search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Muttukkadu Boat Crew"

    • பிரமாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் கட்டுமான பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று காலை முட்டுக்காடு படகு குழாமில் தொடங்கி வைத்தார்.
    • சமையல் அறை, பொருட்கள் சேமிப்பு அறை, கழிவறை மற்றும் எந்திர அறை தனித்தனியாக இருக்கும்.

    திருப்போரூர்:

    சென்னை கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள முட்டுக்காட்டில் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சி கழகத்தின் மூலம் படகு இல்லம் இயக்கப்பட்டு வருகிறது.

    இந்த படகு இல்லத்தில் பொதுமக்கள் சாகச பயணம் மேற்கொள்ளும் வகையில் மிதவை படகுகள், எந்திர படகுகள், வேகமான எந்திர படகுகள் உள்ளன. இதனால் படகு குழாமுக்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகிறது.

    இந்நிலையில் சுற்றுலா பயணிகளை மேலும் ஈர்க்கும் வகையில் இந்த படகு இல்லத்தில் ரூ.5 கோடி மதிப்பீட்டில் 125 அடி நீளம், 25 அடி அகலத்தில் பிரமாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் சொகுசு உணவக கப்பல் பயணம் தொடங்கப்பட உள்ளது. இது சுற்றுலா பயணிகளை பெரிதும் கவரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    இத்திட்டம் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழகம் மற்றும் கொச்சியைச் சேர்ந்த கிராண்ட்யூனர் மரைன் இன்டர்நேஷ்னல் நிறுவனத்தின் மூலமாக தனியார் மற்றும் பொது பங்களிப்பு மூலம் செயல் படுத்தப்பட உள்ளது. இந்த சொகுசு உணவக கப்பல் தமிழ்நாட்டில் முதல் முறையாக அமைய உள்ளது குறிப்பிடத்தக்கது.

    பிரமாண்டமான இரண்டு அடுக்கு மிதக்கும் உணவக கப்பல் கட்டுமான பணியினை சுற்றுலாத்துறை அமைச்சர் ராமச்சந்திரன் இன்று காலை முட்டுக்காடு படகு குழாமில் தொடங்கி வைத்தார்.


    இதில் அரசு முதன்மை செயலாளர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக தலைவர் டாக்டர். சந்தரமோகன், சுற்றுலா இயக்குநர் மற்றும் தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சிக் கழக மேலாண்மை இயக்குநர் சந்தீப் நந்தூரி, செங்கல்பட்டு மாவட்ட கலெக்டர் ராகுல்நாத், எஸ்.எஸ்.பாலாஜி எம்.எல்.ஏ. உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

    இந்த மிதக்கும் உணவக கப்பலின் தரைத்தளம் முழுவதும் குளிரூட்டப்பட்ட வசதியுடனும் முதல் தளம் திறந்தவெளி தளமாகவும், சுற்றுலா பயணிகள் மேல்தளத்தில் அமர்ந்து உணவு சாப்பிட்டு பயணம் செய்யும் வகையிலும் வடிவமைக்கப்பட்டு உள்ளது. சமையல் அறை, பொருட்கள் சேமிப்பு அறை, கழிவறை மற்றும் எந்திர அறை தனித்தனியாக இருக்கும்.

    மிதக்கும் பிரம்மாண்ட சொகுசு உணவு கப்பல் பயன்பாட்டுக்கு வரும்போது முட்டுக்காடு படகு குழாமிற்கு வரும் சுற்றுலா பயணிகளின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

    நிகழ்ச்சியில் திருப்போரூர் ஊராட்சி ஒன்றிய குழுத்தலைவர் இதயவர்மன், முட்டுக்காடு ஊராட்சி மன்ற தலைவர் சங்கீதாமயில் வாகனன், மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் பொது மேலாளர் லி.பாரதி தேவி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

    ×