search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Milk Sale"

    • பாலின் விலையை உயர்த்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்.
    • கூட்டுறவு சங்கத்தில் பால் வாங்க வந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் பால் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர்.

    கவுண்டம்பாளையம்:

    கோவை துடியலூரை அடுத்த இடிகரை பகுதியில் பால் உற்பத்தியாளர்கள் கூட்டுறவு சங்கம் செயல்பட்டு வருகிறது.

    இச்சங்கத்தில் இடிகரை சுற்றுவட்டார பகுதியில் உள்ள இடிகரை, சென்ன மாநாயக்கன்பாளையம், கோவிந்த நாயக்கன்பாளையம், மணியகாரம்பாளையம் உள்ளிட்ட கிராமங்களில் இருந்து 50க்கும் மேற்பட்ட பால் உற்பத்தியாளர்கள் காலை மற்றும் மாலை வேலைகளில் பாலை விற்பனை செய்து வருகின்றனர்.

    இங்கு ஒரு நாளைக்கு சுமார் 350 லிட்டர் வரை பாலை கூட்டுறவு சங்கத்தில் விற்பனை செய்து வருவதாக தெரிகிறது. கூட்டுறவு சங்கத்தின் மூலம் பெறப்படும் பால் அப்பகுதி பொதுமக்கள் வாங்கிச் செல்வதுடன் மீதமுள்ள பாலை ஆவினுக்கு அனுப்பி வைத்து விடுகின்றனர்.

    இந்நிலையில் மாடுகளை பராமரிப்பதற்கு தேவையான புண்ணாக்கு, பசும் தீவனம், ஆட்கள் கூலி உள்ளிட்டவர்கள் விலை உயர்வு காரணமாக பால் கொள்முதல் விலை கட்டுபடி ஆவதில்லை.

    எனவே பாலின் கொள்முதல் விலையை உயர்த்தி தரவேண்டும் என்று இடிகரை பால் உற்பத்தியாளர் கூட்டுறவு சங்கத்தில் பாலை விற்பனை செய்து வரும் விவசாயிகள் இன்று ஒரு நாள் பாலை சங்கத்தில் ஒப்படைக்காமல் சாலையில் கொட்டி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

    மாடுகளை பராமரிக்க தேவையான வேலை ஆட்கள், புண்ணாக்கு, பசும் தீவனம், மருத்துவச் செலவு உள்ளிட்டவை கடுமையாக விலை உயர்ந்துள்ளதால் எங்களால் பராமரிக்க இயலவில்லை, கூட்டுறவு சங்கம் கொடுக்கும் பால் விலை கட்டுபடியாகவில்லை, எனவே பாலின் விலையை உயர்த்தி தரவேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். மேலும் அரசு வங்கிகள் மூலம் கடன் வசதி ஏற்படுத்திக் கொடுக்க வேண்டும் எனவும் கேட்டுக்கொண்டனர்.

    அந்த நேரத்தில் கூட்டுறவு சங்கத்தில் பால் வாங்க வந்த பெண்கள் மற்றும் பொதுமக்கள் பால் கிடைக்காமல் ஏமாற்றத்துடன் திரும்பி சென்றனர். அதில் ஒரு பெண்மணி இவ்வாறு போராட்டம் நடத்தினால் முன்னரே அறிவிக்க வேண்டும். எங்களுக்கு குழந்தைகள், வயதானவர்கள் இருக்கிறார்கள். அவர்களுக்கு பாலுக்கு எங்கு செல்வது என கேட்டு வாக்குவாதத்தில் ஈடுபட்டார்.

    ×