search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Quality of life"

    • சிவகங்கை மாவட்ட இளைய தலைமுறையினர் அரசு திட்டங்களின் மூலம் தொழில்கள் தொடங்கி வாழ்க்கை தரத்தை மேம்படுத்த வேண்டும் என கலெக்டர் அறிவுறுத்தினார்.
    • வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் அளிக்கப்படுகிறது.

    சிவகங்கை

    சிவகங்கை மாவட்ட தொழில் மையத்தின் சார்பில் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் செயல்பாடுகள் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு நடவடிக்கைகள் குறித்து கலெக்டர் மதுசூதன் ரெட்டி காரைக்குடி வட்டம், அரியக்குடியில் செயல்பட்டு வரும் தொழில் நிறுவனங்களில் நேரில் ஆய்வு செய்தார். பின்னர் அவர் பேசியதாவது:-

    புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டத்தின் கீழ் பிளஸ்-2, பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு மற்றும் தொழிற்கல்வி தேர்ச்சி பெற்ற வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு ரூ.10 லட்சம் முதல் ரூ.5 கோடி வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் அளிக்கப்படுகிறது.

    வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கான வேலைவாய்ப்பு உருவாக்கும் திட்டத்தின் கீழ் 8-ம் வகுப்பு தேர்ச்சி பெற்ற வேலை வாய்ப்பற்ற இளைஞர்களுக்கு வியாபாரம், சேவை தொழில்கள் மற்றும் உற்பத்தி தொழில்கள் தொடங்க முறையே ரூ.5 லட்சம் மற்றும் ரூ.15 லட்சம் வரை 25 சதவீத மானியத்துடன் கூடிய கடனுதவியும் வழங்கி முதல்-அமைச்சர் தலைமையிலான தமிழக அரசு வேலைவாய்ப்பற்ற இளைஞர்களுக்கு தொழில் முனைவோர்களாக மாற்றி ஒரு வரலாற்று சாதனையை நிகழ்த்தி வருகிறது.

    கலைப்பாடுகளுடன் கூடிய கைவினைப் பொருட்களை தயாரிப்பதற்கான கலையினை அடுத்த தலைமுறையினருக்கு எடுத்து செல்லும் வகையில், ஆர்வமுள்ளவர்களை கண்டறிந்து, அவர்களுக்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படுவதற்கு திட்டமிடப்பட்டது. அதன்படி, காரைக்குடி வட்டம், அரியக்குடியில் 25-க்கும் மேற்பட்டவர்கள் தனித்தனியாக வெண்கல குத்துவிளக்கு, கடவுள் உருவங்கள், மணிகள், திருவாட்சி மற்றும் பிற பூஜை பொருட்களை உற்பத்தி செய்யும் பணியினை மேற்கொண்டு வரும் உற்பத்தியாளர்கள், அவர்கள் மேற்கொண்டு வரும் தொழிலை மேம்படுத்தும் வகையில், அரசால் வழங்கப்பட்டு வரும் மானியத்துடன் கூடிய கடனுதவிகள் குறித்தும் எடுத்துரைக்கப்பட்டுள்ளது.

    இந்த பகுதியில் வெண்கல உலோக உற்பத்தியா ளர்களுக்கான குழுமம் ஒன்றை அமைத்து தருவதற்கு கோரிக்கை வைத்துள்ளதன் அடிப்படையில் அதற்கான இடத்தையும் தேர்வு செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.

    இதனைக் கருத்தில் கொண்டு, இளைய தலை முறையினர்கள் இதுபோன்று அரசால் செயல்படுத்தப்பட்டு வரும் திட்டங்களின் மூலம் பல்வேறு தொழில் நிறுவனங்கள் தொடங்கி, பயன்பெற்று தங்களது வாழ்க்கை தரத்தை மேம்படுத்தி கொள்ள வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    மாவட்ட தொழில் மைய பொது மேலாளர் கண்ணன், சிவகங்கை, புள்ளி விவர ஆய்வாளர் நாகராஜன், சிவகங்கை தொழில் கூட்டுறவு அலுவலர் ருத்ரமூர்த்தி, தொழில் கூட்டுறவு மேற்பார்வையாளர் முத்துக்குமார், காரைக்குடி வட்டாட்சியர் தங்கமணி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×