search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Makaravilakku Session"

    மண்டல, மகர விளக்கு சீசனுக்கு முன்பாக பம்பை சீரமைக்கப்படும் என்று திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தெரிவித்துள்ளார். #KeralaFloods
    திருவனந்தபுரம்:

    கேரளாவில் பெய்த கனமழை மற்றும் அணைகளில் இருந்து ஒரே நேரத்தில் தண்ணீர் திறந்து விடப்பட்டதால் பெரும் பாதிப்பு ஏற்பட்டது. அங்குள்ள மக்கள் கடும் இன்னலுக்கு ஆளானார்கள். வரலாறு காணாத பாதிப்பில் இருந்து அவர்கள் இன்னும் மீளவில்லை.

    கேரளாவில் பெய்த மழை மற்றும் வெள்ளப்பெருக்கில் இருந்து கோவில்களும் தப்பவில்லை. ஏராளமான கோவில்கள் சேதமடைந்தன. திருவிதாங்கூர் தேவஸ்தானத்திற்கு உட்பட்ட சுமார் 200 கோவில்களில் மழை வெள்ளம் சூழ்ந்ததால், பூஜைகள் நடைபெறவில்லை.

    சபரிமலை பம்பை ஆற்றில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கால் அங்கிருந்த கட்டிடங்கள் சிதைந்து அடித்துச் செல்லப்பட்டன. ஆற்றின் குறுக்கே பக்தர்கள் நடந்து செல்லும் 2 பாலங்கள் பலமில்லாததால் வீழ்ந்து போனது. ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஒரே நேரத்தில் தங்கி ஓய்வெடுக்கும் ராமமூர்த்தி மண்டபம், 200 மீட்டர் நீளமுள்ள பிரதான நடை பந்தல், அன்னதான மண்டபம், கழிப்பறை கூடங்கள் ஆகியவை வெள்ளத்தில் அடித்துச் செல்லப்பட்டன.

    தற்போது பம்பை ஆற்றில் வெள்ளப்பெருக்கு குறைந்து உள்ளது. இந்த நிலையில் திருவிதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் தலைமையில் குழுவினர் பம்பையில் முகாமிட்டு மறு சீரமைப்பு பணிகளை மேற்கொள்வது குறித்து தீவிரமாக ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்கள்.

    இதை தொடர்ந்து திரு விதாங்கூர் தேவஸ்தான தலைவர் பத்மகுமார் பம்பையில் நிருபர்களிடம் கூறியதாவது;-

    கேரளாவில் மழையால் ஏற்பட்ட பேரழிவு காரணமாக திருவிதாங்கூர் தேவஸ்தானத்தின் கீழ் செயல்படும் சுமார் 200 கோவில்கள் கடும் சேதத்திற்கு உள்ளாகி உள்ளது. நீர் மட்டம் குறைந்த நிலையில் கோவிலை சுற்றி உள்ள சகதி மற்றும் கழிவுகளை அகற்றும் பணி நடைபெற்று வருகிறது. சபரிமலை பம்பையில் ஏற்பட்ட சேதம் உள்பட தேவஸ்தானத்திற்கு ரூ.300 கோடி அளவிற்கு இழப்பு ஏற்பட்டு உள்ளது.

    இருந்த போதிலும், நடப்பு மண்டல, மகர விளக்கு சீசன் தொடங்குவதற்கு முன்பாக சபரிமலை பம்பை முற்றிலுமாக சீரமைக்கப்படும். மறு சீரமைப்பு மற்றும் சீரமைப்பு பணிகளுக்கு பக்தர்கள் தாராளமாக நிதி உதவி வழங்கலாம்.

    இவ்வாறு அவர் கூறினார். #KeralaFloods
    ×