search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Modi address"

    5 மாநில தேர்தல் தோல்வி எதிரொலியாக டெல்லியில் இன்று பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் நடைபெறுகிறது. இதில் பிரதமர் மோடி கலந்து கொண்டு பேசுகிறார். #AssemblyPollResults #Modi #BJPMPs
    புதுடெல்லி:

    நடந்து முடிந்த 5 மாநில சட்டமன்ற தேர்தல்களில் பா.ஜனதா கட்சி மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. மத்திய பிரதேசம், சத்தீஷ்கார், ராஜஸ்தான் ஆகிய 3 மாநிலங்களில் காங்கிரசிடம் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.

    தெலுங்கானாவில் மிகப்பெரும் சக்தியாக உருவாக வேண்டும் என்ற கனவும் நனவாகிப்போனது. அங்கு முன்பு 5 இடங்களில் வெற்றி பெற்றிருந்த பா.ஜனதா இந்த தேர்தலில் ஒரு இடத்தில் மட்டுமே வெற்றி பெற்றது. மிசோரமிலும் ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்றுள்ளது. அங்கு மிசோரம் தேசிய முன்னணியிடம் காங்கிரஸ் ஆட்சியை பறிகொடுத்துள்ளது.

    பா.ஜனதா ஆட்சியை பறிகொடுத்த 3 மாநிலங்களில் உள்ள 65 நாடாளுமன்ற தொகுதிகளில் 2014-ம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலில் பா.ஜனதா 62 தொகுதிகளில் வெற்றி பெற்றிருந்தது. எனவே இந்தி பேசும் இந்த 3 பெரிய மாநிலங்களில் ஏற்பட்ட தோல்வி பா.ஜனதாவுக்கு வருகிற நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் மிகப்பெரிய பின்னடைவாக இருக்கும் என கருதப்படுகிறது.

    இதன் எதிரொலியாக பா.ஜனதாவின் முக்கிய தலைவர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. இதில் தேர்தல் முடிவுகள் தொடர்பாக சுமார் 7 மணி நேரம் ஆலோசனை நடந்தது. இதனைத் தொடர்ந்து பா.ஜனதா எம்.பி.க்கள் கூட்டம் இன்று (வியாழக்கிழமை) டெல்லியில் நடைபெறுகிறது. இதில் பிரதமர் நரேந்திர மோடி கலந்து கொண்டு பேசுகிறார்.

    வழக்கமாக நாடாளுமன்ற கூட்டத்தொடர் நடைபெறும் நாட்களில் வாரந்தோறும் கட்சி எம்.பி.க்களை பிரதமர் மோடி சந்தித்து பேசுவது வழக்கம். இதில் நாடாளுமன்ற நடவடிக்கைகள் பற்றியே ஆலோசிக்கப்படும்.

    ஆனால் இன்றைய எம்.பி.க்கள் கூட்டத்தில் 5 மாநில தேர்தல்களில் ஏற்பட்ட தோல்வி குறித்து முக்கிய ஆலோசனை நடத்தப்படும் என கூறப்படுகிறது. இந்த தோல்வியில் இருந்து மீண்டு அடுத்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற பொதுத் தேர்தல் பிரசாரத்துக்கு தயாராவது குறித்து மோடி எம்.பி. க்களுக்கு ஆலோசனை வழங்குவார் என எதிர்பார்க்கப்படுகிறது.

    இந்த கூட்டத்தை தொடர்ந்து இன்று மதியம் பா.ஜனதா தலைவர் அமித்ஷா, கட்சியின் தேசிய நிர்வாகிகள், மாநில தலைவர்கள் ஆகியோருடன் ஆலோசனை கூட்டத்தை நடத்த இருப்பதாக கட்சி வட்டாரங்கள் தெரிவித்தன. இது தேர்தல் முடிவுகள் வருவதற்கு முன்பே திட்டமிடப்பட்ட கூட்டம் தான் என்றும், கட்சிரீதியான பிரச்சினைகள் குறித்து தலைவர்களின் கருத்துகளை அமித்ஷா கேட்க இருப்பதாகவும் நிர்வாகிகள் சிலர் தெரிவித்தனர்.

    பிரதமர் மோடி நேற்றுமுன்தினம் டுவிட்டரில், “வெற்றி தோல்வி என்பது வாழ்க்கையின் ஒருங்கிணைந்த பகுதி தான். இந்த முடிவுகளால் மக்கள் பிரச்சினைகளை தீர்ப்பதிலும், மக்களுக்கு சேவையாற்றுவதிலும், இந்தியாவை வளர்ச்சிப்பாதையில் கொண்டு செல்வதிலும் பா.ஜனதா மேலும் கடுமையாக பாடுபடும். இந்த தேர்தல் முடிவை கட்சி பணிவுடன் ஏற்றுக்கொள்கிறது” என்று தெரிவித்து இருந்தார்.  #AssemblyPollResults #Modi #BJPMPs
    ×