search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Punjab national bank cheating"

    பஞ்சாப் நேஷனல் வங்கியில் ரூ.13,000 கோடி கடன் வாங்கி விட்டு லண்டனுக்கு தப்பிய ஓடிய நிரவ் மோடிக்கு சொந்தமான 11 கார்களை ஏலம் விட அமலாக்கத்துறையினர் முடிவு செய்துள்ளனர். #NiravModi
    மும்பை:

    பிரபல தொழில் அதிபர்கள் நிரவ்மோடி, மொகுல் சோக்சி இருவரும் பஞ்சாப் நேர‌ஷனல் வங்கி உள்பட பல வங்கிகளில் கடன் வாங்கி விட்டு வெளிநாட்டுக்கு தப்பி ஓடி விட்டனர்.

    அவர்கள் இருவரும் போலி ஆவணங்கள் மூலம் ரூ.13 ஆயிரத்து 570 கோடி அளவுக்கு கடன் வாங்கி விட்டு திருப்பிக் கொடுக்கவில்லை.

    இதையடுத்து நிரவ்மோடி, மெகுல் சோக்சி இருவரின் நவீன பங்களாக்கள் முடக்கப்பட்டன. மேலும் அவர்களது அசையும், அசையா சொத்துக்களையும் அமலாக்கத்துறையினர் முடக்கி உள்ளனர்.

    அந்த வகையில் நிரவ் மோடியின் 11 சொகுசு கார்கள் முடக்கப்பட்டன. மெகுல் சோக்சியின் 2 சொகுசு கார்கள் கைப்பற்றப்பட்டன. இந்த சொத்துக்களை விற்று அமலாக்கத்துறையினர் பணம் திரும்ப பெற்று வருகிறார்கள்.

    இந்த நிலையில் நிரவ் மோடி, மெகுல் சோக்சி இருவரின் 13 சொகுசு கார்களையும் ஏலம் விட்டு பணம் திரட்ட முடிவு செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 13 சொகுசு கார்களும் ஏலத்துக்கு கொண்டு வரப்பட்டுள்ளன.

    அரசின் எம்.எஸ்.டி.சி. நிறுவனம் இதற்கான அறிவிப்பை இணையதளத்தில் வெளியிட்டுள்ளது. ஒவ்வொரு காரின் ரகம் மற்றும் அதன் விலையும் அதில் குறிப்பிட்டுள்ளது. குறிப்பிட்ட தினங்களுக்குள் அதிக விலையை பதிவு செய்பவர்களுக்கு அந்த கார்கள் ஏலத்தின் அடிப்படையில் கிடைக்கும்.

    13 சொகுசு கார்கள் மூலம் மொத்தம் ரூ.3.29 கோடி திரட்ட முடிவு செய்யப்பட்டுள்ளது. ஏலம் சூடு பிடித்தால் கூடுதல் தொகையை திரட்ட முடியும் என்று எதிர்பார்க்கிறார்கள்.

    நிரவ் மோடியின் பெயிண்டிங்குகள் சமீபத்தில் ஏலம் விடப்பட்டன. இதன் மூலம் வருமான வரித்துறைக்கு ரூ.54 கோடி கிடைத்தது குறிப்பிடத்தக்கது.

    அடுத்தக் கட்டமாக நிரவ் மோடியின் சொகுசு பங்களாக்களும் ஏலத்தில் விற்பனை செய்யப்பட உள்ளன. #NiravModi
    பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று லண்டனுக்கு தப்பிய நிரவ்மோடிக்கு அங்கு 2 சொகுசு வீடுகள் இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. #NiravModi
    லண்டன்:

    மும்பையை சேர்ந்த வைர வியாபாரி நிரவ்மோடி (48) தனது உறவினர் மெகுல் சோக்சியுடன் சேர்ந்து பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் ரூ.13 ஆயிரம் கோடி கடன்பெற்று வெளிநாட்டுக்கு தப்பி ஓடினர்.

    இதற்கிடையே லண்டனில் தலைமறைவாக இருந்த நிரவ் மோடி இங்கிலாந்து போலீசாரால் கைது செய்யப்பட்டார். தற்போது கைதிகள் நெருக்கடி மிகுந்த வாண்ட்ஸ் வோர்த் சிறையில் அடைக்கப்பட்டார். அவரது ஜாமீன் மனு நிராகரிக்கப்பட்டது.

    இந்தநிலையில் இந்தியாவுக்கு நாடுகடத்துதல் தொடர்பாக வழக்கு இன்று லண்டன் கோர்ட்டில் நடைபெற உள்ளது. அப்போது அவர் மீண்டும் ஜாமீன் கேட்டு மனுதாக்கல் செய்வார் என எதிர் பார்க்கப்படுகிறது. அதற்கான ஏற்பாடுகளில் அவரது வக்கீல்கள் தயாராக உள்ளனர்.

    இந்த மனுவில் அதற்கான ஜாமீன் தொகையை அதிகரித்து குறிப்பிட நிரவ் மோடியின் வக்கீல் முடிவு செய்துள்ளார். நிரவ்மோடி லண்டனில் ரூ.80 கோடி மதிப்புள்ள அடுக்குமாடி சொகுசு வீட்டில் வசிப்பதாக தகவல் வெளியாகி இருந்தது.

    அதுமட்டுமின்றி அவருக்கு இதுபோன்று மேலும் ஒரு அடுக்குமாடி குடியிருப்பு இருப்பதும் தெரியவந்துள்ளது. இந்த 2 வீடுகளையும் வேறு நபர்களுக்கு அவர் விற்பனை செய்து இருக்கிறார். தனது பாதுகாப்பு கருதி வீடுகளை விற்றது போன்ற நடவடிக்கைகளை அவர் மேற்கொண்டுள்ளதாக நிபுணர்கள் கருதுகின்றனர். இந்த 2 வீடுகளும் நிரவ் மோடிக்கு சொந்தமானவை என நம்பத் தகுந்த வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.  #NiravModi

    பண மோசடி வழக்கில் தேடப்பட்டு வந்த நிரவ் மோடி லண்டனில் பிளாஸ்டிக் சர்ஜரி செய்து முகத்தை மாற்றி தப்பிக்க திட்டமிட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. #NiravModi
    சென்னை:

    பிரபல வைர வியாபாரி நிரவ் மோடி பொதுத்துறை வங்கியான பஞ்சாப் நே‌ஷனல் வங்கியில் சட்டவிரோத பரிவர்த்தனை மூலம் 13,000 கோடி ரூபாய்க்கும் அதிகமாக மோசடி செய்துவிட்டு வெளிநாடு தப்பி சென்றார்.

    இதுதொடர்பாக சிபிஐ வழக்கு பதிவு செய்தது. சிபிஐ சிறப்பு நீதிமன்றம் அவருக்கு எதிராக ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்டு பிறப்பித்தது.

    நிரவ் மோடியைக் கண்டுபிடிக்க சர்வதேச காவல்துறையான இன்டர்போலின் உதவியை சிபிஐ நாடியது. கடந்த ஆண்டு இன்டர்போல் அமைப்பும் அவருக்கு எதிராக ‘ரெட் கார்னர்’ நோட்டீஸ் வெளியிட்டது. இந்நிலையில் இங்கிலாந்தைச் சேர்ந்த ‘தி டெலிகிராப்’ நாளிதழ் 2 நாட்களுக்கு முன்னர் ஒரு வீடியோவை வெளியிட்டது.

    அந்த வீடியோவில் லண்டன் தெருவில் நடந்து சென்றுகொண்டிருக்கும் நிரவ் மோடி, முழுக்க முழுக்க தனது தோற்றத்தை மாற்றியிருந்தார். நிரவ் மோடி லண்டனில் சுதந்திரமாக சுற்றித்திரிவதை மத்திய அரசு வேடிக்கை பார்ப்பதாக விமர்சனங்கள் எழுந்தன. தேர்தல் நேரம் என்பதால், எதிர்க்கட்சிகளும் இந்த விவகாரத்தை கிளப்பின. இதனால் மத்திய அரசுக்கு நெருக்கடி முற்றியது.

    இதையடுத்து நிரவ் மோடியை நாடு கடத்திக் கொண்டுவருவது தொடர்பாக இந்திய அமலாக்கத்துறை சார்பில் இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்திடம் மனு அளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து அவரை லண்டன் போலீசார் நேற்று முன் தினம் கைதுசெய்தனர்.

    நிரவ் மோடி லண்டனில் உள்ள மெட்ரோ வங்கியில் கணக்கு தொடங்க வந்தபோது வங்கி ஊழியர் போலீசாருக்கு தெரிவித்த தகவலையடுத்து போலீசார் அவரை கைதுசெய்து கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.

    கோர்ட்டில் நிரவ் மோடி மீதான பண மோசடி குற்றச்சாட்டு நிரூபிக்கப்பட்டால், அவரை நாடு கடத்த இங்கிலாந்து அரசு உத்தரவிடும். நிரவ்மோடி பிடிபட்ட போது, அவரிடம் பல நாடுகளின் பாஸ்போர்ட்டுகள் இருந்ததாகவும், ஆனால் அவற்றில் பெரும்பாலானவை காலாவதியாகி விட்டதாகவும், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், சிங்கப்பூர் மற்றும் ஹாங்காங் ஆகிய 3 நாடுகளுக்கு செல்லத்தக்க பாஸ்போர்ட்டுகள் இருந்ததாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

    அவரது இந்திய பாஸ்போர்ட் ஏற்கெனவே ரத்துசெய்யப்பட்டுள்ள நிலையில், அவர் தனது பணபலம் மூலம் இந்த பாஸ்போர்ட்டுகளை பெற்று இருப்பது தெரியவந்துள்ளது.

    நிரவ் மோடி தான் கைதாவதை தவிர்ப்பதற்காக பிளாஸ்டிக் சர்ஜரி செய்து பசிபிக் பெருங்கடலில் உள்ள வனாது தீவில் செட்டிலாக திட்டமிட்டிருந்ததாகவும் இதற்காக அவர் வனாது நாட்டு குடியுரிமை கோரி விண்ணப்பித்திருப்பதும் தெரியவந்துள்ளது.

    இந்த வனாது தீவு ஆஸ்திரேலியாவிலிருந்து 1,750 கி.மீ தொலைவில் உள்ளது. அதுமட்டுமல்லாது சிங்கப்பூரில் நிரந்தர குடியுரிமை பெறுவதற்காக லண்டனில் பெரிய சட்ட ஆலோசனை நிறுவனங்களின் உதவியை அவர் நாடி இருப்பதும் தெரியவந்துள்ளது. ஆனால், கைதுசெய்யப்பட்டதன் மூலம் அத்தனை திட்டங்களும் பலிக்காமல் போய்விட்டன.

    நிரவ்மோடி கைதுசெய்யப்பட்டாலும் உடனே இந்தியா கொண்டு வருவதில் சிக்கல்கள் உள்ளன. லண்டன் கோர்ட்டில் அவர் மீதான வழக்கு விசாரணை 6 முதல் 9 மாதங்கள் வரை நடைபெறலாம். விசாரணை முடிவடைந்த பின்னர் தீர்ப்பை நீதிபதி 2 மாதங்கள் வரை ஒத்திவைக்கலாம். அப்போதுதான் அவரை நாடு கடத்துவது தொடர்பாக முடிவு எடுக்க இங்கிலாந்து உள்துறை அமைச்சகத்துக்கு வழக்கு விசாரணை குறித்த தகவலை நீதிபதி தெரிவிப்பார் என்று லண்டன் கோர்ட்டு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

    அதே சமயம் நிரவ் மோடிக்கு எதிரான ஆதாரங்கள் வலுவாக இருப்பதால் குற்றத்தை நிரூபித்து, அவரை 6 மாதத்துக்குள் இந்தியாவுக்கு நாடு கடத்திக்கொண்டு வந்துவிடலாம் என்று சிபிஐ மற்றும் அமலாக்கத்துறை அதிகாரிகள் தெரிவிக்கின்றனர்.



    நிரவ் மோடி கைதுசெய்யப்பட்டதற்கு பிரதமர் மோடி காரணமில்லை என்றும், லண்டன் நிருபரின் சமீபத்திய பேட்டியே காரணம் என்றும் கூறியுள்ள திரிணாமுல் காங்கிரஸ் தலைவர் மம்தா பானர்ஜி, பாராளுமன்ற தேர்தல் நேரத்தில் நிரவ் மோடியின் கைது போன்ற பல நடவடிக்கைகளை பா.ஜனதா அரசு நடத்தும். ஆனால், அவை மக்களிடம் பலிக்காது என்று தெரிவித்துள்ளார்.

    காங்கிரஸ், இந்திய கம்யூனிஸ்டு உள்ளிட்ட மற்ற எதிர்க்கட்சிகளும் இதை மோடி அரசின் தேர்தல் ஸ்டன்ட் என்றே விமர்சித்துள்ளன. #NiravModi
    ×