search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Far Side"

    நிலவின் மறுபக்கத்தை ஆய்வு செய்து, அங்கு பயிரிடும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ளும் வகையில், புதிய லூனார் ரோவரை சீனா அனுப்பி உள்ளது. #China #Mission #Moon
    பீஜிங்:

    நிலவு மற்றும் செவ்வாய் போன்ற பகுதிகளுக்கு மனிதனை அனுப்புவதற்கு முன்னர் அங்கு தாவரங்கள் மற்றும் பிற உயிரினங்களை அனுப்பி அவை எப்படி அங்குள்ள சூழ்நிலைகளை சமாளித்து தாக்குப்பிடிக்கின்றன மற்றும் அவற்றுக்கு எந்தவிதமான பாதிப்புகள் ஏற்படுகின்றன என்று கண்டறிந்து ஆவணப்படுத்துவதை நோக்கமாகக் கொண்டது சீனாவின் சாங் இ (Chang’e Program) திட்டம். இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக ‘சாங் இ 4 மிஷன்’ (Chang’e 4 Mission) எனும் திட்டத்தை சீனா செயல்படுத்தி உள்ளது.
     
    இதுவரை பூமியை நோக்கி காணப்படாத நிலவின் மற்றொரு பகுதியாக  கருதப்படும் வோன் கர்மான் என்னும் பகுதியில் சாங் இ-4 என்னும் இந்த செயற்கைக்கோள் தரையிறங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



    சீனாவிலுள்ள ஷிசாங் விண்வெளி நிலையத்திலிருந்து லோங் மார்ச் 3பி என்னும் ராக்கெட்டில் இந்த ரோபோ, நிலவை நோக்கி செலுத்தப்பட்டது.

    இந்த முயற்சியின் மூலம் நிலவிலுள்ள பாறைகள், மண் ஆகியவற்றை பூமிக்கு கொண்டு வந்து மேலதிக ஆராய்ச்சிகளை செய்வதற்கு சீனா திட்டமிட்டுள்ளது.

    ஜனவரி மாதத்தின் தொடக்க பகுதி வரை இந்த செயற்கைக்கோள் நிலவில் தரையிறங்காது. ஆனால், குறிப்பிட்ட காலம் முடிவு செய்யப்பட்ட பிறகு செயற்கைக்கோள் நிலவின் வேறொரு மூலையிலுள்ள கரடுமுரடான பகுதியில் தரையிறங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

    பல பில்லியன் ஆண்டுகளுக்கு முன்னர் சூரியனின் குறுங்கோள்களில் ஒன்று நிலவில் தெற்கு அரைக்கோளத்திலுள்ள அய்ட்கன் பேசினில் மோதியதால் அங்கு பெரும் பள்ளம் உண்டானது. எனவே, நிலவு குறித்த ஆராய்ச்சிகள் தொடங்கிய காலத்திலிருந்தே வோன் கர்மான் என்னும் இந்த இடத்தில் ஆராய்ச்சிகளை மேற்கொள்வதற்கு பல்வேறு நாடுகளின் விஞ்ஞானிகள் ஆர்வம் காட்டி வருகிறார்கள்.

    தற்போது சீனாவினால் ஏவப்பட்டுள்ள செயற்கைக்கோள் இதுவரை ஆராய்ச்சிகளே மேற்கொள்ளப்படாத நிலவின் தென் துருவப் பகுதியின் புவியியல் அமைப்பு குறித்த தகவல்களை சேமிப்பதோடு அங்கிருந்து பாறை துண்டுகள், மண் மாதிரிகளை பூமிக்கு கொண்டு வரும்.

    Tidal locking அல்லது ஓதப் பூட்டல் என்ற விளைவின் காரணமாக நம்மால் நிலவின் ஒரு பகுதியை மட்டுமே பார்க்க முடிகிறது. ஏனெனில், நிலவை சுற்றி வருவதற்கு எடுத்துக் கொள்ளும் அதே காலத்தை தன்னைத்தானே சுற்றி வருவதற்கும் நிலவு எடுத்துக் கொள்கிறது.

    பொதுவாக நிலவின் 'இருண்ட பக்கம்' என்றழைக்கப்படும் இந்த இடத்திலும் சூரிய வெளிச்சம் காணப்பட்டாலும், பூமியிலிருந்து இந்த இடத்தை பார்க்க முடியாது என்பதால்தான் இதை அவ்வாறு அழைக்கின்றனர்.

    பூமியின் தொலைதூரத்தில் ரேடியோ அலைகளை அடிப்படையாக கொண்ட தொலைநோக்கிகளை நிலவின் தென் துருவத்தில் அமைப்பதற்கான பூர்வாங்க பணிகளையும் இந்த செயற்கைக்கோள் மேற்கொள்ளும்.

    அதுமட்டுமின்றி, நிலவில் உயிரியல் பரிசோதனைகளை மேற்கொள்வதற்காக ஒரு பெட்டிக்குள் உருளைக்கிழங்கு, அராபிடாப்சிஸ் தாவரத்தின் விதைகள் மற்றும் பட்டுப்பூச்சி முட்டைகள்  மூன்று கிலோ கொண்ட கொள்கலனில் கொண்டு செல்லப்பட்டுள்ளன.

    நிலவை அடையும் பட்டுப்பூச்சி முட்டைகள் முதலில் பட்டுப்பூச்சிகளை உற்பத்தி செய்யும், பின்னர் அந்த பட்டுப்பூச்சிகள் நிலவில் கரியமில வாயுவை உற்பத்தி செய்யும். இதற்கிடையில், உருளைக்கிழங்கு மற்றும் அராபிடாப்சிஸ் செடிகள் வளர்ந்து ஒளிச்சேர்க்கை மூலம் ஆக்சிஜனை உற்பத்தி செய்யும். இவை அனைத்தும் ஒன்று சேர்ந்து நிலவில் ஒரு சிறிய சூழ்மண்டலத்தை (simple ecosystem) உருவாக்கும் என்கிறார் ஆய்வாளர் யுவான்சுன்.

    "லூனார் மினி பயோஸ்பியர்' என்று பெயரிடப்பட்டுள்ள இந்த உபகரணத்தை 28 சீன பல்கலைக்கழகங்கள் இணைந்து உருவாக்கியுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.  #China #Mission #Moon
    ×