
இதையடுத்து அங்கிருந்து திருவெறும்பூர் போலீஸ் நிலையம் சென்ற டி.ஜி.பி ஷகீல் அக்தர் அங்கு சிறப்பு புலனாய்வு குழுவினரிடம் ஆலோசனை மேற்கொண்டார். மேலும் இந்த வழக்கின் விசாரணை நிலை எப்படி உள்ளது, வேறு யாரிடம் விசாரணை மேற்கொள்ள வேண்டும், உண்மை கண்டறியும் சோதனை யாருக்காவது மேற்கொள்ள வேண்டுமா, முதலில் யாருக்கு இந்த சோதனை செய்ய வேண்டும். என்பது குறித்து அவர் ஆலோசனை மேற்கொண்டார்.
- ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை விசாரணை செய்ததில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ள 20 சந்தேக நபர்கள் டி.ஜி.பி. ஷகில் அக்தர் முன்பு ஆஜராக உள்ளனர்.
- கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் குற்றவாளிகளின் இறுதிப் பட்டியலை சிறப்பு புலனாய்வுக் குழு தயார் செய்துள்ளதாக தெரிகிறது.
திருச்சி:
தமிழக நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை அமைச்சர் கே.என்.நேருவின் சகோதரர் தொழிலதிபர் கே.என்.ராமஜெயம், கடந்த 2012-ம் ஆண்டு அதிகாலையில் நடைபயிற்சி சென்றபோது மர்ம நபர்களால் கடத்தப்பட்டு கொடூரமாக கொலை செய்யப்பட்டார்.
அவரது உடல் திருச்சி கல்லணை சாலையில் கை, கால்கள் கட்டப்பட்ட நிலையில் கண்டுபிடிக்கப்பட்டது. இந்த வழக்கினை சி.பி.சி.ஐ.டி. மற்றும் சி.பி.ஐ. அதிகாரிகள் விசாரித்தனர். ஆனால் எந்த துப்பும் கிடைக்கவில்லை.
அதன் பின்னர் ஐகோர்ட்டு உத்தரவின் பேரில், ராமஜெயம் கொலை வழக்கை எஸ்.பி. ஜெயக்குமார் தலைமையிலான சிறப்பு புலன் விசாரணைக்குழு விசாரித்து வருகிறது. வழக்கு தொடர்பாக சந்தேகப்படும் நபர்களை பிடித்து அதிரடியாக விசாரணை நடத்தி வருகிறார்கள்.
விசாரணைக்காக அழைத்து செல்லும் நபர்களை துன்புறுத்துவதாக, சிறை கைதிகள் மனித உரிமை மையத்தின் இயக்குநர் வக்கீல் புகழேந்தி, தமிழ்நாடு மாநில மனித உரிமை ஆணையத்தில் புகார் மனு அளித்தார். அதில், இந்த குழு சட்டத்துக்கு உட்பட்டு செயல்படுகிறதா? என்பதை கண்காணித்து மனித உரிமை மீறலை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாகவும் கூறப்படுகிறது.
இதற்கிடையே தமிழக முதல்-அமைச்சரும், ராமஜெயம் கொலை வழக்கு சம்பந்தமாக விசாரணையின் போக்கு குறித்து அவ்வப்போது விசாரணை அதிகாரிகளிடம் கேட்டறிந்து வருகிறார்.
இந்த நிலையில் ராமஜெயம் கொலை வழக்கில் இதுவரை விசாரணை செய்ததில் சந்தேகத்திற்கு இடமான முறையில் உள்ள 20 சந்தேக நபர்கள் டி.ஜி.பி. ஷகில் அக்தர் முன்பு ஆஜராக உள்ளனர். அவர்களிடம் உண்மை கண்டறியும் சோதனை நடத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
ஏற்கனவே நீதிமன்றத்தின் அனுமதி பெற்றுள்ள சி.பி.சி.ஐ.டி. போலீசார் ராமஜெயத்தின் உதவியாளர்களாக வேலை பார்த்த மோகன், நந்தகுமார் ஆகியோருக்கு சி.பி.ஐ. உதவியுடன் சென்னையில் உள்ள சி.பி.ஐ. அலுவலகத்தில் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட்டது.
இந்த முறை 20 பேர் என்பதால் அவர்களிடம் சோதனைக்கு பிறகு வழக்கில் முக்கியம் திருப்பம் ஏற்பட வாய்ப்பு உள்ளது என்று எதிர்பார்க்கப்படுகிறது. கே.என்.ராமஜெயம் கொலை வழக்கில் தொடர்புடையதாக கருதப்படும் குற்றவாளிகளின் இறுதிப் பட்டியலை சிறப்பு புலனாய்வுக் குழு தயார் செய்துள்ளதாக தெரிகிறது.
சென்னையை சேர்ந்த எம்.எல்.ஏ. எம்.கே.பாலன் கடத்தல் மற்றும் கொலை வழக்கில் தொடர்புடைய, திண்டுக்கல்லை சேர்ந்த நரைமுடி கணேசன், தினேஷ், புதுக்கோட்டையை சேர்ந்த செந்தில்குமார், மோகன்ராம் உள்ளிட்ட 20 பேர் இப்பட்டியலில் இடம் பெற்றுள்ளனர். இவர்களிடம் விசாரணை நடத்த சி.பி.சி.ஐ.டி. டி.ஜி.பி. ஷகீல் அக்தர் நாளை திருச்சி வருகை தர இருக்கிறார்.
விரைவில், இவர்கள் அனைவருக்கும் உண்மை கண்டறியும் சோதனை நடத்தப்பட இருப்பதாக, சிறப்பு புலனாய்வுக் குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இந்த சோதனை சென்னை அல்லது பெங்களூருவில் நடத்தப்படலாம் எனவும் கூறப்படுகிறது. ராமஜெயம் கொலை வழக்கு சூடு பிடித்துள்ளது அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.






