search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "family card holders"

    கஜா புயலால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 27 பொருட்கள் அடங்கிய அரசின் நிவாரண பெட்டகத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார். #GajaCyclone #EdappadiPalanisamy
    சென்னை:

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 27 பொருட்கள் அடங்கிய நிவாரண பெட்டகத்தை அரசு அறிவித்திருக்கிறது. இந்த நிவாரண பெட்டகத்தை பாதிக்கப்பட்ட மக்களுக்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி இன்று வழங்குகிறார்.

    தமிழகத்தை உலுக்கிய ‘கஜா’ புயல் தனது அடையாளத்தை அழுத்தமாக பதியவிட்டு சென்றிருக்கிறது. தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம் உள்ளிட்ட மாவட்டங்கள் கடுமையான சேதத்தை சந்தித்து இருக்கின்றன.

    கண்ணும் கருத்துமாக கவனிக்கப்பட்ட விளைநிலங்களும், பிள்ளைகள் போல வளர்த்த தென்னை மரங்களும் கடுமையாக சேதமடைந்து விட்டன. வீடுகள் சேதமடைந்து இருக்கின்றன. பல பகுதிகளில் மின்சாரம் தடைபட்டு இயல்பு வாழ்க்கை முடங்கி இருக்கிறது.

    பள்ளிகள், சமூக நலக்கூடங்களில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் மக்கள் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

    ‘கஜா’ புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான உதவிகள் குவிந்து வருகிறது. ஆதரவுக்கரம் நீட்டுவோர் எண்ணிக்கையும் அதிகரித்து வருகிறது. தமிழக முதல்-அமைச்சர் பொது நிவாரண நிதிக்கும் உதவிகள் குவிந்து வருகின்றன.

    இந்தநிலையில் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கான அரிசி, சர்க்கரை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண பெட்டகத்தை தமிழக அரசு அறிவித்து இருக்கிறது. இந்த நிவாரண பெட்டகத்தில் 27 அத்தியாவசிய பொருட்கள் உள்ளன. தற்போதைய சூழலில் எல்லா விதமான அத்தியாவசிய பொருட்களும் ஒருசேர மக்களுக்கு சென்றடைய வேண்டும் என்ற அடிப்படையில் தமிழக அரசு இந்த திட்டத்தை அறிவித்திருக்கிறது.

    குறிப்பாக ‘கஜா’ புயலால் கடும் பாதிப்புகளை சந்தித்திருக்கும் தஞ்சை, நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் 4 லட்சத்து 68 ஆயிரம் குடும்ப அட்டைதாரர்கள் நிவாரண உதவிக்காக காத்திருப்பது அடையாளம் காணப்பட்டுள்ளது.

    இதனால் ஒவ்வொரு குடும்ப அட்டைதாரருக்கும் இந்த நிவாரண பொருட்கள் வழங்கப்படும்போது, அக்குடும்பமே பயன்பெறும்.

    அரிசி, சர்க்கரை, சமையல் எண்ணெய் உள்பட 27 அத்தியாவசிய பொருட்களை தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழகமும், கூட்டுறவு சங்கங்களும் கொள்முதல் செய்து, திருச்சி மற்றும் விழுப்புரத்தில் உள்ள சேமிப்பு கிடங்குகளில் ‘பேக்கிங்’ செய்து வருகின்றன.

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நாகை, திருவாரூர் மாவட்டத்தில் இன்று (புதன்கிழமை) ‘கஜா’ புயல் பாதித்த இடங்களை ஆய்வு செய்கிறார். இந்த ஆய்வின்போதே குடும்ப அட்டைதாரர்களுக்கான நிவாரண பெட்டகம் வழங்கும் திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைக்கிறார்.

    அதனைத்தொடர்ந்து புயல் பாதித்த பகுதிகளில் உள்ள ரேஷன் கடைகள் மூலமாக பாதிக்கப்பட்ட குடும்ப அட்டைதாரர்களுக்கு 27 பொருட்கள் உள்ளடங்கிய நிவாரண பெட்டகம் வினியோகம் செய்யப்பட இருக்கிறது. இந்த நிவாரணம் பெட்டகம் தற்போதைய சூழலில் பாதிக்கப்பட்ட மக்களுக்கான நல்லதொரு திட்டம் என்று மக்கள் கருத்து தெரிவித்திருக்கிறார்கள்.

    புயல் சேத பகுதிகளை பார்வையிடுவதற்காக எடப்பாடி பழனிசாமி நேற்று இரவு 10 மணிக்கு எழும்பூரில் இருந்து சென்னை-காரைக்கால் எக்ஸ்பிரஸ் ரெயிலில் நாகை புறப்பட்டு சென்றார். 
    ×