search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry drive suicide"

    பணத்தகராறில் மிரட்டல் விடுத்ததால் லாரி டிரைவர் பெட்ரோல் ஊற்றி தீக்குளித்து தற்கொலை செய்து கொண்டார். இது தொடர்பாக அ.தி.மு.க. பிரமுகர் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

    வாணியம்பாடி:

    வாணியம்பாடி அடுத்த மேல்நிம்மியம்பட்டை சேர்ந்தவர் கோவிந்தசாமி (வயது 52). லாரி டிரைவர். இவருக்கு தாமரை என்ற மனைவி, ஒரு மகள் மற்றும் 2 மகன்கள் உள்ளனர். கோவிந்தசாமிக்கு செக்குமேட்டில் 75 சென்ட் நிலம் உள்ளது.

    அந்த நிலத்தை விற்க கோவிந்தசாமி முடிவு செய்தார். அதன்படி, கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு அதே பகுதியை சேர்ந்த அ.தி.மு.க. பிரமுகரான எம்.ஜி. என்ற ஜெய்சங்கரிடம் ரூ.7 லட்சம் விலை பேசினார்.

    முன் பணம் ரூ.2½ லட்சம் பெற்று கொண்டார். மீதித் தொகையை 3 மாதத்திற்குள் கொடுத்து நிலத்தை கிரயம் செய்வதாக அ.தி.மு.க. பிரமுகர் கூறினார். கடைசி வரை மீதி பணத்தை தந்து அவர் நிலத்தை கிரயம் செய்யவில்லை.

    இதனால், காலக்கெடு முடிந்ததையடுத்து வேறு நபருக்கு கோவிந்தசாமி தனது நிலத்தை விற்றுவிட்டார். இதனால் அ.தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கர் ஆத்திரமடைந்தார். முன் பணமாக கொடுத்த ரூ.2½ லட்சத்தை திருப்பி கேட்டு நச்சரித்தார். பணத்தை கோவிந்தசாமி தராததால் அ.தி.மு.க. பிரமுகர் மிரட்டல் விடுத்தார். மேலும், தனது ஆதரவாளர்களுடன் சென்று தொந்தரவு செய்ததாக கூறப்படுகிறது.

    மேலும், வாணியம்பாடி தாலுகா போலீசிலும் கோவிந்தசாமி மீது அ.தி.மு.க. பிரமுகர் புகார் அளித்தார். போலீசார் விசாரித்து வந்தனர். கோவிந்தசாமி வரும் 20-ந் தேதிக்குள் 2½ லட்சம் ரூபாயையும் கொடுப்பதாக எழுதி கொடுத்தார்.

    இந்த நிலையில், நேற்று அ.தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கர் ஆதரவாளர்களுடன் மீண்டும் கோவிந்தசாமியை அழைத்து மிரட்டினார். இதனால் மனமுடைந்த கோவிந்தசாமி தனது பைக்கில் பெட்ரோலை பிடித்து, உடலில் ஊற்றி தீக்குளித்தார்.

    உடல் முழுவதும் தீப்பற்றி எரிந்தது. கட்டப்பஞ்சாயத்து பேசி மிரட்டல் விடுத்த அ.தி.மு.க. பிரமுகர் மற்றும் அவரது ஆதரவாளர்கள் ஓடி விட்டனர். அப்பகுதி மக்கள், கோவிந்தசாமி உடல் மீது தண்ணீரை ஊற்றி தீயை அணைத்தனர்.

    பலத்த தீக்காயங்களுடன் உயிருக்கு போராடிய அவரை மீட்டு வாணியம்பாடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். மேல் சிகிச்சைக்காக வேலூர் அடுக்கம்பாறை அரசு ஆஸ்பத்திரிக்கு கோவிந்தசாமி மாற்றப்பட்டார்.

    அங்கு சிகிச்சை பலனின்றி கோவிந்தசாமி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து, ஆலங்காயம் போலீசில் புகார் அளிக்கப்பட்டது. போலீசார் வழக்குப்பதிவு அ.தி.மு.க. பிரமுகர் ஜெய்சங்கரிடம் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ×