search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "IIT order"

    ஜே.இ.இ. நுழைவு தேர்வு முடிவுகள் முன்கூட்டியே கசிந்தது குறித்து விசாரணை நடத்துவதற்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
    புதுடெல்லி:

    நாடு முழுவதும் மத்திய அரசு நடத்தும் 23 ஐ.ஐ.டி. என்.ஐ.டி. மற்றும் உயர் கல்வி மையங்கள் உள்ளன.

    இங்கு என்ஜினீயரிங் படிப்பில் சேருவதற்கு நாடு முழுவதும் ஜே.இ.இ. என்ற பெயரில் நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.

    இந்த கல்லூரிகளில் மொத்தம் 11 ஆயிரத்து 279 இடங்கள் உள்ளன. தேர்வில் வெற்றி பெற்ற நபர்கள் இதில் சேர்த்து கொள்ளப்படுகிறார்கள்.

    நாடு முழுவதும் நடத்தப்பட்ட ஜே.இ.இ. நுழைவு தேர்வு முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. இதில், அரியானாவை சேர்ந்த பிரனவ் கோயல் 360-க்கு 337 மார்க் பெற்று முதல் ரேங்க் பெற்றார்.

    ராஜஸ்தான் மாநிலத்தை சேர்ந்த ‌ஷகில் ஜெயின் 2-வது இடத்தையும், டெல்லியை சேர்ந்த கைலாஷ் குப்தா 3-வது இடத்தையும் பிடித்தனர்.

    நேற்று தேர்வு முடிவு வெளிவந்த நிலையில் நேற்று முன்தினம் மாலையே ஜே.இ.இ. தேர்வில் பிரனவ் கோயல் 337 மார்க் பெற்று முதலிடத்தை பிடித்திருப்பதாக அரியானாவில் செய்திகள் வெளிவந்தன.

    இந்த செய்தியை அங்குள்ள இந்தி மாலை பத்திரிகை ஒன்று வெளியிட்டது. பிரனவ் கோயல் பயிற்சி பெற்ற பயிற்சி நிறுவனம் இந்த தகவலை தெரிவித்ததாகவும் அதில் குறிப்பிடப்பட்டு இருந்தது.

    நேற்று தேர்வு முடிவு அதிகாரப்பூர்வமாக வெளியிடப்பட்ட நிலையில் முன் கூட்டியே எப்படி ரேங்க் விவரம் வெளியானது என்று தெரியவில்லை. எனவே, தேர்வு முடிவு முன் கூட்டியே கசிந்து விட்டதாக கூறப்படுகிறது.

    தேர்வு எழுதியவர்கள் எத்தனை மார்க் பெற்றார்கள்? என்பதற்கான ‘ஆன்ஸ்வர்கீ’ இணைய தளத்தில் ஏற்கனவே வெளியிடப்பட்டு இருந்தது. இதை வைத்து எத்தனை மார்க் கிடைக்கும் என்பதை மாணவர்கள் தெரிந்து கொள்ளலாம். எத்தனாவது ரேங்க் என்பதை தெரிந்து கொள்ள முடியாது.

    ஆனால், பிரனவ் கோயல் முதல் ரேங்க் பெற்றுள்ளார் என்ற விவரம் முந்தைய நாளே வெளிவந்து விட்டது. எனவே தேர்வு முடிவு ரகசியம் கசிந்து விட்டதாக கூறி இதுபற்றி விசாரணை நடத்துவதற்கு ஐ.ஐ.டி. நிர்வாகம் சார்பில் உத்தரவிடப்பட்டுள்ளது.
    ×