search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "north state youth murder"

    ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டே‌ஷன் எல்லைக்குட்பட்ட ஒன்னல்வாடியில் குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று நினைத்து வடமாநில வாலிபர் படுகொலை செய்யப்பட்டார்.
    ஓசூர்:

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பல்வேறு இடங்களில் வட மாநிலத்தை சேர்ந்தவர்கள் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். குறிப்பாக ஓசூர், தேன்கனிக்கோட்டை மற்றும் சூளகிரி பகுதியில் தங்கியிருந்து, அங்குள்ள தொழிற்சாலைகளில் பணியாற்றி வருகின்றனர்.

    வடமாநிலத்தில் இருந்து, குழந்தை கடத்தல் கும்பல் தமிழகத்திற்குள் புகுந்துள்ளதாக, சமூக வலைதளங்களில் வதந்தி பரவியதையடுத்து, வடமாநிலத்தை சேர்ந்தவர்கள் மீது பொதுமக்கள் தாக்குதல் நடத்தும் சம்பவங்கள் அரங்கேறி வருகிறது.

    கிருஷ்ணகிரி மாவட்டத்தில், பகல் மற்றும் இரவு நேரங்களில் பணிக்கு சென்றுவிட்டு வீடு திரும்பும் வடமாநில தொழிலாளர்கள், தமிழில் பேச தெரியாததால், பொதுமக்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்ல முடியாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.

    நேற்று மாலை ஓசூர் டவுன் போலீஸ் ஸ்டே‌ஷன் எல்லைக்குட்பட்ட ஒன்னல்வாடியில், சுமார் 35 வயது மதிக்கத்தக்க வடமாநில வாலிபர் ஒருவரை குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவர் என்று நினைத்து, அந்த பகுதி மக்கள் சரமாரி தாக்கினர். இதில் வாயிலும், மூக்கிலும் ரத்தம் வழிந்த நிலையில் மயங்கி சரிந்த அந்த நபரை அங்கிருந்த சிலர் ஆம்புலன்சில் ஏற்றிச்சென்று ஓசூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர்.

    பின்னர், ஓசூர் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அந்த வாலிபர், சிறிது நேரத்தில் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின்பேரில், ஓசூர் டவுன் போலீஸ் இன்ஸ்பெக்டர் ராஜா சோமசுந்தரம் விரைந்து சென்று விசாரித்தார்.

    இதில், நேற்று மாலை ஒன்னல்வாடி பகுதியில் நடந்து வந்து கொண்டிருந்த அந்த நபர், குழந்தை கடத்தல் கும்பலை சேர்ந்தவராக இருக்கலாம் என்ற சந்தேகத்தின் பேரில், வாலிபர்கள் சிலர் அவரிடம் விசாரித்துள்ளனர். ஆனால், அந்த நபருக்கு தமிழ், தெலுங்கு, கன்னடம் என்று எந்த மொழியும் தெரியாததால், தன்னிடம் கேட்ட எந்த கேள்விக்கும் அவரால் பதிலளிக்க முடியவில்லை. இதனால், அவர் குழந்தைகளை கடத்த வந்தவர் என்று தாங்களாகவே முடிவு செய்து கொண்ட மக்கள், அவரை பிடித்து சரமாரியாக அடித்து உதைத்துள்ளனர். இதில் படுகாயமடைந்து சுருண்டு விழுந்த அவர், தீவிர சிகிச்சை பலனின்றி மருத்துவமனையில் உயிரிழந்தது தெரியவந்தது.

    இதையடுத்து, அவரது பிணத்தை பிரேத பரிசோதனைக்காக ஓசூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்த போலீசார், அவர் யார் என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். இன்று காலை வரை அவரை போலீசாரால் அடையாளம் காணமுடியவில்லை. இதனால் போலீசார் அவரது பிணத்தை புகைப்படமாக எடுத்து ஓசூரில் உள்ள தனியார் தொழிற்சாலை காவலாளிகளிடம் காட்டி அவர் யார் என்று விசாரித்து வருகிறார்கள். கொலை செய்யப்பட்ட வாலிபருடன் மேலும் 2 வடமாநில வாலிபர்கள் வந்துள்ளனர். அவர்களையும் பொதுமக்கள் தாக்க ஆரம்பித்த உடன் அவர்கள் 2 பேரும் தப்பியோடி விட்டனர். அவர்கள் பிடிபட்டால் தான் கொலை செய்யப்பட்ட வாலிபர் யார் என்று தெரியவரும்.

    இந்த நிலையில் வட மாநில வாலிபரை அடித்து கொலை செய்தது யார் என்பது குறித்து ஒன்னல்வாடியில் இன்று போலீசார் விசாரணை நடத்தி 5 பேரை பிடித்தனர். அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரித்து வருகிறார்கள்.

    இந்த கொலைக்கு முக்கிய காரணமாக இருந்த அதே கிராமத்தை சேர்ந்த ராஜப்பா மகன் மூர்த்தி (25) என்பவர் தலைமறைவாகி விட்டார். அவரை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. அவரது செல்போன் மூலம் அவரது இருப்பிடத்தை கண்டுபிடித்து அவரை கைது செய்யும் நடவடிக்கையில் போலீசார் இறங்கி உள்ளனர்.

    குழந்தை கடத்தல் கும்பல் என நினைத்து, வடமாநில மாநிலத்தவர்கள் மீது தாக்குதலில் ஈடுபடுவோர் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி. எச்சரிக்கை விடுத்திருந்த நிலையில், வட மாநில வாலிபர் அடித்து கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. #Tamilnews
    ×