என் மலர்
நீங்கள் தேடியது "Make in India Project"
ஜெய்ப்பூர்:
ராஜஸ்தான் மாநில தேர்தல் பிரசாரத்தில் காங்கிரஸ் தலைவர் ராகுல்காந்தி ஈடுபட்டுள்ளார்.
டோல்பூரில் நடந்த ரோடு ஷோ நிகழ்ச்சியில் அவர் கலந்து கொண்டார். அப்போது அவர் பேசியதாவது:-
பிரதமர் மோடி கடந்த தேர்தலின் போது, நான் நாட்டின் பாதுகாவலனாக இருப்பேன் என்று கூறினார். ஆனால், இப்போது அவர் 15 அல்லது 20 தொழில் அதிபர்களுக்குத்தான் பாதுகாவலனாக இருக்கிறார்.
அனில் அம்பானி பயன்பெற வேண்டும் என்பதற்காகவே ரபேல் விமான கொள்முதலில் முறைகேடுகளை செய்து இருக்கிறார்.
தொழில் அதிபர்களின் ரூ.3½ லட்சம் கோடி தள்ளுபடி செய்யப்பட்டு உள்ளது. ஆனால், விவசாய கடன்களை தள்ளுபடி செய்யவில்லை.
எங்கள் ஆட்சியில் ரூ.70 ஆயிரம் கோடி அளவுக்கு விவசாய கடன் தள்ளுபடி செய்யப்பட்டது. ஆனால், மோடி அரசுக்கு விவசாயிகள் மீது எந்த அக்கறையும் இல்லை.

ரபேல் விமான முறைகேடு தொடர்பாக பாராளுமன்றத்தில் கேள்வி எழுப்பினால் அதற்கு மோடி பதில் சொல்ல மறுக்கிறார்.
இந்த அரசால் ஏழை மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டு உள்ளனர். பெட்ரோல், டீசல் விலை உயர்வால் ஏழைகள், நடுத்தர மக்கள் என அனைவரும் பெரும் துன்பங்களை சந்தித்து வருகிறார்கள்.
சிறு தொழில்கள் முடங்கி விட்டன. இளைஞர்களுக்கு எந்த வேலைவாய்ப்பும் இல்லை.
பிரதமர் கொண்டு வந்த பண மதிப்பு இழப்பு திட்டம், ஜி.எஸ்.டி. வரி திட்டத்தில் மோசமான நடைமுறை போன்ற காரணங்களால் இந்த நாட்டின் பொருளாதாரம் சீரழிக்கப்பட்டுள்ளது.
மேக் இன் இந்தியா என்ற திட்டத்தை கொண்டு வந்து எல்லா பொருளையும் இந்தியாவில் தயாரிக்க போவதாக கூறினார்.
ஆனால், இந்த திட்டம் முற்றிலும் தோல்வி அடைந்து விட்டது. சாதாரண டி சர்ட்டுக்கும், செல்போனுக்கும் சீனாவை எதிர்பார்த்து காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது.
நாங்கள் ஆட்சிக்கு வந்தால் செல்போனை இந்தியாவிலேயே தயாரிப்போம்.
நாட்டில் விவசாயிகள், தொழிலாளர்களுக்கு எவ்வளவோ தேவைகள் இருக்கின்றன. ஆனால், அதை செயல்படுத்தாத மோடி அரசு சில தொழில் அதிபர்களுக்காக மட்டும் செயல்பட்டு வருகிறது.
இவ்வாறு ராகுல்காந்தி பேசினார். #RahulGandhi #PMModi