search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Kadaladi Sathyamoorthy"

    சொத்துக்குவிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்திக்கு 5 ஆண்டு சிறைத்தண்டனையும் 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உள்ளது. #KadaladiSathyamoorthyCase
    சென்னை:

    ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. முதன் முதலாக 1991-ம் ஆண்டு வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது.

    அப்போது ராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த கடலாடி சத்தியமூர்த்திக்கு ஜெயலலிதா அமைச்சர் பொறுப்பு வழங்கினார். வருவாய்த்துறை அமைச்சராக சத்தியமூர்த்தி 5 ஆண்டுகள் இருந்தார்.

    1991-1996-ம் ஆண்டு அ.தி.மு.க. ஆட்சியின் போது ஜெயலலிதா உள்பட அ.தி.மு.க. அமைச்சர்கள் சிலர் மீது சொத்து குவிப்பு வழக்கு தொடரப்பட்டபோது சத்தியமூர்த்தி மீதும் 1997-ம் ஆண்டு லஞ்ச ஒழிப்புத்துறையினர் வழக்குப்பதிவு செய்தனர். வருமானத்துக்கு அதிகமாக ரூ. 83 லட்சம் சொத்து சேர்த்ததாக அவர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டது.

    இந்த வழக்கில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தியின் மனைவி சந்திராவும் குற்றவாளியாக சேர்க்கப்பட்டார். சிறப்பு கோர்ட்டில் இந்த வழக்கு விசாரணை நடந்தது. இறுதியில் முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தியையும், அவரது மனைவி சந்திராவையும் இந்த வழக்கில் இருந்து விடுவித்து கோர்ட்டு உத்தரவிட்டது.

    சிறப்பு கோர்ட்டு தனது தீர்ப்பில் சத்தியமூர்த்தி, சந்திரா மீதான குற்றச்சாட்டுக்கு போதிய ஆதாரம் இல்லை என்று கூறி இருந்தது.

    இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை சார்பில் சத்தியமூர்த்தி, சந்திரா இருவர் மீதான வழக்குகள் சென்னை ஐகோர்ட்டில் மேல்முறையீடு செய்யப்பட்டன. சென்னை ஐகோர்ட்டில் கடந்த சில ஆண்டுகளாக இந்த வழக்கு விசாரணை நடந்து வந்தது.

    சாட்சிகள் விசாரணை அனைத்தும் முடிந்த நிலையில் தீர்ப்பு ஒத்திவைக்கப்பட்டு இருந்தது. இந்த நிலையில் இன்று ஐகோர்ட்டு நீதிபதி ஜெயச்சந்திரன் இந்த வழக்கில் அதிரடி தீர்ப்பை வெளியிட்டார்.

    முன்னாள் அமைச்சர் சத்தியமூர்த்தி சொத்து குவித்து இருப்பது உறுதி செய்யப்பட்டு இருப்பதால் அவருக்கு 5 ஆண்டுகள் ஜெயில் தண்டனை விதிப்பதாக நீதிபதி அறிவித்தார். அதுபோல சத்தியமூர்த்தியின் மனைவி சந்திராவுக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை விதிப்பதாக உத்தரவிட்டார்.

    இருவருக்கும் தலா ரூ.5 லட்சம் அபராதம் விதித்தும் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளது. அபராத தொகை செலுத்த தவறினால் கூடுதல் தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று கூறப்பட்டுள்ளது.

    ஜெயில் தண்டனை விதிக்கப்பட்டதை தொடர்ந்து சுப்ரீம்கோர்ட்டில் மேல் முறையீடு செய்ய கால அவகாசம் தர வேண்டும் என்று சத்தியமூர்த்தி சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டது. அதுவரை தண்டனையை நிறுத்தி வைக்க வேண்டும் என்று கேட்கப்பட்டது.

    ஆனால் இரு கோரிக்கைகளையும் ஏற்க நீதிபதி ஜெயச்சந்திரன் மறுத்து விட்டார். முதலில் ஆஜராகி பிறகு மேல்முறையீடு செய்யும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளது. எனவே சத்தியமூர்த்தியும், அவரது மனைவியும் கோர்ட்டில் சரண் அடைந்து சிறைக்கு செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.

    அ.தி.மு.க.வில் மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்த கடலாடி சத்திய மூர்த்தி முதலில் ஜெயலலிதாவின் தீவிர விசுவாசிகளில் ஒருவராக இருந்தார். ஆனால் சொத்து குவிப்பு வழக்குக்கு பிறகு அவர் தனது அரசியல் நிலைப்பாட்டில் வேறு முடிவை எடுத்தார்.

    கடந்த 2010-ம் ஆண்டு பிப்ரவரி மாதம் அவர் அ.தி.மு.க.வில் இருந்து விலகி தி.மு.க.வில் தன்னை இணைத்துக் கொண்டார். அ.தி.மு.க.வில் ஏற்பட்ட உட்கட்சி பூசல் காரணமாக அவர் கட்சியில் இருந்து விலக நேரிட்டதாக கூறப்பட்டது.

    மதுரையில் மு.க. அழகிரியை சந்தித்து தி.மு.க.வில் இணைந்த அவர் பிறகு தி.மு.க.வின் அனைத்து நடவடிக்கைகளிலும் தன்னை உட்படுத்திக் கொண்டார்.

    கடந்த 2011-ம் ஆண்டு தி.மு.க. சார்பில் முதுகுளத்தூர் தொகுதியில் போட்டியிட தி.மு.க. மேலிடம் வாய்ப்பு வழங்கியது. ஆனால் அ.தி.மு.க. வேட்பாளர் முருகனிடம் அவர் 20 ஆயிரம் வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.

    என்றாலும் அவர் தி.மு.க.வில் தொடர்ந்து தீவிரமாக பணியாற்றி வருகிறார். இந்த நிலையில் அவரது அரசியல் வாழ்க்கைக்கு சறுக்கல் ஏற்படும் வகையில் அவருக்கு சொத்து குவிப்பு வழக்கில் 5 ஆண்டு ஜெயில் தண்டனை கிடைத்துள்ளது. #KadaladiSathyamoorthyCase
    ×