search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "farmer son suicide"

    கஜா புயலால் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதால் சிங்கப்பூரில் வேலை பார்த்த விவசாயி மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
    பட்டுக்கோட்டை:

    நாகை மாவட்டம் வேதாரண்யம் அருகே கடந்த மாதம் 16-ந் தேதி கஜா புயல் கரையை கடந்தது. அப்போது வீசிய பேய் காற்றில் டெல்டா மாவட்டங்களில் பேரழிவு ஏற்பட்டது. வீடுகளை இழந்தும், பயிர்களை இழந்தும் மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.

    கஜா புயல் பாதிப்பால் இதுவரை 70-க்கும் மேற்பட்டோர் தற்கொலை செய்தும், மாரடைப்பாலும் இறந்துள்ளனர்.

    இந்த நிலையில் புயலால் குடும்பத்தினர் பாதிக்கப்பட்டதால் சிங்கப்பூரில் வேலை பார்த்த விவசாயி மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

    இந்த சோக சம்பவம் பற்றிய விவரம் வருமாறு:-

    தஞ்சை மாவட்டம் பட்டுக்கோட்டையை அடுத்த திட்டக்குடியை சேர்ந்தவர் கருணாநிதி. இவரது மகன் கலைவாணன் (வயது 32). இவர் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு சிங்கப்பூர் சென்று அங்குள்ள ஒரு தனியார் நிறுவனத்தில் வேலை பார்த்து வந்தார்.

    கஜா புயலால் கருணாநிதி வசித்து வந்த ஓட்டுவீடு சேதமடைந்தது. மேலும் அவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் நின்ற மரங்கள் பல முறிந்து பேரிழப்பை ஏற்படுத்தின.

    இந்த நிலையில் கஜா புயலில் தங்களது வீடு மற்றும் தென்னந்தோப்பு பாதிக்கப்பட்டது குறித்து சிங்கப்பூரில் இருந்த கலைவாணனுக்கு அவரது குடும்பத்தினர் தகவல் கொடுத்தனர். இதை கேட்டு அவர் மிகவும் வேதனைப்பட்டார்.

    அப்போது அவர் தனது குடும்பத்தினரிடம் சேதம் பற்றி கேட்டு தெரிந்து கொண்டு கவலையில் ஆழ்ந்தார். இதில் இருந்து தங்கள் குடும்பம் மீள்வது கடினம் என்று கருதி மனமுடைந்த அவர் இனி வாழ்வதை விட சாவதே மேல் என்று விபரீத முடிவு எடுத்துள்ளார்.

    இதைத்தொடர்ந்து வாழ்க்கையில் விரக்தியடைந்த கலைவாணன் சிங்கப்பூரில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். அவரது உடல் நேற்று இரவு சொந்த ஊரான திட்டக்குடிக்கு கொண்டு வரப்பட்டது. அவரது உடலுக்கு குடும்பத்தினர், உறவினர்கள், மற்றும் கிராம மக்கள் திரண்டு வந்து அஞ்சலி செலுத்தினர்.

    தங்களது குடும்பத்தை நல்ல நிலைக்கு கொண்டு வர வேண்டி வெளிநாட்டுக்கு சென்று வேலை பார்த்த கலைவாணன் புயல் ஏற்படுத்திய இழப்பை அறிந்து தற்கொலை செய்த சம்பவம் பட்டுக்கோட்டை பகுதி மக்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

    தற்கொலை செய்து கொண்ட கலைவாணனுக்கு இன்னும் திருமணமாகவில்லை.
    ×