search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "near villupuram"

    விவசாயியை தலையணையால் அமுக்கி கொலை செய்த மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேரை போலீசார் கைது செய்தனர்.
    சின்னசேலம்:

    விழுப்புரம் மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள தகரையை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது 29), விவசாயி. இவரது மனைவி ரஞ்சிதா (26). இவர்களுக்கு தனுஷ் (9) என்கிற மகனும், ஆர்த்தி (3) என்ற மகளும் உள்ளனர்.

    மணிகண்டன் நேற்று காலை தனது நிலத்தில் மூக்கில் ரத்தம் வடிந்த நிலையில் மர்மமான முறையில் இறந்து கிடந்தார். இதைப் பார்த்த சிலர் இதுபற்றி சின்னசேலம் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரஞ்சிதா மற்றும் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை நடத்தினர்.

    அப்போது ரஞ்சிதா முன்னுக்குப்பின் முரணாக பதிலளித்ததால் அவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து அவரிடம் போலீசார் தீவிர விசாரணை நடத்தியதில், அவர் தனது கணவரை கள்ளக்காதலன் ஆறுமுகம் (43) மற்றும் 18 வயது சிறுவனுடன் சேர்ந்து கொலை செய்ததை ஒப்புக்கொண்டார்.

    இதையடுத்து மணிகண்டனின் உடலை போலீசார் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பிவைத்தனர். போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:-

    மணிகண்டன் தனது நிலத்தை ஆறுமுகம் என்பவருக்கு குத்தகைக்கு விட்டிருந்தார். இதனால் ஆறுமுகத்துக்கும், மணிகண்டனின் மனைவி ரஞ்சிதாவுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டு, நாளடைவில் கள்ளக்காதலாக மாறியது. அவர்கள் 2 பேரும் அடிக்கடி தனிமையில் சந்தித்து, தங்களது கள்ளக்காதலை வளர்த்துவந்தனர்.

    இவர்களது கள்ளக்காதல் விவகாரம் மணிகண்டனுக்கு தெரியவந்ததும் அவர் தனது மனைவியை கண்டித்தார். ஆறுமுகத்திடம் குத்தகைக்கு விட்டிருந்த நிலத்தையும் மீட்டார். இதுதொடர்பாக கடந்த பிப்ரவரி மாதம் இருவருக்கும் இடையே பிரச்சினை ஏற்பட்டது. இதுகுறித்து மணிகண்டன் சின்னசேலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். போலீசார் ஆறுமுகத்தை கைது செய்து சிறையில் அடைத்தனர்.

    ஜாமீனில் வெளியே வந்த பின்னரும் ஆறுமுகத்துக்கும், ரஞ்சிதாவுக்கும் இடையே கள்ளத்தொடர்பு தொடர்ந்தது. மணிகண்டன், மனைவியை மீண்டும் கண்டித்ததால் அவரை தீர்த்துக்கட்ட ரஞ்சிதா முடிவு செய்தார்.

    அதன்படி நேற்று முன்தினம் இரவு வீட்டில் மணிகண்டனுக்கு ரஞ்சிதா மதுவில் அதிக தூக்க மாத்திரைகளை கலந்துகொடுத்தார். மணிகண்டன் அந்த மதுவை அருந்திய சிறிது நேரத்தில் மயங்கி விழுந்தார். பின்னர் தனது கள்ளக்காதலன் ஆறுமுகம், 18 வயது சிறுவன் ஆகியோரை வரவழைத்து, அவர்களுடன் சேர்ந்து தலையணையால் அமுக்கி மணிகண்டனை கொலை செய்தார். உடலை அவரது நிலத்தில் வைத்துவிட்டு வந்தது தெரிந்தது.

    இதையடுத்து ரஞ்சிதா, கள்ளக்காதலன் ஆறுமுகம் மற்றும் 18 வயது சிறுவனை போலீசார் கைது செய்தனர். தொடர்ந்து அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×