search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "mutton curry"

    இட்லி, தோசை, சாதத்திற்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் இந்த மட்டன் குழம்பு. இன்று இந்த மட்டன் குழம்பை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள் :

    மட்டன் - அரை கிலோ
    சின்ன வெங்காயம் - 50 கிராம்
    தக்காளி - 2
    மிளகாய் தூள் - ஒரு மேசைக்கரண்டி
    மல்லித் தூள் - ஒன்றரை மேசைக்கரண்டி
    தேங்காய் துருவல் - கால் கப்
    கசகசா - அரை மேசைக்கரண்டி
    சோம்பு தூள் - ஒரு தேக்கரண்டி
    பட்டை - அரை அங்குலத் துண்டு
    கல் உப்பு - 2 தேக்கரண்டி
    நல்லெண்ணெய் - 3 மேசைக்கரண்டி



    செய்முறை :

    மட்டனைத் துண்டுகளாக்கி கழுவி சுத்தம் செய்து வைக்கவும்.

    தக்காளியை பொடியாக நறுக்கி கொள்ளவும்.

    பிறகு சின்ன வெங்காயத்தை தோலுரித்து இரண்டாக நறுக்கிக் கொள்ளவும்.

    தேங்காய் துருவலுடன் கசகசா சேர்த்து மிக்ஸி நைசாக அரைத்துக் கொள்ளவும்.

    குக்கரில் நல்லெண்ணெய் ஊற்றி காய்ந்ததும் பட்டை போட்டு தாளித்த பின்னர் நறுக்கிய சின்ன வெங்காயத்தைப் போட்டு வதக்கவும்.

    பின் வெங்காயம் நன்கு வதங்கியதும் தக்காளி சேர்த்து வதக்கவும்.

    தக்காளி சற்று வதங்கியதும் சுத்தம் செய்து வைத்திருக்கும் மட்டனை சேர்த்துப் போட்டு நன்கு கிளறவும்.

    பிறகு உப்பு சேர்த்து பிரட்டவும். (உப்பு சேர்த்து பிரட்டுவதால் கறியில் நன்கு உப்பு சேர்ந்துவிடும்) மட்டன் சற்று நிறம் மாறியதும் மல்லித் தூள், சோம்பு தூள் மற்றும் மிளகாய் தூள் சேர்த்து நன்றாக கிளறவும்.

    மிதமான தீயில் வைத்து மட்டன் தூள் வகைகள் ஒன்றாக சேரும்படி நன்கு 2 நிமிடங்கள் பிரட்டவும்.

    அடுத்து மட்டனுடன் தேங்காய் விழுது ஒன்றாக சேரும்படி கிளறிவிட்டு, ஒன்றரை கப் தண்ணீர் ஊற்றி தீயை அதிகமாக வைத்து, ஒரு முறை கிளறிவிட்டு குக்கரை மூடி 6 விசில் வரும் வரை வைத்து அடுப்பிலிருந்து இறக்கிவிடவும்.

    சிறிது நேரம் கழித்து குக்கரைத் திறந்து பார்த்தால் கறியில் உள்ள கொழுப்பு மற்றும் எண்ணெய் மேலே மிதந்து வந்திருக்கும். இப்போது சுவையான மட்டன் குழம்பு ரெடி.

    சுவையான மட்டன் குழம்பு தயார்.

    இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ஆப்பம், இடியாப்பம், தோசை, இட்லி, புலாவ், சப்பாத்திக்கு தொட்டுக்கொள்ள அருமையாக இருக்கும் மட்டன் சொதி. இன்று அதை செய்வது எப்படி என்று பார்க்கலாம்.
    தேவையான பொருட்கள்

    மட்டன் - 200 கிராம்
    இஞ்சி, பூண்டு விழுது - 2 டீஸ்பூன்
    ப.மிளகாய் - 6
    2-ம் தேங்காய் பால் - 200 மில்லி,
    முதல் தேங்காய் பால் - 100 மில்லி
    மஞ்சள் தூள் - 5 கிராம்
    எலுமிச்சைப்பழம் - 1
    கறிவேப்பிலை - தேவையான அளவு
    தேங்காய் எண்ணெய் - 1 டீஸ்பூன்
    பட்டை - சிறிய துண்டு
    ஏலக்காய் - 3
    கிராம்பு - 3
    உப்பு - தேவையான அளவு



    செய்முறை :

    ப.மிளகாயை நீளவாக்கில் வெட்டிக்கொள்ளவும்

    எலுமிச்சை பழத்திலிருந்து சாறு எடுத்து வைக்கவும்.

    மட்டனை நன்றாக சுத்தம் செய்து வைக்கவும்.

    ஒரு பாத்திரத்தில் மட்டனை போட்டு அதனுடன் ப.மிளகாய், மஞ்சள் தூள், எலுமிச்சை சாறு, உப்பு, 2-ம் தேங்காய்ப்பால் சேர்த்து 2 மணிநேரம் குளிர் சாதன பெட்டியில் வைக்கவும்.

    2 மணிநேரம் கழித்து ஃபிரிட்ஜில் இருந்து வெளியில் எடுத்து குளிர்ச்சி போனவுடன் கடாயில் போட்டு கொதிக்க விடவும்.

    மற்றொரு கடாயில் சிறிது தேங்காய் எண்ணெய் ஊற்றி கறிவேப்பிலை, பட்டை, ஏலக்காய், கிராம்பு, இஞ்சி, பூண்டு விழுது போட்டு பச்சை வாசனை போகும் வரை வதக்கவும்.

    பின்னர் கொதிக்க வைத்த மட்டனை இதில் சேர்க்கவும்.

    இப்போது முதல் தேங்காய் பால், உப்பு சேர்க்கவும்.

    லேசாக கொதி வந்தவுடன் இறக்கி சூடாக பரிமாறவும். அதிக நேரம் கொதிக்க வைத்தால் திரிந்து விடும்.

    சூப்பரான மட்டன் சொதி ரெடி.

    - இதை படித்து உங்களுடைய சந்தேகங்களை எங்களுடன் பகிர்ந்து கொள்ளுங்கள். உங்கள் கருத்துக்களை samayalmalar@gmail.com என்ற இணையதள முகவரிக்கு அனுப்பி வையுங்கள்.
    ×