search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Jewelry workshop robbery"

    சென்னையில் உள்ள நகை பட்டறைகளை குறிவைத்து கைவரிசை காட்டிய மத்திய பிரதேச கொள்ளை கும்பல் வங்கிகள் மூலம் பணபரிமாற்றம் செய்தது போலீசார் விசாரணையில் தெரியவந்துள்ளது.
    ராயபுரம்:

    சவுகார்பேட்டை என்.எஸ்.சி. போஸ்ரோட்டில் நகை பட்டறை நடத்தி வருபவர் முருகேசன். கடந்த 2 மாதத்திற்கு முன்பு கடையின் பூட்டை உடைத்து 35 கிலோ வெள்ளி கட்டி கொள்ளை போனது.

    இதேபோல் யானைகவுனி எடப்பாளையம் தெருவில் காஜா என்பவரின் நகை பட்டறையில் 15 கிலோ வெள்ளி கட்டியும், கொண்டிதோப்பில் ராஜேஷ் என்பவரின் கடையில் ரூ.10 லட்சம் மதிப்புள்ள நகைகளும் திருட்டு போனது. அடுத்தடுத்து நடந்த இந்த கொள்ளை சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

    இந்த கொள்ளையில் ஈடுபட்டவர்களை பிடிக்க பூக்கடை உதவி கமி‌ஷனர் லட்சுமணன் உத்தரவின் பேரில் இன்ஸ்பெக்டர் வெங்கட்குமார், சப்- இன்ஸ்பெக்டர் சீனிவாசன் ஆகியோர் கொண்ட தனிப்படை போலீசார் தீவிர விசாரணை நடத்தினர்.

    கொள்ளை நடந்த கடைகளின் அருகில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை ஆய்வு செய்தனர். இதனை வைத்து வியாசர்பாடி பி.வி. காலனியில் வசித்து வந்த மத்தியபிரதேச மாநிலத்தை சேர்ந்த நீலேசை பிடித்தனர்.

    அவர் கொடுத்த தகவலின் பேரில் கூட்டாளிகளான சிராஜ், மங்கோஷ், அத்வால் ஆகியோர் கைது செய்யப்பட்டனர். கைதான 3 பேரும் நண்பர்களுடன் சேர்ந்து சென்னையில் பல்வேறு இடங்களில் கைவரிசை காட்டியது தெரிந்தது. நகை பட்டறைகளில் கொள்ளையடித்ததையும் ஒப்புக்கொண்டனர்.

    பிடிபட்ட கொள்ளையர்கள் போலீசாரிடம் அளித்துள்ள வாக்குமூலத்தில் கூறியிருப்பதாவது:-

    கடந்த 2 மாதத்துக்கு முன்பு வேலை தேடி சென்னைக்கு வந்தோம். துணிக்கடையில் வேலை பார்த்துக் கொண்டே இரவு நேரத்தில் மோட்டார் சைக்கிள் திருட்டு, மற்றும் சிறு சிறு திருட்டில் ஈடுபட்டோம்.

    பின்னர் உல்லாச வாழ்க்கை வாழ விரும்பி பெரிய அளவில் கொள்ளையில் ஈடுபட திட்டம் தீட்டினோம். வீடுகளுக்கு சென்று கொள்ளையடித்தால் சிக்கி கொள்வோம் என்பதால் கடைகளை குறிவைத்தோம்.

    அதிகளவில் நகை மற்றும் பணம் புரளும் கடைகளை கண்காணித்து அதன் அருகே உள்ள ஏதாவது ஒரு கடையில் பணிக்கு சேருவோம். கொள்ளையடிக்கும் கடையில் பணிபுரிபவர்கள் யாரையாவது ஒருவரிடம் நெருங்கி பழகுவது வழக்கம். அவருடன் ஜாலியாக பேசி கடையின் விவரங்களை சேகரித்து கொள்ளை யில் ஈடுபட்டோம்.

    வழக்கமாக கொள்ளையில் ஈடுபடும் வடமாநிலத்தவர்கள், அன்றே தப்பி செல்வதால் போலீசார் கண்காணித்து கைது செய்து வந்ததை அறிந்து இருந்தோம்.

    எனவே நாங்கள் கொள்ளையில் ஈடுபட்டதும் சொந்த ஊருக்கு தப்பி செல்வது இல்லை. இங்கிருந்த படியே கொள்ளையடித்த நகைகளை பணமாக மாற்றி வங்கி மூலம் உறவினர்களுக்கு அனுப்பினோம். இதனால் சொந்த ஊரில் உறவினர்கள் நிலம் வாங்கியும், ஆடம்பர பங்காள கட்டியும் உல்லாச வாழ்க்கை வாழ்ந்தனர்.

    நாங்கள் இங்கேயே இருந்ததால் எங்கள் மீது யாருக்கும் சந்தேகம் எழவில்லை. மேலும் கொள்ளை நடந்த இடத்தின் அருகே கண்காணிப்பு கேமராவில் சிக்காமல் இருப்பதற்காக நள்ளிரவில் திருடியவுடன் அங்கிருந்து தப்பி செல்வது கிடையாது.

    அருகில் உள்ள கட்டிடத்தின் மேற்பகுதியில் பதுங்கி இருந்து விட்டு அதிகாலையில் ஆட்கள் நடமாட்டம் வந்த பின்னர் பொதுமக்களுடன் கூட்டத்துடன் சென்று விடுவோம். இதனால் போலீசார் துப்பு துலக்க முடியாமல் இருந்தனர்.

    இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.

    கைதான 3 பேரிடம் இருந்து ரூ.2½ லட்சம் ரொக்கம், ரூ.10 லட்சம் மதிப்பிலான நகைகள், 50 கிலோ வெள்ளி கட்டிகள் மற்றும் பூட்டை திறப்பதற்கு பயன்படுத்தும் கம்பிகள் பறிமுதல் செய்யப்பட்டது.

    அவர்கள் சென்னையில் எந்தெந்த இடங்களில் கைவரிசை காட்டி இருக்கிறார்கள் என்று தொடர்ந்து விசாரணை நடந்து வருகிறது. இவர்களின் பின்னணியில் மேலும் பலர் இருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள்.

    சென்னையில் தங்கியிருக்கும் கொள்ளையர்களை கடைகளில் வேலைக்கு சேர்த்து விடுபவர்கள் யார்? கூட்டாளிகள் எத்தனை பேர் எந்தெந்த பகுதிகளில் தங்கி உள்ளனர் என்ற விவரத்தை சேகரித்து வருகிறார்கள்.

    முக்கிய குற்றவாளிகளில் ஒருவன் அசாம் மாநிலத்தில் பதுங்கி இருப்பது தெரிய வந்துள்ளது. அவனை பிடிக்க தனிப்படை போலீசார் அசாம் விரைந்துள்ளனர்.
    ×