search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lorry chancellor"

    சென்னையில் போலீஸ் போல நடித்து ரூ.25 லட்சம் கேட்டு கடத்தப்பட்ட லாரி அதிபரை போலீசார் மீட்டனர். இதுதொடர்பாக கூலிப்படையினர் கைது செய்யப்பட்டு உள்ளனர்.
    செங்குன்றம்:

    சென்னை செங்குன்றம் கரிகாலன் நகர் மூவேந்தர் தெருவை சேர்ந்தவர் கணேசன் (வயது 54). இவர் தனக்கு சொந்தமான லாரிகளை வாடகைக்கு விட்டுள்ளார். மேலும் பல்வேறு தொழில்களும் செய்து வருகிறார். கடந்த 2-ந்தேதி இரவு கணேசன் வீட்டிற்கு 4 பேர் வந்தனர். அவர்களில் ஒருவர் போலீஸ் சப்- இன்ஸ்பெக்டர் சீருடையில் இருந்தார்.

    அவர், தன்னை சப்-இன்ஸ்பெக்டர் பாண்டியன் என்றும், மணல் கடத்தல் பற்றி விசாரிக்கும் தனிப்படையில் பணியாற்றுவதாகவும் தெரிவித்தார். உங்கள் லாரிகளில் மணலை திருட்டுத்தனமாக கடத்துவதாக புகார் வந்துள்ளது. எனவே உங்களிடம் விசாரணை நடத்த வேண்டும் என்று கணேசனிடம் கூறினார்.

    பின்னர், ஒரு காரில் கணேசனை அழைத்துச்சென்றனர். அப்போது கணேசன் வாக்குவாதம் செய்தார். உடனே அவரை, 4 பேரும் சேர்ந்து, கழுத்தில் கத்தியை வைத்து மிரட்டினார்கள். சத்தம் போடாமல் எங்களோடு வா, இல்லாவிட்டால் உன்னை தீர்த்துக்கட்டிவிடுவோம் என்று எச்சரித்து காரில் கடத்தி சென்றனர்.

    காரின் சீட்டில் அவரை உட்கார வைக்காமல், சீட்டுக்கு அடியில் படுக்க வைத்தனர். கணேசன் வீடு திரும்பாததால், அவரது மனைவி மாலா, தம்பி ராமச்சந்திரன் உள்ளிட்ட குடும்பத்தினர் பயந்தார்கள். கணேசனின் செல்போன் அணைத்து வைக்கப்பட்டு இருந்தது.

    ஏதோ விபரீதம் நடந்துவிட்டது என்று பயந்த கணேசனின் தம்பி ராமச்சந்திரன், செங்குன்றம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார், கணேசனை காணவில்லை என்று வழக்குப்பதிவு செய்து, முதலில் விசாரணை நடத்தினார்கள். மறுநாள் (3-ந்தேதி) காலை வரை கணேசனை பற்றி எந்த தகவலும் இல்லை.

    இந்தநிலையில் கணேசன் வீட்டிற்கு போனில் பேசிய மர்மநபர், “கணேசனை நாங்கள் கடத்தி வந்துள்ளோம். உடனடியாக ரூ.25 லட்சத்தை நாங்கள் சொல்லும் இடத்திற்கு வந்து தர வேண்டும். போலீசில் புகார் கொடுத்தால், கணேசனின் தலையை துண்டித்து வீட்டு வாசலில் வீசுவோம்” என்று தெரிவித்தார்..

    இதுகுறித்து போலீசுக்கு தகவல் கொடுக்கப்பட்டது. கடத்தல் கும்பலை பிடித்து, கணேசனை பத்திரமாக மீட்க போலீஸ் கமிஷனர் ஏ.கே.விஸ்வநாதன் உத்தரவிட்டார். அதன்படி கணேசனை மீட்க 3 போலீஸ் தனிப்படை அமைக்கப்பட்டது.

    இந்த 3 தனிப்படையினரும் அதிரடியாக செயல்பட்டு, கடந்த 3-ந்தேதி இரவு வண்டலூர் அருகே உள்ள அனுமந்தபுரம் பகுதியில் வைத்து, துப்பாக்கி முனையில் கடத்தல் கும்பலை சேர்ந்த 4 பேரை கைது செய்தனர். அவர்களிடம் இருந்து கடத்தப்பட்ட கணேசன் பத்திரமாக மீட்கப்பட்டார்.

    கடத்தல் கும்பலை சேர்ந்த மேலும் 4 பேரை வண்டலூர் மேம்பாலத்திற்கு கீழே வைத்து கைது செய்தனர். மொத்தம் 8 பேர் கைதானார்கள். ஒருவர் மட்டும் தப்பி ஓடிவிட்டார். கைது செய்யப்பட்ட 8 பேரும் செங்குன்றம் போலீஸ் நிலையத்திற்கு அழைத்துச்செல்லப்பட்டு அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொள்ளப்பட்டது. லாரி அதிபர் கணேசன், அவரது குடும்பத்தினரிடம் பத்திரமாக ஒப்படைக்கப்பட்டார்.

    குற்றவாளிகள் பெயர் விவரம்

    கைதான குற்றவாளிகள் பெயர் விவரம் வருமாறு:-

    1. வடகரை சக்தி (49), இவர் செங்குன்றம் அருகே உள்ள வடகரையைச் சேர்ந்தவர். இவர் தான் முக்கிய குற்றவாளி. 2. சிவா (39) இவர் செங்குன்றத்தை சேர்ந்தவர். கடத்தலுக்கு மூளையாக செயல்பட்டவர். 3. சுமன் (39) சென்னையை அடுத்த திருப்போரூரை சேர்ந்தவர். இவர் கடத்தலுக்கு தளபதி போல் செயல்பட்டவர். 9-ம் வகுப்பு வரை படித்துள்ள இவர் தான், சப்-இன்ஸ்பெக்டர் சீருடை அணிந்து வந்தவர்.

    4.மதன்குமார் (27). எண்ணூரை சேர்ந்த இவர் கூலிப்படை ஆசாமி. 5.கணேஷ் (27). ஆந்திர மாநிலம் நாயுடுப்பேட்டையை சேர்ந்தவர். கூலிப்படை ஆசாமி. 6. அசோக் (35) சென்னை குரோம்பேட்டையை சேர்ந்தவர், இவருக்கு சொந்தமான காரில் தான் லாரி அதிபர் கணேசனை கடத்தினார்கள். 7.ராஜேஷ் (21) செங்குன்றத்தை சேர்ந்த இவர் கூலிப்படையை சேர்ந்தவர். 8.சதீஷ்குமார் (25) செங்குன்றத்தை சேர்ந்த கூலிப்படை நபர். போலீஸ் கையில் சிக்காமல் தப்பி ஓடிய கூலிப்படை நபரின் பெயர் கந்தன் என்பதாகும். அவரை போலீசார் தேடி வருகிறார்கள். 
    திருச்சியில் ரூ.15 லட்சம் கேட்டு லாரி அதிபர் கடத்தப்பட்டார். சொகுசு காருடன் 5 பேர் கும்பல் கைது செய்யப்பட்டனர்.
    திருச்சி:

    திருச்சி மாநகரில் தினமும் வழிப்பறி, பணம் கேட்டு மிரட்டல், ஓடும் பஸ்சில் ஜேப்படி என தொடர்ச்சியாக குற்றச்சம்பவங்கள் நடந்த வண்ணம் உள்ளது. அதை தடுக்கும் நோக்கத்தில் மாநகர போலீஸ் கமிஷனர் அமல்ராஜ் உத்தரவின்பேரில் போலீசார் தீவிரமாக ரோந்து பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

    இந்த நிலையில் நேற்று முன்தினம் நள்ளிரவு திருச்சி கோட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் தலைமையிலான போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது கோட்டை பகுதியில் சொகுசு கார் ஒன்று சந்தேகப்படும் வகையில் சுற்றி வந்தது. போலீசார், அந்த காரை பின்தொடர்ந்து சென்றனர். காரின் பின்னால், போலீசார் கண்காணித்தபடி வருவதை காரில் இருந்தவர்கள் கண்டனர். அதைத்தொடர்ந்து காரின் வேகத்தை அதிகரிக்க தொடங்கினர். போலீசாரும் விடாது துரத்தி காரை மடக்கி பிடித்தனர். அப்போது காரில் 6 பேர் கும்பல் இருந்ததை கண்டு, விசாரித்தனர். விசாரணையில், அது ஆள்கடத்தல் கும்பல் என தெரிந்ததும் போலீசாரே அதிர்ச்சி அடைந்தனர்.

    அப்போது காரில் இருந்து இறங்கியவர்களில் பன்னீர்செல்வம் என்பவர் பதறியடித்தபடி வந்து, “சார்... என்னைத்தான் 5 பேர் கும்பலும் ரூ.15 லட்சம் கேட்டு கடத்தி வந்து ஒருநாள் முழுவதும் காரிலே சுற்றினர்” என்றார். பன்னீர்செல்வம் திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்தவர். இவர் கழிவு நீர் ஏற்றி செல்லும் லாரிகள் வைத்து தொழில் நடத்தி வருவதும் தெரியவந்தது.

    அதைத்தொடர்ந்து போலீசார் அக்கும்பலை போலீஸ் நிலையம் அழைத்து சென்று விசாரணை மேற்கொண்டனர். அவர்களில் ஒருவர் சென்னை அண்ணாநகரை சேர்ந்த செல்வம், திருச்சியை சேர்ந்த கணபதி, கலைச்செல்வன், பெரம்பலூர் இளவரசன் மற்றும் சேலம் ராஜ்குமார் ஆகியோர் ஆவர்.

    போலீசார் விசாரணையில் கிடைத்த தகவல் வருமாறு:-

    சென்னையை சேர்ந்த செல்வத்துக்கு, கடந்த ஓராண்டுக்கு முன்பு கணபதி மற்றும் கலைச்செல்வன் பழக்கமானார்கள். இவர்கள் இருவரும் சொந்தமாக கார் வைத்திருக்கிறார்கள். அவர்களது கார்களை தனியார் வாடகை கார் நிறுவனத்தில் இணைத்து விடுவதாக கூறி கணபதியிடம் இருந்து ரூ.70 ஆயிரம், கலைச்செல்வனிடம் ரூ.1 லட்சம் என மொத்தம் ரூ.1 லட்சத்து 70 ஆயிரத்தை செல்வம் வாங்கியதாக கூறப்படுகிறது.

    ஆனால், சொன்னபடி தனியார் வாடகை கார் நிறுவனத்தில் அவர்களது கார்களை செல்வம் இணைக்கவில்லை. அதைத்தொடர்ந்து இருவரும் கொடுத்த பணத்தை திரும்ப கேட்டு செல்வத்தை தொந்தரவு செய்ய தொடங்கினர்.

    அப்போதுதான், திருச்சி எடமலைப்பட்டி புதூரை சேர்ந்த லாரி அதிபர் பன்னீர்செல்வம் வசதியாக இருப்பதையும், சமீபத்தில் புதிய சொகுசு கார் ஒன்றை அவர் வாங்கியதையும் செல்வம் அறிந்தார். எனவே, உனக்கு பணம் வேண்டுமானால், பன்னீர்செல்வத்தை கடத்தி மிரட்டினால் கொடுத்து விடுவான். எனவே, அதற்கு நீங்கள் உதவினால், கிடைக்கக்கூடிய தொகையை சரிசமமாக பங்கிட்டு கொள்ளலாம் எனவும் ஆசை வார்த்தை கூறி இருக்கிறார்.

    அதற்கு ஒப்புக்கொண்ட கலைச்செல்வன் பெரம்பலூரில் வாகன ஷோரூமில் வேலைபார்க்கும் இளவரசனையும் சேர்த்து கொண்டார். அதே வேளையில் கலைச்செல்வன், சேலத்தில் ஆஸ்பத்திரி ஒன்றில் ஊழியராக வேலைபார்க்கும் ராஜ்குமார் என்பவரிடம் பணம் கடன் வாங்கி இருந்தார். ராஜ்குமார் பணம் கேட்டு தொந்தரவு செய்ததும், ஆள்கடத்தல் வேலைக்கு ராஜ்குமாரையும் பங்குதாரராக சேர்த்து, கூடுதல் பணம் கிடைக்கும் எனவும் கலைச்செல்வன் கூறி இருக்கிறார். இதன் மூலம் ஆள் கடத்தல் சதி திட்டத்துக்கு 5 பேர் கூட்டணி சேர்ந்தாகி விட்டது.

    அந்த திட்டத்தை நிறைவேற்றும் வகையில், நேற்று முன்தினம் பகலில் திருச்சியில் முக்கிய இடத்தில் நின்று கொண்டிருந்த லாரி அதிபர் பன்னீர்செல்வத்தை 5 பேர் கும்பல் சொகுசு காரில் கடத்தினர். பின்னர் அவரிடம், குறுகிய காலத்தில் எப்படி வசதி வந்தது? என கேட்டதுடன், “உன்னை நாங்கள் கடத்தி கொண்டு போகிறோம். ரூ.15 லட்சம் கொடுத்தால் மட்டுமே விடுவிப்போம்” எனக்கூறி இருக்கிறார்கள். அதற்கு பன்னீர்செல்வம், அவ்வளவு பணம் தன்னிடம் இல்லை என மறுத்துள்ளார்.

    பின்னர் திருச்சியின் பல்வேறு இடங்களில் சொகுசு காரில், கடத்தப்பட்ட பன்னீர்செல்வத்துடன் 5 பேர் கும்பல் சுற்றித்திரிந்துள்ளனர். அப்போதுதான் போலீசாரின் பார்வையில் பட்டு, 5 பேரும் சிக்கி கொண்டனர். அவர்களை கைது செய்த போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறார்கள். கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சொகுசு காரும் போலீசாரால் பறிமுதல் செய்யப்பட்டது.

    திருச்சியில் நடந்த ஆள் கடத்தல் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. 
    ×