search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "New Moon Festival"

    • மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் அமாவாசை விழாவையொட்டி முன்னேற்பாடு பணிகள் குறித்து ஆலோசனை நடைபெற்றது.
    • சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவக்குழு மற்றும் 108 வாகனங்கள் கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.

    விழுப்புரம்:

    விழுப்புரம் மாவட்டகலெக்டர் அலுவலக கூட்டரங்கில், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் நடைபெறும் அமாவாசை திருவிழாவினை முன்னிட்டு, திருக்கோவிலுக்கு வரும் பக்தர்களுக்கு பாதுகாப்பு மற்றும் அடிப்படை வசதிகள் செய்து தருவது குறித்து, முன்னேற்பாடு பணிகள் தொடர்பான ஆலோசனைக் கூட்டம் மாவட்ட கலெக்டர் மோகன் தலைமையில் நடைபெற்றது.

    கூட்டத்தில், மாவட்ட கலெக்டர் பேசியதாவது:-

    மேல்மலையனூர் அங்காளம்மன் கோவிலில் வருகிற 28-ந் தேதி அமாவாசை முன்னிட்டு, பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் சாமி தரிசனம் மேற்கொள்ள ஏதுவாக வசதிகள் செய்திடவும், குடிநீர் வசதிகள் தற்காலிக கழிவறைகள் ஏற்படுத்தி தர வேண்டும் என அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார்.

    அதேபோல் இந்து சமய அறநிலையத்துறை மூலம் கோவிலின் பாதுகாப்பு நலன் கருதி கண்காணிப்புக் கேமராக்கள் பொருத்தப்பட்டு, அமாவாசை தினங்களில் கோவில் அலுவலகம் மற்றும் புறக்காவல் நிலைங்களில் சி.சி.டி.வி. மூலம் கண்காணிக்கப்பட வேண்டும்.

    மேலும் காவல்துறையின் பக்தர்களுக்கு உரிய பாதுகாப்பு வழங்கிட நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். சுகாதாரத்துறையின் மூலம் மருத்துவக்குழு மற்றும் 108 வாகனங்கள் கோவில் வளாகத்தில் தயார் நிலையில் இருக்க வேண்டும்.உணவு கட்டுப்பாட்டுத்துறையின் மூலம் கோவில் வளாகத்தில் செயல்பட்டு வரும் கடைகளில் உள்ள பொருட்களின் காலாவதிப் பொருட்களை கண்டறிந்து அகற்ற வேண்டும். தீயணைப்புத்துறையின் மூலம், கோவில் வளாகத்தில் தீ தடுப்பு உபகரணங்கள் மற்றும் தீயணைப்பு வாகனங்கள் தயார் நிலையில் இருந்திட வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார். இந்த ஆலோசனைக்கூட்டத்தில், மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா, மாவட்ட வருவாய் அலுவலர் ராஜசேகரன், திண்டிவனம் சார் ஆட்சியர் அமித், இந்து சமய அறநிலையத்துறை அலுவலர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×