search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "kidney damage"

    • சிறுநீரக பிரச்சினை ஒரு சைலன்ட் கில்லர் என்று கூறுவதுண்டு.
    • தண்ணீர் குறைவாக அருந்துபவர்களுக்கு சிறுநீரகக்கல் வர வாய்ப்பு அதிகம்.

    அறிகுறிகள்

    சிறுநீரகங்களில் ஏற்பட்டிருக்கும் பிரச்சனைகளை தெரிந்துகொள்வதற்கு முன்பாக சிறுநீரகம் என்னென்ன வேலைகள் செய்கிறது என்று தெரிந்துகொள்வது அவசியம். கழிவுகளை வெளியேற்றுவது, ரத்த அழுத்தத்தை சீராக பரமாரிப்பது, ரத்தத்தை சுத்தம் செய்வது, ரத்தத செல்கள் உற்பத்தி, எழும்புகளின் நலனை பேணுதல் போன்ற மிக முக்கியமான பணிகளை சிறுநீரகங்கள் செய்கின்றன.

    பொதுவாக சிறுநீரகம் பாதிக்கப்பட்டிருந்தால், சரியான அளவு சிறுநீரை வெளியேற்றாத பட்சத்தில் சிறுநீர் அவர்கள் உடலிலேயே தங்கிவிடகூடும் அதனால் கால் வீக்கம், முக வீக்கம், மூச்சு வாங்குதல், கழிவுகள் உடலில் இருந்து வெளியேறாமல் தங்கிவிடுவதால், வாந்தி அல்லது வாந்தி வருவதை போன்ற ஒரு மனநிலை, பசி ஏற்படாமல் இருப்பது, ரத்த செல் உற்பத்தியில் சிறுநீரகம் ஈடுபடுவதால் சிறுநீரகம் பாதி்க்கப்படும் பட்சத்தில் ரத்ததில் ரத்த சிவப்பணுக்களின் எண்ணிக்கை குறைந்து ரத்தசோகை ஏற்படுவது, எழும்புகள் பாதிக்கப்பட்டு வழுவிழந்து போவது, ரத்த அழுத்தம் கட்டுக்குள் இல்லாமல் போவது போன்ற அறிகுறிகள் ஏற்படலாம்.

    சிறுநீரக பிரச்சினை ஒரு சைலன்ட் கில்லர் என்று கூறுவதுண்டு, ஆகவே இதுபோன்ற அறிகுறிகள் சிறுநீரகம் அதிக அளவு பாதிப்பிற்கு உள்ளான பிறகே வெளிப்படும். அதனால் வாழ்வியல் நோய்களான நீரிழிவு, உயர் ரத்த அழுத்தம் உள்ளவர்களுக்கு சிறுநீரக பிரச்சினை ஏற்பட அதிக வாய்ப்பு இருப்பதால் இவர்கள் அவ்வப்போது மருத்துவ பரிசோதனை செய்து கொள்வது அவசியமாகிறது.

    சிறுநீரகத்தில் எதனால் கட்டி அல்லது கல் ஏற்படுகிறது? அதை தவிர்க்க என்ன செய்ய வேண்டும்?

    சிறுநீரகத்தில் கட்டி ஏற்படுவதும், கல் ஏற்படுவதும் வெவ்வேறு பிரச்சனைகள். சிறுநீரக கட்டி என்பதை ஆங்கிலத்தில் சிஸ்ட் என்போம். இந்த சிறுநீரக கட்டிகளை ஸ்கேன் செய்து பார்த்தால் தெரிந்துகொள்ளலாம். இவை பொதுவாக நீர்கட்டிகளாக இருக்கும்பட்சத்தில் இவற்றால் பெரிதாக எந்த பாதிப்பும் ஏற்படுவதில்லை.

    ஆனால் சிலருக்கு குறிப்பாக வயது முதிர்ந்தவர்களுக்கு கேன்சர் கட்டி வருவதற்கு வாய்ப்புள்ளது. அவை கேன்சர் கட்டி என்று உறுதி செய்யப்படும் பட்சத்தில், அவர்களுக்கு அந்த கட்டியை அறுவைசிகிச்சை மூலம் அகற்றி தேவையான மேற்சிகிச்சை வழங்கப்படும்.

    சிறுநீரக கல் என்பது முற்றிலும் வேறு பிரச்சினை. பெரும்பாலும் சிறுநீரக கல் ஏற்படுவதற்கு காரணம் சிறுநீரில் உள்ள உப்புச் சத்தான கால்சியம், பாஸ்பரஸ், ஆக்சலேட் போன்றவற்றின் அளவு அதிகரிக்கும் போது கல் உருவாகும். இயல்பிலேயே சிறுநீரில் இந்த உப்புச் சத்துக்களின் அளவு அதிகமாக உள்ளவர்களுக்கோ அல்லது தண்ணீர் குறைவாக அருந்துபவர்களுக்கோ சிறுநீரக கல் வர வாய்ப்பு அதிகம் உள்ளது.

    சிறுநீரக கல் உள்ள அனைவருக்கும் கல் நீக்க அறுவை சிகிச்சை தேவைபடுவதில்லை. கல்லின் அளவு, கல் எங்கே உள்ளது என்பதை பொருத்தே அறுவை சிகிச்சை தீர்மானிக்கப்படுகிறது. 2-ல் இருந்து 5 மில்லி மீட்டருக்கு குறைவான கற்களால் பாதிப்பு இல்லை அவை தானாக சிறுநீர் வழியாக வெளியேறிவிடும். சிலவற்றை மருந்து மாத்திரைகள் மூலம் கறைய வைத்து வெளியேற்றிவிட முடியும். இதுவே 1 செ.மீ அதிகம் உள்ள கல் மருந்து மாத்திரையினால் கரையவோ வெளியேறவோ உள்ள சாத்தியகூறுகள் மிகவும் குறைவு. இவற்றை அறுவை சிகிச்சையின் மூலம் தான் அகற்ற முடியும்.

    இவ்வகை கற்கள் அதன் பெரிய அளவால் சிறுநீரக பாதையே அடைத்துக்கொண்டு சிறுநீர் வெளியேறுவதை தடுக்கவும் அதிக வாய்ப்பு உள்ளது அவற்றை கால தாமதம் செய்யாமல் உடனடியாக அகற்றுவது மிக முக்கியம். அதனால் சிறுநீரக கல்லின் அளவை பொறுத்து தகுந்த மருத்துவ ஆலோசனை பெற்று அவற்றை அகற்றுவது முக்கியம்.

    சிறுநீரக பாதிப்பு இப்போதெல்லாம் யாருக்கு அதிகமாக வருகிறது?

    உலக அளவில் சிறுநீரக பிரச்சினை அல்லது சிறுநீரகம் செயலிழப்பதற்காகன முக்கியமான இரண்டு காரணங்கள் வாழ்வியல் நோய்களான நீரிழிவு நோய் மற்றும் உயர் ரத்த அழுத்தம். இந்த பிரச்சனை உள்ளவர்களுக்கு சிறுநீரக பிரச்சினை வருவதற்கான வாய்ப்புகள் அதிகம். அதே போல சிறுநீரக கற்கள், மரபணு சார்ந்த காரணங்கள், சில மருந்து மாத்திரைகள் உட்கொள்வது போன்றவை சிறுநீரக கோளாறை உண்டாக்கும் மற்ற காரணங்கள் என்று சொன்னாலும் இவற்றால் பாதிப்பிற்கு உள்ளாகுபவர்களின் எண்ணிக்கை மிகவும் குறைவு.

    மது அருந்துவது, புகைப் பிடிப்பது எந்த அளவுக்கு சிறுநீரகத்தை பாதிக்கும்?

    புகைப் பிடிக்கும் பழக்கம் சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்க கூடியது. அதனால் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் புகை பிடிப்பதை நிறுத்துவது மிக அவசியம். மது அருந்துவது சிறுநீரகத்தை நேரடியாக பாதிக்காது என்றாலும் கூட மறைமுகமாக மது அருந்துவது ரத்த அழுத்தத்தை ஏற்படுத்தி சிறுநீரகத்தை பாதிக்கவோ, சிறுநீரக கல் ஏற்படவோ வாய்ப்பு உள்ளது.

    தினமும் மது அருந்துபவர்களை விட, வாரம் அல்லது மாதம் ஒரு முறை மது அருந்துபவர்களின் சிறுநீரகம் பாதிப்பு குறைவாக இருக்குமா?

    புகைப் பிடிப்பது அதிகமாக நுரையீரலை பாதித்தாலும் கூட அதற்கு அடுத்தபடியாக நேரடியாக பாதிப்பது சிறுநீரகத்தை என்றபடியால், சிறுநீரக பிரச்சினை இருப்பவர்கள் முற்றிலுமாக புகைப் பிடிக்கும் பழக்கத்தை விட்டுவிடுவது சாலச்சிறந்தது. மது அருந்துவதும் பல நோய்களுக்கு அடிப்படை காரணிதான் அதில் மாற்றுக்கருத்து இல்லை. இருந்தாலும் சோசியல் டிரிங்கிங் அதாவது மாதம் ஒரு முறை மது அருந்துவது போன்றவை உடனடியாக பாதிப்பை ஏற்படுத்தாது.

    அடிக்கடி சிறுநீர் கழிப்பது, அல்லது சிறுநீர் குறைவாக வருவது எதனால்?

    அதை எவ்வாறு சரி செய்ய வேண்டும்? அடிக்கடி சிறுநீர் கழிப்பது வயதான ஆண்களுக்கு இருக்கும் பொதுவான பிரச்சினை. ஆண்களுக்கு Prostate gland என்ற ஒரு சுரப்பி சிறுநீரக குழாயின் பாதையில் இருக்கும். இவை, ஆண்கள் வயதாகும் போது வீக்கமடையவோ பெரிதாகவோ வாய்ப்பு உள்ளது. அவ்வாறாகும் போது அது சிறுநீரக பாதையை அழுத்தி சிறுநீர் அடிக்கடி போக காரணமாக அமையும்.

    அதே போல சிறுநீரக குழாய் தொற்று ஏற்படுபவர்களுக்கும் அடிக்கடி சிறுநீர் வருவது, சிறுநீர் கழிக்கும் போது எரிச்சல் போன்ற அறிகுறிகள் ஏற்படலாம். அதனால் யாருக்கு இந்த அறிகுறிகள் உள்ளது, அவர்கள் ஆணா பெண்ணா, எந்த வயதை சார்ந்தவர்கள் போன்ற மற்ற தகவல்களின் அடிப்படையில் இந்த பிரச்சனையை அணுகி மருத்துவ சிகிச்சை அளிக்க வேண்டும். இதுவே போதுமான அளவு தண்ணீர் அருந்தினாலும் குறைவாக சிறுநீர் கழிக்கிறார்கள் என்றால் அது கவனிக்கப்பட வேண்டியது.

    அவ்வாறான பிரச்சினை உள்ளவர்களுக்கு உடலில் தண்ணீர் அதிகம் சேர்வதால் கை, கால் வீக்கம் அல்லது முகத்தில் வீக்கம் மூச்சு வாங்குதல் போன்ற அறிகுறிகள் இருக்கும் பட்சத்தில் அவை தீவிர சிறுநீரக பிரச்சினையின் வெளிப்பாடாக இருக்கலாம்.

    ஒருநாளைக்கு எவ்வளவு தண்ணீர் குடிக்க வேண்டும் எப்படி குடிக்க வேண்டும்?

    தண்ணீர் தேவை என்பது நம் உடல் உழைப்புக்கு ஏற்ப உடலின் சமநிலை மாறுபடும் போது நம் உடலே தாக உணர்வை தூண்டி நீர் தேவையை பூர்த்தி செய்துகொள்ளும். உடலில் இருந்து வியர்வையாக வெளியேறும் போது தாகம் ஏற்படும் அப்போது அதற்கு ஏற்றவாறு நீர் அருந்துவது இயல்பு. பொதுவாக சொல்வதானால் இரண்டில் இருந்து மூன்று லிட்டர் தண்ணீர் அருந்தலாம்.

    ஆனால் அதிக தண்ணீர் அருந்துவது சிறுநீரகத்திற்கு நல்லது என்று எட்டு அல்லது பத்து லிட்டர் தண்ணீர் அருந்துவது தவறு, அதுவே வேறு சில பிரச்சினைகளை ஏற்படுத்திவிட வாய்ப்புள்ளது. குறிப்பாக சோடியத்தின் அளவு மிகவும் குறைந்து போக வாய்ப்புள்ளது. அதே போல சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் சிறுநீரக சிறப்பு மருத்துவரை அணுகி அவர்கள் உடலுக்கு தேவையான தண்ணீரை எடுத்துக்கொள்வது முக்கியம். சிலருக்கு குறைவான அளவு தண்ணீர் தேவைப்படும் அதற்கு ஏற்றவாறு மருத்துவர் அறிவுறுத்துவார்.

    கேன் வாட்டர் குடிக்கலாமா?

    ஒரு குறிப்பிட்ட தண்ணீர் சிறுநீரகத்திற்கு நல்லது அல்லது கெட்டது என்று நிரூபிக்கபடவில்லை. தண்ணீரை சுடவைத்து குடித்தாலே போதுமானது, அல்லது கேன் வாட்டர் குடிப்பதில் எந்த தப்பும் கிடையாது. அவை சுத்தமாக தயாரிக்கபட்டதா என்பதை மட்டும் உறுதிபடுத்திக்கொள்ள வேண்டும்.

    கூல் ட்ரிங்க்ஸ் குடிப்பதால் சிறுநீரக பாதிப்பு வரும் என்கிறார்களே உண்மையா?

    சிறுநீரகம் சீராக வேலை செய்யும் ஒவ்வொரு குளிர்பானங்கள் அருந்துவதால் சிறுநீரக பிரச்சினை வரும் என்று நிரூபிக்கப்பட்ட ஆய்வுகள் இல்லை, ஆனால் சிறுநீரக பிரச்சினை உள்ளவர்கள் குளிர் பானம் அருந்துவதால் சில பிரச்சினைகள் வரலாம்.

    குறிப்பாக சில குளிர்பானங்களில் பாஸ்பரசின் அளவு அதிகமாக உள்ளதால், அதனால் அவர்களின் உடலில் பாஸ்பரசின் அளவு அதிகமாக வாய்ப்புள்ளது. தேநீர் போன்ற பானங்களில் ஆக்சலேட் என்ற வேதிப்பொருளின் அளவு அதிகமாக இருக்கும் இதனால் சிறுநீரக கோளாறு ஏற்படலாம். குறிப்பாக ஸ்டார் ஃபுரூட்டில் மிக அதிகபடியான ஆக்சலேட் அளவு இருக்கிறது.

    இந்த பழத்தை அதிகம் உட்கொள்வதால் சிறுநீரக பாதிப்பு ஏற்படும் வாய்ப்பு அதிகம். மற்றபடி பொதுவாக குளிர்பானங்கள் அருந்துவதே சிறுநீரக பிரச்சினைகளை ஏற்படுத்தும் என்ற தட்டையான வாதம் சரியானதல்ல.

    பழங்கள், காய்கறிகள் எடுத்துக்கொள்ளலாம்?

    சிறுநீரகத்தை பாதுகாப்பாக வைத்துக்கொள்ளும் குறிப்பிட்ட பழம் அல்லது உணவு என்று பொதுவாக இல்லை. உணவில் உப்பின் அளவை குறைவாக எடுத்துக்கொள்வது, போதுமான அளவு தண்ணீர் அருந்துவது போன்றவை நல்லது.

    ×