search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Molestation Allegation"

    • தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக பிரித்வி ஷா மீது நடிகை புகார் அளித்திருந்தார்.
    • பிரித்வி ஷா தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என்று நடிகை ஸ்வப்னா கில் அளித்துள்ள புகார் பொய்யானது என்று போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.

    மும்பை:

    இந்திய கிரிக்கெட் அணியின் நட்சத்திர வீரர் பிரித்வி ஷா. இவர் கடந்த பிப்ரவரி மாதம் 15-ம் தேதி இரவு மும்பையில் உள்ள சாண்டகிரூஸ் நட்சத்திர ஓட்டலில் நண்பர்களுடன் உணவு சாப்பிட்டுவிட்டு வெளியே வெளியே வந்தார்.

    அப்போது, அங்கு வந்த இன்ஸ்டாகிராம் பிரபலமும், போஜ்புரி நடிகையுமான ஸ்வப்னா கில் ஒரு செல்பி புகைப்படம் எடுக்க வேண்டுமென பிரித்வி ஷாவிடம் கேட்டுள்ளார். அதற்கு பிரித்வி ஷா மறுப்பு தெரிவித்துள்ளார்.

    இதனால் ஆத்திரமடைந்த ஸ்வப்னா கில் தனது நண்பர்களுடன் சேர்ந்து பிரித்விஷாவின் காரை பின் தொடர்ந்துள்ளனர். பிரித்விஷாவின் காரை இடைமறித்த ஸ்வப்னா கில் மற்றும் அவரது நண்பர் பிரித்விஷாவின் கார் கண்ணாடியை அடித்து உடைத்துள்ளார். பிரித்விஷாவையும் கடுமையாக தாக்கினார். இந்த சம்பவம் தொடர்பாக பிரித்வி ஷா அளித்த புகாரின் அடிப்படையில் ஸ்வப்னா கில் அவரது நண்பரை போலீசார் கைது செய்தனர். பின்னர் அவர்கள் ஜாமினில் விடுதலை செய்யப்பட்டனர்.

    ஜாமினில் சிறையில் இருந்து விடுதலை செய்யபட்ட ஸ்வப்னா கில் கிரிக்கெட் வீரர் பிருத்வி ஷா மீது பாலியல் புகார் அளித்தார். கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா குடிபோதையில் இருந்ததாகவும், தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாகவும் ஸ்வப்னா கில் போலீசில் புகார் அளித்தார். ஆனால் அந்த புகாரை போலீஸ் ஏற்றுக்கொள்ள மறுத்ததையடுத்து ஸ்வப்னா கில் அந்தேரி கோர்ட்டில் மனு தாக்கல் செய்தார்.


    இந்த மனு கோர்ட்டில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, கிரிக்கெட் வீரர் பிரித்வி ஷா தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தினார் என்று நடிகை ஸ்வப்னா கில் அளித்துள்ள புகார் பொய்யானது என்று போலீசார் கோர்ட்டில் தெரிவித்துள்ளனர்.

    இது தொடர்பாக போலீசார் தரப்பில் கோர்ட்டில் தெரிவிக்கப்பட்டதாவது:-

    சம்பவத்தன்று சிசிடிவி கேமரா காட்சிகளின் அடிப்படையில் ஸ்வப்னா கில் மற்றும் அவரது நண்பர் சோபித் தாக்கூர் கேளிக்கை விடுதியில் மதுகுடித்துவிட்டு நடனமாடியுள்ளனர். சோபித் தாக்கூர் தனது செல்போனில் பிரித்விஷாவை வீடியோ எடுத்துள்ளார். ஆனால், வீடியோ எடுக்க வேண்டாம் என பிரித்விஷா தடுத்துள்ளார்.

    வீடியோ ஆதாரங்களின் அடிப்படையில் பிரித்விஷாவும் அவரது நண்பரும் ஸ்வப்னா கில்லை பாலியல் துன்புறுத்தல் செய்ததற்கான எந்த நிகழ்வும் நடைபெறவில்லை. கேளிக்கை விடுதியில் இருந்த சாட்சியங்களிடம் நடத்தபப்ட்ட விசாரணையும் ஸ்வப்னா கில்லை யாரும் தவறாக தொடவில்லை என்று கூறியுள்ளனர். தொடர்ந்து வின்சிட்டி பகுதியில் உள்ள சிசிடிவி கேமராவை ஆய்வு செய்ததில் சமூகவலைதள பிரபலம் ஸ்வப்னா கில் தனது கையில் பேஸ்பால் மட்டையுடன் பிரித்விஷா காரை துரத்தில் செல்வது பதிவாகியுள்ளது.

    கிரிக்கெட் வீரரின் கார் கண்ணாடியை ஸ்வப்னா கில் உடைத்துள்ளார். சம்பவம் நடந்த பகுதியில் இருந்த மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரரிடமும் வாக்குமூலம் வாங்கப்பட்டுள்ளது.

    அவர் கூறுகையில், அப்பகுதியில் மோதல் நடைபெறுவதாக தகவல் கிடைத்தது. தகவலறிந்து அங்கு சென்றபோது கார் கண்ணாடி உடைக்கப்படிருப்பதை பாதுகாப்பு படை வீரர் பார்த்துள்ளார். பெண் தனது கையில் பேஸ்பால் மட்டையுடன் இருந்ததையும், போலீசார் வருவதை பார்த்த உடன் அந்த பெண்ணின் நண்பன் அவரிடமிருந்த பேஸ்பால் மட்டையை மறைவான இடத்தில் வீசியதையும் பார்த்துள்ளார்.

    சம்பவம் நடந்த பகுதியில் அந்த பெண் மீது யாரும் தாக்குதல் நடத்தவில்லை' என மத்திய தொழிற்பாதுகாப்பு படை வீரர் தனது வாக்குமூலத்தில் கூறியுள்ளார். இதன் மூலம் தன்னை பாலியல் ரீதியில் துன்புறுத்தியதாக பிரித்வி ஷா மீது நடிகை ஸ்வப்னா கில் அளித்த புகார் போலியானது என்று கோர்ட்டில் போலீசார் தெரிவித்தனர். இதனை தொடர்ந்து ஸ்வப்னா கில்லின் நண்பர் செல்போனில் எடுக்கப்பட்ட வீடியோவை கோர்ட்டில் தாக்கல் செய்ய அவகாசம் வழங்கும்படி கில் தரப்பு வழக்கறிஞர் கோர்ட்டில் கோரிக்கை விடுத்தார்.

    மேலும், கேளிக்கை விடுத்திக்கு வெளியே நடந்த சம்பவம் தொடர்பான சிசிடிவி காட்சிகளை கொடுக்கும்படியும் கில் வழக்கறிஞர் கோரிக்கை விடுத்தார். இதையடுத்து, இந்த சம்பவம் தொடர்பாக உள்ள ஒட்டுமொத்த சிசிடிவி கேமரா பதிவுகளையும் தாக்கல் செய்யும்படி போலீசாருக்கு உத்தரவிட்ட கோர்ட்டு வழக்கை வரும் 28-ம் தேதிக்கு ஒத்தி வைத்தது.

    ×