search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "lie case"

    ரவுடி வசூர் ராஜாவை பொய் வழக்கில் போலீசார் கைது செய்ததாக அவரது தாய், கலெக்டரிடம் புகார் மனு அளித்தார்.

    வேலூர்:

    வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் வாராந்திர மக்கள் குறைதீர்வு கூட்டம், கலெக்டர் ராமன் தலைமையில் இன்று நடந்தது. மாவட்டத்தின் பல பகுதிகளில் இருந்து வந்த பொதுமக்கள் கோரிக்கைகள் மற்றும் புகார் தொடர்பான மனுக்களை அளித்தனர்.

    தமிழக விவசாயிகள் சங்கம் அளித்த மனுவில்:- வேலூர் மாவட்டத்தில் ஒரு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் செலவில் விவசாயிகள் வேர்க்கடலை பயிரிட்டுள்ளனர். ஆனால், மழை இல்லாததால் வேர்க்கடலை பட்டு போய் விவசாயிகளுக்கு நஷ்டத்தை ஏற்படுத்தியுள்ளது.

    எனவே, மாவட்ட நிர்வாகம் ஒரு குழு அமைத்து மாவட்டம் முழுவதும் ஆய்வு மேற்கொண்டு நிலக்கடலை பயிரிட்டு நஷ்டமடைந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கூறியிருந்தனர்.

    மற்றொரு விவசாயிகள் சங்கம் சார்பில் கொடுத்த மனுவில்:- 100 நாள் வேலை திட்டத்தால் விவசாய தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது. எனவே, மாதத்திற்கு 8 நாள் என வரைமுறை வகுத்து 100 நாள் வேலை திட்டத்தை செயல்படுத்த வேண்டுமென கூறியிருந்தனர்.

    வேலூர் சத்துவாச்சாரி அடுத்த புதுவசூரை சேர்ந்த பிரபல ரவுடி வசூர்ராஜாவின் தாய் கலைச்செல்வி (வயது 65), கலெக்டர் ராமனை சந்தித்து கொடுத்த மனுவில் கூறியிருப்பதாவது:-

    எனது கணவர் ஆறுமுகம் ராணுவத்தில் பணி புரிந்து இறந்துவிட்டார். எனக்கு புற்று நோய் இருப்பதால் உடல் நிலை பாதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் எனது ஒரே மகன் ராஜா என்கிற வசூர் ராஜா மீது மீண்டும் மீண்டும் பல பொய் வழக்குகளை போட்டு பொதுமக்களிடம் ரவுடியாக சித்தரித்து விட்டனர்.

    ராஜா என்பவரை வசூர்ராஜா என்று பட்டம் கொடுத்து போலீசார் உருவாக்கிவிட்டனர். நான் சென்னையில் புற்று நோய்க்கு சிகிச்சை பெற்று வருகிறேன். வயதான காலத்தில் என் உடல் நிலையை கருத்தில் கொண்டு என் மகன் கடந்த மாதம் 9-ந் தேதி கலெக்டர் மற்றும் எஸ்.பி.யிடம் மனு கொடுத்தார்.

    அப்போது முதல் எந்த வம்புக்கும்போகாமல் வீட்டில் இருந்து என்னை கவனித்து கொண்டார். இந்த நிலையில், கடந்த 3-ந் தேதி காலை 8.30 மணிக்கு வீட்டில் தூங்கி கொண்டிருந்த வசூர் ராஜாவை, சத்துவாச்சாரி இன்ஸ்பெக்டர், சப்-இன்ஸ்பெக்டர் மற்றும் போலீசார் விசாரணைக்காக அழைத்து சென்றனர்.

    நானும் பின்தொடர்ந்து சத்துவாச்சாரி போலீஸ் நிலையத்திற்கு சென்றேன். போலீசாரிடம் கேட்டதற்கு, சப்-இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜை கத்தியால் குத்தி கொல்ல முயன்றதாக வசூர் ராஜாவை கைது செய்துள்ளதாக கூறினர்.

    என் மகன் மீது பொய் வழக்கு போட்டு ஜெயிலில் அடைத்துள்ளனர். வசூர் ராஜா திருந்தி என்னுடன் வாழ்ந்து வந்தார். அவருக்கு திருமணம் செய்து வைக்க ஏற்பாடு செய்தேன். பெண் பார்த்துவந்தேன். இந்த நிலையில், போலீசார் கைது செய்ததால் மகன் வாழ்க்கை பாதிக்கப்பட்டுள்ளது. மகன் வசூர்ராஜாவுக்கு நீதி கிடைக்க வேண்டும்.

    இவ்வாறு அவர் கூறி இருந்தார்.

    ×