search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fire accident police investigation"

    பெண்ணாடத்தில் நள்ளிரவில் ஏற்பட்ட தீடீர் தீ விபத்தால் 50 கோழி, 2 ஆடுகள் உடல் கருகி பலியானது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
    பெண்ணாடம்:

    கடலூர் மாவட்டம் பெண்ணாடம் காமராஜர் தெருவை சேர்ந்தவர் கோபால். இவர் திருப்பூரில் தங்கியிருந்து அங்கு கூலி வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி கோவிந்தம்மாள் (வயது 55). இவர் பெண்ணாடத்தில் உள்ள தனது கூரை வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் 50 கோழிகள் மற்றும் 10 ஆடுகளை வளர்த்து வந்தார்.

    நேற்று இரவு பெண்ணாடத்தில் பலத்த மழை பெய்தது. இதனால் கோவிந்தம்மாள் வீட்டுக்கு வெளியே கட்டியிருந்த கோழிகள், ஆடுகளை கூரை வீட்டுக்குள் கொண்டு வந்து கட்டினார். பின்னர் வீட்டை பூட்டி விட்டு அவர் பக்கத்து வீட்டில் வசிக்கும் உறவினர் வீட்டுக்கு சென்று தூங்கினார். நள்ளிரவில் திடீரென கோவிந்தம்மாளின் கூரை வீடு தீப்பிடித்து எரிந்தது. வீட்டுக்குள் கட்டியிருந்த ஆடுகள் மற்றும் கோழிகள் தீயில் சிக்கின. அதன் அலறல் சத்தம் கேட்டு கோவிந்தம்மாள் உறவினர் வீட்டில் இருந்து எழுந்து அங்கு வந்து பார்த்தார்.

    தனது வீடு தீப்பிடித்து எரிந்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சியடைந்தார். காப்பாற்றுங்கள்..காப்பாற்றுங்கள்.. என்று கூக்குரலிட்டார். சத்தம் கேட்டு அக்கம் பக்கத்தினர் ஓடி வந்தனர். தீயை அணைக்க முயன்றனர். ஆனால் முடியவில்லை. உடனடியாக திட்டக்குடி தீயணைப்பு துறைக்கு தகவல் தெரிவித்தனர். தீயணைப்பு துறை வீரர்கள் விரைந்து வந்து வீட்டில் எரிந்த தீயை தண்ணீர் பீய்ச்சி அடித்தனர். இருப்பினும் கூரை வீடு முற்றிலும் எரிந்து சாம்பலானது. இதில் தீயில் கருகி 50 கோழிகள், 2 ஆடுகள் பரிதாபமாக இறந்தன.

    மேலும் வீட்டில் இருந்த ரூ.5 ஆயிரம் ரொக்கம், 2 பவுன் தங்க நகைகள், பொருட்கள் மற்றும் வீட்டு பத்திரங்கள் அனைத்தும் எரிந்து தீக்கிரையாகின. இவற்றின் மொத்த மதிப்பு ரூ. 2 லட்சம் ஆகும். தகவல் அறிந்த பெண்ணாடம் போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து பார்வையிட்டனர். கோவிந்தம்மாளின் வீட்டுக்கு மின்சார வசதி கிடையாது. இதனால் மின்கசிவு காரணமாக வீடு தீப்பிடித்து எரிய வாய்ப்பில்லை என்று போலீசார் கருதுகின்றனர்.

    இதையடுத்து முன்விரோதம் காரணமாக மர்ம மனிதர்கள் யாராவது கோவிந்தம்மாள் வீட்டுக்கு தீ வைத்தனரா? என்று பல்வேறு கோணங்களில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. #tamilnews
    ×