search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Paneer Selvam"

    பாராளுமன்ற தேர்தலோடு தி.மு.க. காணாமல் போகும் என்று சேலத்தில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து பிரசாரம் செய்தபோது துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் கூறினார். #LokSabhaElections2019

    சேலம்:

    சேலம் பாராளுமன்ற தொகுதியில் அ.தி.மு.க. சார்பில் போட்டியிடும் வேட்பாளர் கே.ஆர்.எஸ்.சரவணனை ஆதரித்து நேற்று இரவு அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளரும், தமிழக துணை முதல்-அமைச்சருமான ஓ.பன்னீர்செல்வம் சேலம் தாதகாப்பட்டி, பட்டைக்கோவில், வின்சென்ட் பகுதியில் திறந்த வேனில் நின்று தேர்தல் பிரசாரம் செய்தார்.

    பாராளுமன்ற தேர்தலில் நல்லவர்களாக நாம் இணைந்து தர்மத்தை நிலை நாட்டக்கூடிய கட்சிகள் ஒரு அணியாகவும், அதர்மம் கொண்ட தி.மு.க. தலைமையில் மற்றொரு அணியும் தேர்தலை சந்திக்க உள்ளன. மத்தியில் 10 ஆண்டுகள் நடந்த காங்கிரஸ் ஆட்சியில் தி.மு.க. அங்கம் வகித்தபோது, 9 பேர் மந்திரிகளாக இருந்தார்கள். அவர்கள் உருப்படியாக தமிழகத்திற்கு தேவையான எந்தஒரு தொலை நோக்கு திட்டத்தையும் கொண்டுவரவில்லை. தமிழக விவசாயிகளின் ஜீவாதாரமாக விளங்கக்கூடிய காவிரி பிரச்சினையும் தீர்க்கவில்லை.

    அதாவது 17 ஆண்டுகளுக்கு பிறகு தி.மு.க.-காங்கிரஸ் ஆட்சி அதிகாரத்தில் இருந்தபோது, காவிரி நடுவர் மன்ற இடைக்கால தீர்ப்பு வெளியானது. அப்போது, எதிர்க்கட்சி தலைவியாக இருந்த ஜெயலலிதா, காவிரி நடுவர் மன்ற தீர்ப்பை மத்திய அரசின் அரசிதழிலில் வெளியிட நடவடிக்கை எடுக்குமாறு முதல்-அமைச்சர் கருணாநிதியை வலியுறுத்தினார்.


    ஆனால் அவர்கள் எதையும் செய்யவில்லை. அதன்பிறகு 2011-ல் நடந்த சட்டசபை தேர்தலில் தி.மு.க.வை தோற்கடித்து ஜெயலலிதா முதல்-அமைச்சராக பொறுப்பேற்றார். அவர் எடுத்த சட்டப்போராட்டத்தின் விளைவாக தற்போது அ.தி.மு.க. ஆட்சியில் தான் காவிரி மேலாண்மை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளது. இதனால் யார் ஆட்சிக்கு வந்தால் மக்களுக்கு நல்லது செய்வார்கள்? என்று மக்களுக்கு நன்றாக தெரியும்.

    இந்த தேர்தலோடு அ.தி.மு.க. காணாமல் போகும் என்று தி.மு.க. தலைவர் மு.க.ஸ்டாலின் கூறி வருகிறார். அப்படி என்றால் இவர்கள் ஆட்சி செய்வார்களா?. பிரியாணி, பரோட்டா கடையில் சாப்பிட்டுவிட்டு காசு கொடுக்காமல் வன்முறையில் தி.மு.க.வினர் ஈடுபட்டு வருகிறார்கள். இதற்கு முன்பெல்லாம் ஓட்டலில் சாப்பிட்டுவிட்டு பணம் கொடுத்து வந்தோம். ஆனால் இப்போது அப்படி இல்லை. முதலில் காசு கொடுத்துவிட்டு அதன்பிறகு சாப்பிடுங்கள் என்று கூறும் நிலைமை வந்துவிட்டது.

    இவர்கள் கையில் ஆட்சி இருந்தால் எப்படி இருக்கும் என்று நீங்கள் சிந்தித்து பாருங்கள். அ.தி.மு.க.வை எந்த கொம்பனாலும் அசைக்க முடியாது. ஏன்? சுனாமி, புயல், பூகம்பம் வந்தாலும் யாராலும் ஒன்றும் செய்யமுடியாது. இந்த பாராளுமன்ற தேர்தலோடு தி.மு.க. காணாமல் போய்விடும். ஜெயலலிதா வழியில் நடக்கும் அ.தி.மு.க. ஆட்சியில் மக்களுக்கு தேவையான பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டு வருகிறது.

    பொங்கல் பண்டிகைக்கு ரூ.1,000 வழங்கியதால் ஏழை, எளிய மக்கள் மட்டுமின்றி அனைவரும் பொங்கலை மகிழ்ச்சியோடு கொண்டாடினார்கள். அதேசமயம் தமிழகம் வறட்சியால் பாதிக்கப்பட்டுள்ளதால் அதனை கருத்தில் கொண்டு வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள 60 லட்சம் ஏழை குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்.

    ஆனால் தேர்தல் ஆணையத்திடம் தி.மு.க.வினர் புகார் செய்ததால் தற்போது அது நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இருந்தபோதிலும், தேர்தல் முடிந்தவுடன் நிச்சயம் 60 லட்சம் குடும்பங்களுக்கு ரூ.2 ஆயிரம் வழங்கப்படும் என தெரிவித்துக்கொள்கிறேன்.

    நாடும், நாட்டு மக்களும் நல்லா இருக்க வேண்டும் என்பதற்காக அ.தி.மு.க. தலைமையில் மெகா கூட்டணி அமைத்துள்ளோம்.

    இவ்வாறு ஓ.பன்னீர்செல்வம் பேசினார்.  #LokSabhaElections2019

    ×