search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Mesolithic sculpture"

    • கரடிக்கல் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் சிற்பம் 3 அடி உயரம், 2 அடி அகலம், 12 செ.மீ. தடிமன் கொண்டது.
    • வீரனின் உருவத்தை பொறுத்தமட்டில் முகம் தேய்ந்த நிலையிலும், இடது கையில் கேடயம் ஏந்தியவாறும் உள்ளது.

    திருமங்கலம்:

    மதுரை மாவட்டம் கரடிக்கல் பகுதியை சேர்ந்த வரலாற்று ஆர்வலர் சுந்தர் என்பவர், தங்கள் ஊரில் பழமையான சிற்பம் இருப்பதாக கொடுத்த தகவலின்பேரில் மதுரை பாண்டியநாடு பண்பாட்டு மையத்தின் தொல்லியல் கள ஆய்வாளர், பேராசிரியர் முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர்கள் லட்சுமண மூர்த்தி, அஸ்வத்தாமன், ஆய்வாளர் ஆனந்த குமரன் ஆகியோர் கொண்ட குழுவினர் கள ஆய்வு செய்தனர். அப்போது ஊரின் மேற்குப் பகுதியில் உள்ள விவசாய நிலத்தில் மண்ணில் பாதி புதைந்த நிலையில் கி.பி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த நடுகல் வீரன் சிற்பம் இருப்பது கண்டறியப்பட்டது.

    இது குறித்து பேராசிரியர் முனீஸ்வரன் கூறியதாவது:

    சங்க காலம் முதல் இன்றுவரை தமிழரின் பண்பாட்டில் நடுகல் வழிபாட்டு முறை ஒரு முக்கிய பங்காக கருதப்படுகிறது. நடுகல் என்பது போரில் இறந்த வீரர்களின் நினைவாக வைக்கப்படும் கல்லாகும்.

    கரடிக்கல் விவசாய நிலத்தில் கண்டெடுக்கப்பட்ட நடுகல் சிற்பம் 3 அடி உயரம், 2 அடி அகலம், 12 செ.மீ. தடிமன் கொண்டது. இது தனி பலகை கருங்கல்லில் புடைப்புச் சிற்பமாக வடிவமைக்கப்பட்டுள்ளது. வீரனின் உருவத்தை பொறுத்தமட்டில் முகம் தேய்ந்த நிலையிலும், இடது கையில் கேடயம் ஏந்தியவாறும் உள்ளது.

    வலது கையில் நீண்ட வாளை பிடித்தவாறு சிற்பம் உள்ளது. வலது புறம் சரிந்த கொண்டையை அள்ளி முடித்தும், காதுகளில் காதணி, கழுத்தில் சரபளி சவடி, பதக்கம் போன்ற ஆபரணங்களும், மார்பில் சன்னவீரம் எனப்படும் வீர சங்கிலியும் காணப்படுகிறது. சன்னவீரம் என்பது போருக்கு செல்லும் வீரர்கள் அணிவதாகும்.

    வீரனின் இடுப்பு பகுதியில் சலங்கை மற்றும் பதக்கம் கொண்ட அணிகலன்களும் கை, கால்களில் வீரக்கழல் அணிந்து கொண்டும் முன்னங்காலை ஊன்றி போருக்கு செல்வது போன்ற நிலையில் காணப்படுகிறது.

    வீரனின் வலதுபுறத்தில் பெண் சிற்பம் தேய்ந்த முகத்துடன் நீண்ட காதுகளில் அணிகலன் அணிந்து அலங்காரத்துடன் சரிந்த கொண்டையும் , உடல் முழுவதும் ஆடை அணிந்து வலது கை தொங்கவிட்டு, இடது கை வீரனை பின் தொடர்ந்து செல்வது போல் வடிவமைக்கப்பட்டுள்ளது.

    சிற்பத்தின் மேல் பகுதியில் நீண்ட வடிவில் பெரிய எழுத்துக்கள் கொண்ட கல்வெட்டு தேய்ந்த நிலையில் உள்ளது. இந்தக் கல்வெட்டை மை படி எடுத்து ஆய்வு செய்தபோது எழுத்துக்கள் தேய்மானத்தோடு காணப்பட்டதால் ஓய்வு பெற்ற கல்வெட்டு ஆய்வாளர் முனைவர் சொ. சாந்தலிங்கம் உதவியுடன் படிக்கப்பட்டது. கல்வெட்டில் கடைசி வரி பெற்றான் என்ற வரி மட்டும் வாசிக்க முடிந்தது. மற்ற எழுத்துக்கள் தேய்மானம் கொண்டு இருப்பதால் பொருள் அறியமுடியவில்லை. கல்வெட்டின் எழுத்தமைதி பொறுத்து அதன் காலம் கி.பி 16-ம் நூற்றாண்டு என்று தெரியவந்துள்ளது.

    இந்த பகுதியில் போர்க்களத்தில் திறம்பட போரிட்டு இறந்த போர் வீரனின் நினைவை பறைசாற்றுவதற்காக எழுப்பட்ட நடுகல்லாக இருக்கலாம் என்று தெரிகிறது. தற்போது இந்த நடுகல்லை மக்கள் வேட்டைக்காரன் சாமி என்று வழிபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர் கூறினார். 

    • பரமக்குடியில் உயர்குடி பெண் நடுகல் சிற்பம் கண்டுபிடிக்கப்பட்டது.
    • இந்த நடுகல் சிற்பம் 2½ அடி உயரமும், 1½ அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது.

    பரமக்குடி

    ராமநாதபுரம் மாவட்டம் வழிமறிச்சான் கிராமத்தை சேர்ந்த ராமர் என்பவர் கொடுத்த தகவலின்படி பாண்டியநாடு பண்பாட்டு மையத்தைச் சேர்ந்த தாமரைக்கண்ணன், மீனாட்சிசுந்தரம் மற்றும் வழிமறிச்சானை சேர்ந்த சிவா, சக்தி, முருகன் ஆகியோர் பரமக்குடி அருகே உள்ள வழிமறிச்சான் கிராமத்தில் கள ஆய்வு மேற்கொண்டனர். அங்கு கண்டெடுக்கப்பட்ட சிற்பம் உயர் குடியைச் சேர்ந்த மூதாட்டிக்கு எடுக்கப்பட்ட நடுகல் என்பதை கண்டறிந்தனர்.

    இதுகுறித்து அவர்கள் கூறியதாவது:-

    பொதுவாக நடுகல் என்பது முற்காலங்களில் வீர, தீர செயல்களான போர்களில் ஈடுபடும் வீரர்களுக்கோ அல்லது விலங்குகளுக்கு எதிரான சண்டைகளில் வெற்றி பெறுபவர்களுக்கோ அல்லது சண்டையில் இறப்பவர்களுக்கோ அல்லது சமூகத்தில் பெரிதும் போற்றத்தக்க நபர்களுக்கோ நடுகல் எடுக்கும் வழக்கம் இருந்தது.

    தற்போது கண்டறிந்த சிற்பமும் அந்த வகையைச் சேர்ந்ததாகும். இந்த நடுகல் சிற்பம் 2½ அடி உயரமும், 1½ அடி அகலமும் கொண்ட பலகை கல்லில் புடைப்புச் சிற்பமாக செதுக்கப்பட்டுள்ளது. இந்த சிற்பத்தின் 2 கைகளிலும் காப்பும், கை வளையல்களும் அணிந்தபடியும், கழுத்தில் ருத்ராட்ச மாலையும், ஆபரணங்களும் நீண்ட காதும் தெளிவாக செதுக்க ப்பட்டுள்ளன.

    இடையில் இடைக்கச்சை அணிந்த படியும், இரு கால்களிலும் கழலைகள் அணிந்தபடியும் சிற்பம் நேர்த்தியாக வடிக்க ப்பட்டுள்ளது. இடது கையில் ஊன்றுகோல் தடியை பிடித்தவாறு செதுக்கப்பட்டுள்ளது. நெற்றியில் திலகம் செதுக்கியிருப்பது கூடுதல் சிறப்பாகும்.

    இந்த புடைப்பு சிற்பம் வயது முதிர்ந்த ஒரு மூதாட்டியின் சிற்பமா கும். இந்த சிற்பத்தின் வடிவ மைப்பும், அணிந்துள்ள ஆபரணங்க ளையும் வைத்து பார்க்கும் போது உயர் குடியைச் சேர்ந்த பெண்ணாகவோ அல்லது சமூகத்தில் மிகவும் மதிக்கத்தக்க பெண்மணியாகவோ இருந்திருக்கலாம். இந்த நடுகல்லை பாட்டி கிழவி அம்மன் என்ற பெயரில் அந்தப்பகுதி மக்கள் வழிபட்டு வருகின்றனர்.

    இவ்வாறு அவர்கள் கூறினர்.

    ×