search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "pm mod"

    • லடாக்கில் 2020-ம் ஆண்டு மே மாதம் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது.
    • இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர்.

    புதுடெல்லி :

    லடாக்கில் கடந்த 2020-ம் ஆண்டு மே மாதம் இந்திய பகுதிக்குள் சீன ராணுவம் ஊடுருவ முயன்றது. இதனால் இரு நாட்டு ராணுவ வீரர்களுக்கு இடையே மோதல் ஏற்பட்டது.

    இதன் தொடர்ச்சியாக அங்குள்ள கல்வான் பள்ளத்தாக்கு பகுதியில் ஜூன் 15-ந்தேதி இருநாட்டு வீரர்களுக்கு இடையே மோதல் நிகழ்ந்தது. இதில் இந்திய தரப்பில் 20 வீரர்கள் உயிரிழந்தனர். சீன ராணுவத்திலும் பலத்த உயிரிழப்பு நிகழ்ந்தது.

    இதைத்தொடர்ந்து அங்கு சர்ச்சைக்குரிய பல்வேறு பகுதிகளில் இரு நாடுகளும் படைகளையும், தளவாடங்களையும் குவித்தன. இதனால் லடாக் எல்லையில் தொடர்ந்து பதற்றம் நிலவி வந்தது.

    எனவே அங்கு அமைதியை ஏற்படுத்துவதற்காக படை விலக்கல் குறித்து இரு நாடுகளும் அடுத்தடுத்து பேச்சுவார்த்தையில் ஈடுபட்டன. குறிப்பாக இரு நாட்டு ராணுவ அதிகாரிகள் மட்டத்தில் 15-க்கும் மேற்பட்ட சுற்று பேச்சுவார்த்தைகள் நடந்தன.

    இதன் பலனாக பங்கோங் ஏரிக்கரைகள் மற்றும் கோக்ரா உள்ளிட்ட சர்ச்சைக்குரிய இடங்களில் இருந்து இருதரப்பும் படைகளை திரும்ப பெற்றன. இதில் கடைசியாக கடந்த 8-ந்தேதி முதல் கோக்ராவின் 15-வது கண்காணிப்பு முனையில் இருந்து இரு நாடுகளும் படைகளை விலக்கிக்கொண்டன.

    இந்த நிலையில் லடாக்கில் பெருமளவிலான இந்திய பகுதிகளை சீனா ஆக்கிரமித்து இருப்பதாக காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி குற்றம் சாட்டியுள்ளார்.

    இது தொடர்பாக அவர் தனது டுவிட்டர் தளத்தில், 'லடாக் எல்லையில் 2020 ஏப்ரல் மாதம் இருந்த நிலையை திரும்ப கொண்டு வரவேண்டும் என்ற இந்தியாவின் கோரிக்கையை சீனா ஏற்க மறுத்து விட்டது. அங்கு 1,000 சதுர கி.மீ. இந்திய பகுதிகளை ஒரு சண்டை கூட போடாமல் சீனாவுக்கு பிரதமர் மோடி தாரை வார்த்து விட்டார்' என குறிப்பிட்டு இருந்தார்.

    சீனா ஆக்கிரமித்துள்ள இந்த பகுதிகளை எப்படி மீட்கப்படும் என்பதை மத்திய அரசால் நாட்டு மக்களுக்கு விளக்க முடியுமா? என அவர் கேள்வியும் எழுப்பி உள்ளார்.

    லடாக்கில் 1,000 சதுர கி.மீ. பகுதிகளை சீனா ஆக்கிரமித்து இருப்பதாக ராகுல் காந்தி கூறியுள்ள குற்றச்சாட்டு அதிர்வலைகளை கிளப்பி இருக்கிறது.

    ×