search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "private alcohol shop"

    புதுவை அருகே மதுக்கடை மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவம் குறித்து கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்த போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
    திருக்கனூர்:

    புதுவை அருகே திருக்கனூர் - விழுப்புரம் மெயின் ரோட்டில் தமிழக எல்லையையொட்டி தனியார் மதுபான கடை உள்ளது. இந்த மதுபான கடையில் திருக்கனூர் மற்றும் அருகில் உள்ள தமிழக பகுதியை சேர்ந்தவர்கள் தினந்தோறும் ஏராளமானோர் மது அருந்துவது வழக்கம்.

    இந்த நிலையில் நேற்று இரவு 10.30 மணிக்கு வியாபாரம் முடிந்ததும் மதுக்கடையை கேஷியர் பூட்டிவிட்டு சென்றார். அவர் கடையை பூட்டிவிட்டு சென்ற சிறிது நேரத்தில் மோட்டார் சைக்கிளில் வந்த 2 மர்ம நபர்கள் 2 நாட்டு வெடிகுண்டுகளை மதுக்கடை மீது வீசினர். உடனே அந்த மர்ம நபர்கள் அங்கிருந்து தப்பி சென்று விட்டனர்.

    அந்த வெடிகுண்டு கடையின் ஷெட்டரில் விழுந்து பயங்கர சத்தத்துடன் வெடித்தது. அப்போது மதுக்கடையில் யாரும் இல்லாததால் உயிர் சேதம் ஏதும் ஏற்படவில்லை. கடையின் ஷெட்டர் மட்டுமே சேதமானது.

    இதுபற்றி தகவல் அறிந்ததும் திருக்கனூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் வேலு மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று விசாரணை நடத்தினர்.

    பின்னர் மதுக்கடையில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்தனர். அப்போது வெடிகுண்டு வீசியவர்களின் அடையாளங்கள் பதிவாகி இருந்தன. இதன் மூலம் வெடிகுண்டு வீசிய நபர்கள் யார் - எந்த ஊர் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

    மாமூல் தர மறுத்ததால் ஆத்திரத்தில் ரவுடிகள் மதுக்கடை மீது வெடிகுண்டு வீசினார்களா? அல்லது வேறு ஏதேனும் காரணமா? என்று தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள்.

    மதுக்கடை மீது வெடிகுண்டு வீசப்பட்ட சம்பவத்தால் திருக்கனூர் பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

    வெடிகுண்டு வீசப்பட்ட மதுக்கடையில் கடந்த 2 மாதங்களுக்கு முன்பு தான் தமிழக பகுதியான ராதாபுரத்தை சேர்ந்த டிரைவர் பலராமன் என்பவர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.



    ×