search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Gangeyam Bulls"

    • மதுரை மாவட்டத்தில் ஜல்லிக்கட்டு போட்டிகளில் கலக்க காத்திருக்கும் காங்கேயம் காளைகள்.
    • காளைகளும் இளம் காளைகளும் பொதுவாக சாம்பல் நிறத்திலேயே இருக்கும்.

    மதுரை

    பொங்கல் பண்டிகையை முன்னிட்டு மதுரை மாவட்டம் அலங்காநல்லூரில் நடத்தப்படும் ஜல்லிக்கட்டு உலக பிரசித்தி பெற்றது. மேலும் பொங்கல் பண்டிகையன்று அவனியாபுரம், அதற்கு மறுநாள் பாலமேட்டில் நடக்கும் ஜல்லிக்கட்டு போட்டிகளும் பிரபலமானவை.

    அனல் பறக்கும் இந்த ஜல்லிக்கட்டு போட்டிகளை காண மதுரை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பார்வையாளர்கள் வருவார்கள்.

    மதுரை மாவட்டத்தில் நடைபெறும் ஜல்லிக்கட்டு போட்டிகளில் புலிக்குளம், உம்பலாசேரி, ஆலம்பாடி காங்கேயம் ஆகிய நான்கு வகை நாட்டு மாடு இன காளைகள் பங்கேற்கும். அதில் புலிக்குளம் மற்றும் காங்கேயம் காளைகளே அதிக அளவில் இடம்பெறும்.

    நான்கு வகை காளைகளில் மிகவும் ஆக்ரோஷமான, வலிமையானது காங்கேயம் காளை. வலுவான உடல் அமைப்பு, உயரமான திமில், கம்பீரமான நடை, வலிமையான கொம்பு என பல தனித் தன்மைகளைக் கொண்டது காங்கேயம் காளை, ஜல்லிக்கட்டு போட்டியில் அனைவரின் கவனத்தையும் ஈர்க்கக் கூடியது.

    தனது வலிமையை முழு அளவில் காட்டி மாடு பிடி வீரர்களிடமிருந்து தப்புவதில் காங்கேயம் காளைகள் தனித்தன்மை வாய்ந்தவை.

    4000 முதல் 5000 கிலோ வரையிலான வண்டியை கூட இழுக்கும் திறன் கொண்ட காங்கேயம் காளைகள், கடுமையான உள்ளூர் காலநிலை மற்றும் சூழ்நிலைக்கு தகுந்ததுபோல் ஆரோக்கியமாக வளரும். கடும் வெயில் காலம் மற்றும் பஞ்ச காலத்திலும் கூட பனை ஓலை, எள்ளு சக்கை, கரும்பு தோகை, வேப்பந்தழை உள்ளிட்டவைகளை சாப்பிட்டு உயிர் வாழும்.

    பிறக்கும்போது சிவப்பு நிறத்தில் இருக்கும் காங்கேயம் மாடுகள், ஆறு மாதத்திற்கு பிறகு சாம்பல் நிறத்திற்கு மாறிவிடும். காளைகளும் இளம் காளைகளும் பொதுவாக சாம்பல் நிறத்திலேயே இருக்கும்.

    காங்கேயம் காளையில் மயிலை, பிள்ளை, செவலை, காரி என்ற நான்கு வகைகள் உள்ளன. பிள்ளை இன காளை உழவு பணி மற்றும் பாரம் இழுத்தலுக்கும் செவலை காளை மஞ்சுவிரட்டுக்கும் பயன்படுத்தப்படும். காரி இன காளேகளே ஜல்லிக்கட்டு போட்டிக்கு பயன்படுத்தப்படும்.

    காங்கேயம் காளைகளை திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல் ஆகிய இடங்களில் அதிக அளவில் வளர்க்கப்படு கின்றன. மதுரை மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் காங்கேயம் காளைகளை, சிறிய கன்றாக இருக்கும்போதே அங்கிருந்து வாங்கி வந்து, இங்கு வளர்த்து ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்க செய்கிறார்கள்.

    அவனியாபுரம், பாலமேடு, அலங்காநல்லூரில் நடக்க உள்ள ஜல்லிக்கட்டு போட்டிகளில் பங்கேற்கும் காளைகளுக்கு அதன் உரிமையாளர்கள் கடந்த சில நாட்களாகவே தீவிர பயிற்சி அளித்து வருகிறார்கள். காங்கேயம் காளைகளும் ஜல்லிக்கட்டு போட்டியில் ஆக்ரோஷமாக வந்து கலக்க தயாராகி வருகிறது.

    ×