search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "new assembly"

    வல்லபாய் பட்டேலின் சிலையின் உயரத்தை விட அதிக உயரமாக இருக்கும் வகையில் ஆந்திர சட்டசபையை கட்ட முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு திட்டமிட்டுள்ளார். #ChandrababuNaidu #APAssembly
    அமராவதி:

    குஜராத் மாநிலத்தில் 182 மீட்டர் உயரத்துக்கு சர்தார் வல்லபாய் பட்டேல் சிலை அமைக்கப்பட்டு சமீபத்தில் திறக்கப்பட்டது. இதுதான் உலகத்திலேயே உயரமான சிலை ஆகும்.

    பிரதமர் நரேந்திர மோடி குஜராத் முதல்-மந்திரியாக இருந்தபோது இதற்கான கட்டுமான திட்டத்தை உருவாக்கினார். அவரது முயற்சியின் காரணமாக இந்த சிலை நிறுவப்பட்டது.

    இப்போது இதைவிட உயரமான சிலை மற்றும் கட்டுமானங்களை அமைப்பதற்கு பலரும் போட்டி போடுகிறார்கள்.

    அயோத்தியில் ராமருக்கு 201 மீட்டர் உயரத்தில் சிலை அமைக்கப்படும் என்று உத்தரபிரதேச முதல்-மந்திரி யோகி ஆதித்யநாத் அறிவித்துள்ளார்.

    கர்நாடக அரசு காவிரி தாய்க்கு 125 அடி உயரத்தில் சிலை அமைப்பதாக அறிவித்துள்ளது. மராட்டிய மாநிலத்தில் வீரசிவாஜிக்கு மிகப் பெரிய உயரமான சிலை ஒன்றை அமைக்கும் திட்டம் பற்றி ஆலோசிக்கப்பட்டு வருகிறது.



    இந்த நிலையில் வல்லபாய் பட்டேல் சிலையை விட மிக அதிக உயரத்தில் ஆந்திர மாநில சட்டசபை கட்டிடத்தை கட்ட சந்திரபாபு நாயுடு முடிவு செய்துள்ளார்.

    ஒன்றுபட்ட ஆந்திராவின் தலைநகரமாக ஐதராபாத் இருந்து வந்த நிலையில் புதிய மாநிலமாக பிரிக்கப்பட்ட பிறகு ஆந்திராவின் தலைநகரம் விஜயவாடாவுக்கு மாற்றப்பட்டது.

    இதற்காக விஜயவாடா அருகே அமராவதி என்ற பெயரில் புதிய நகரம் உருவாக்கப்பட்டு வருகிறது. அங்கு சட்டசபை கட்டிடம் உள்ளிட்ட பல்வேறு அரசு அலுவலகங்கள் கட்டப்படுகிறது.

    சட்டசபை கட்டிடத்துக்காக கட்டிட வடிவமைப்பு பணி ஏற்கனவே தேர்வு செய்யப்பட்டு இருந்தது. இங்கிலாந்தை சேர்ந்த கட்டிட வடிவமைப்பு நிறுவனமான நார்மா பாஸ்டர்ஸ் இந்த வடிவமைப்பை உருவாக்கி உள்ளது.

    சட்டசபை கட்டிடம் 3 அடுக்குகளாக கட்டப்படுகிறது. அதன் மத்தியில் மிக உயரமான கோபுரம் ஒன்று அமைக்கப்படுகிறது. இந்த கோபுரம் தான் கட்டிடத்துக்கு அழகை கொடுக்கும் வகையில் கட்டப்படுகிறது.

    அந்த கோபுரத்தின் உயரம் என்ன என்பது முடிவு செய்யப்படாமல் இருந்தது. இப்போது வல்லபாய் பட்டேலின் சிலையின் உயரத்தை விட அதிக உயரமாக இருக்கும் வகையில் 250 மீட்டர் உயரத்தில் கட்டுவது என்று முடிவு எடுத்துள்ளனர்.

    அதாவது பட்டேல் சிலையை விட 68 மீட்டர் கூடுதல் உயரமாக இந்த கோபுரம் இருக்கும்.

    ஏற்கனவே உள்ள வடிவமைப்பில் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு சில மாற்றங்களை செய்துள்ளார். அதன்படி கோபுர கட்டுமானத்தில் மாற்றங்கள் செய்து 250 மீட்டர் உயரத்துக்கு கட்டப்படுகிறது.

    இந்த கோபுரம் லில்லி மலர் வடிவத்தில் இருக்கும். அதாவது லில்லி மலரை கவிழ்த்து வைத்தால் எப்படி இருக்குமோ? அதுபோன்ற வடிவமாக கட்டப்படுகிறது.

    அதன் மேல் உச்சி வரை மக்கள் சென்று அமராவதி நகரை பார்வையிடலாம். இதற்காக கோபுரத்தில் 2 பார்வை மாடங்கள் அமைக்கப்படுகின்றன.

    முதல் மாடம் 80 மீட்டர் உயரத்தில் இருக்கும். அதில், 300 பேர் இருக்கும் வகையில் வசதி செய்யப்படுகிறது. அடுத்த மாடம் 250-வது மீட்டர் உயரத்தில் இருக்கும். அதில் 20 பேர் நின்று பார்வையிடலாம்.

    கீழிருந்து மேலே கடைசி வரை செல்வதற்கு லிப்டு வசதிகள் செய்யப்படுகிறது. மேல் பகுதி முழுவதும் கண்ணாடியால் கவர் செய்யப்பட்டு இருக்கும்.

    புயல், நிலநடுக்கம் ஆகியவற்றையும் தாங்கும் வகையில் இந்த கட்டிடம் கட்டப்படுகிறது. சட்டசபை கட்டிடத்துக்கான டெண்டர் பணி இந்த மாதம் இறுதி செய்யப்பட உள்ளது. 2 வருடத்தில் கட்டுமான பணியை முடிக்க திட்டமிட்டு இருக்கிறார்கள்.

    ஏற்கனவே தலைமை செயலகம் கட்டும் பணிக்காக 5 கட்டிட டிசைன்கள் தேர்வு செய்யப்பட்டு டெண்டர் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.  #ChandrababuNaidu #APAssembly

    ×