search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "fake trainer arumugam"

    கோவையில் பேரிடர் ஒத்திகையில் மாணவி பலியான வழக்கில் கைதான போலி பயிற்சியாளரை சென்னைக்கு அழைத்து சென்று விசாரணை நடத்த போலீசார் முடிவு செய்துள்ளனர்.
    கோவை:

    கோவை நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கல்லூரியில் பேரிடர் ஒத்திகையில் மாணவி லோகேஸ்வரி பலியான வழக்கில் பயிற்சியாளர் ஆறுமுகம் கைதானார்.

    அவரை 7 நாட்கள் காவலில் எடுத்து விசாரிக்க அனுமதி கேட்டு கோவை 6-வது மாஜிஸ்திரேட் கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்தனர். மனுவை விசாரித்த மாஜிஸ்திரேட் கண்ணன், 4 நாட்கள் ஆறுமுகத்திடம் விசாரிக்க அனுமதி அளித்தார்.

    இதையடுத்து ஆறுமுகத்தை காவலில் எடுத்து விசாரித்தனர். அவர் போலீசாரிடம் அளித்த வாக்குமூலத்தில் கூறியதாவது:-

    எனது 15-வது வயதில் பெற்றோரை இழந்து விட்டேன். எம்.காம்., பி.எட் படித்துள்ளேன். கன்னியாகுமரியில் உள்ள தொண்டு நிறுவனத்தில் சிறு, சிறு வேலைகள் செய்து வந்தேன். பின்னர் வேலை தேடி 2011-ம் ஆண்டு சென்னை சென்றேன். அங்கு நண்பர் மூலமாக டிரஸ்ட் ஒன்றில் வேலைக்கு சேர்ந்தேன். அங்கு பேரிடர் ஒத்திகை பயிற்சிகளை கற்றுக் கொடுத்தனர்.

    2016-ம் ஆண்டு பேரிடர் பயிற்சி அளிக்கும் பயிற்சியாளராக முழுதகுதி பெற்றதாக கூறி எனக்கு மத்திய அரசின் சான்றிதழை அளித்தனர். பின்னர் டிரஸ்ட் மூலம் தமிழகம் முழுவதும் பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கு பேரிடர் ஒத்திகை பயிற்சி அளிக்க அனுப்பினர். கடந்த 2016-ம் ஆண்டு முதல் மாதம் ரூ.15 ஆயிரத்து 600 சம்பளம் தந்தனர். இதுவரை 1,467 கல்வி நிறுவனங்களில் மாணவர்களுக்கு பேரிடர் மேலாண்மை பயிற்சி அளித்துள்ளேன்.

    கலைமகள் கல்லூரியில் பயிற்சியின் போது மாணவி லோகேஸ்வரி இறந்ததால், போலீசார் விசாரித்த போது நான் பயிற்சியாளர் என்பதற்கான சான்றிதழ்களை காட்டினேன். அப்போது தான் அவை போலியானது என எனக்கு தெரிய வந்தது.

    போலி சான்றிதழ்கள் தந்து என்னை இதுவரை ஏமாற்றி உள்ளனர். என்னை வேலைக்கு சேர்த்து விட்டவரை ஒரே ஒரு முறை மட்டும் பார்த்துள்ளேன்.

    இவ்வாறு அவர் கூறி உள்ளார்.

    ஆறுமுகம் வேலை பார்த்த டிரஸ்ட் குறித்து போலீசார் அவரிடம் துருவி, துருவி விசாரித்த போது முன்னுக்குப்பின் முரணாக பதில் அளித்தார். அவர் கூறும் தகவல்களில் ஏராளமான முரண்பாடுகள் இருப்பதால் அவரை சென்னைக்கு அழைத்து சென்றனர்.

    இன்று சென்னை மாம்பாக்கத்தில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்த உள்ளனர். தொடர்ந்து அங்கு அவர் வேலை பார்த்ததாக கூறும் டிரஸ்ட்டுக்கு நேரில் அழைத்து சென்று விசாரிக்க போலீசார் திட்டமிட்டுள்ளனர்.

    கோவையில் பேரிடர் ஒத்திகையின் போது கல்லூரி மாணவி லோகேஸ்வரி பலியான வழக்கில் போலி பயிற்சியாளரின் வீடு, அலுவலகத்தில் போலீசார் சோதனை நடத்த உள்ளனர்.
    கோவை:

    கோவையில் பேரிடர் ஒத்திகையின் போது கல்லூரி மாணவி லோகேஸ்வரி பலியான வழக்கில் கைதான போலி பயிற்சியாளர் ஆறுமுகத்தின் பின்னணி குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    ஆறுமுகம் சென்னை மாம்பாக்கத்தில் குடியிருந்த வீடு, அலுவலகத்துக்கு போலீசார் சீல் வைத்துள்ளனர். அங்கு ஏராளமான போலி சான்றிதழ்களை பதுக்கி வைத்திருக்கலாம் என போலீசார் கருதுகின்றனர்.

    ஆறுமுகத்தை 7 நாள் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் அனுமதிகேட்டு கோர்ட்டில் மனு செய்துள்ளனர். அந்த மனு இன்று விசாரணைக்கு வருகிறது.அவரை காவலில் எடுத்ததும் சென்னைக்கு அழைத்து சென்று வீடு, அலுவலகத்தில் சோதனை நடத்த உள்ளனர்.

    ஆறுமுகத்துக்கு போலி சான்றிதழ்களை தயாரித்து கொடுத்தது தொடர்பாக சிலரது பெயரை கூறி உள்ளார். இதுதொடர்பாக ஒரு தனிப்படையினர் சென்னையில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

    இதேபோல ஆறுமுகம் நெல்லை, கன்னியாகுமரியில் உள்ள தொண்டு நிறுவனங்களில் சில காலம் வேலை பார்த்ததும், அங்கு ஏராளமான பள்ளி, கல்லூரிகளில் இதேபோன்ற ஒத்திகைகளை நடத்தியதும் தெரிய வந்தது. எனவே மற்றொரு தனிப்படையினர் நெல்லை, கன்னியாகுமரியில் விசாரணையை தீவிரப்படுத்தி உள்ளனர்.

    ஆறுமுகத்தின் சொந்த ஊர் நெல்லை மாவட்டம் வள்ளியூர். எம்.காம். படித்துள்ள இவர் ஜவுளிக்கடையில் வேலை பார்த்துள்ளார். சிறு வயதிலேயே போலியோவால் பாதிக்கப்பட்ட அவரால் நீண்ட நேரம் நிற்க முடியாததால் வேலையை இருந்து நீக்கப்பட்டார்.

    இதனால் விரக்தியடைந்த அவர் ரெயிலில் ஏறி கன்னியாகுமரி சென்றார். அங்கு தெருவோரத்தில் சுற்றிக்கொண்டிருந்த போது மணவாளக்குறிச்சியை சேர்ந்த ஒருவர் ஆறுமுகத்தின் நிலையை கண்டு பரிதாபப்பட்டு, அவரை ஒரு தொண்டு நிறுவனத்தில் வேலைக்கு சேர்த்து விட்டார். பின்னர் அங்குள்ள பள்ளி ஒன்றில் விடுதி வார்டனாக பணியாற்றி உள்ளார்.

    பின்னர் நெல்லையில் உள்ள தனியார் மேல்நிலைப் பள்ளியில் தற்காலிக ஆசிரியராக பணியில் சேர்ந்து பிளஸ்-1, பிளஸ்-2 மாணவர்களுக்கு வணிகவியல் பாடம் நடத்தி உள்ளார். இந்த பள்ளியில் தான் அவர் பேரிடர் மேலாண்மை பயிற்சிகளை கற்றுள்ளார்.

    பின்னர் தன்னார்வ தொண்டு நிறுவனம் ஒன்றில் கணக்காளராக பணியாற்றிய அவர் பல்வேறு பள்ளி, கல்லூரிகளுக்கும் சென்று பேரிடர் ஒத்திகை பயிற்சிகளை தனியாக நடத்தி வந்துள்ளார். ஒரு சில இடங்களில் பயிற்சி நடத்த சென்ற போது போலீசார் அவரிடம் விசாரித்துள்ளனர். அப்போது ஆறுமுகம் தான் பேரிடர் மேலாண்மை ஆணைய பயிற்சியாளர் என்ற சான்றிதழை காட்டி தப்பித்தது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

    ஆறுமுகத்தின் கூட்டாளிகளிடம் போலீசார் விசாரித்த போது அவரை பற்றி தெரியாமல் பழிகியதாகவும், அவர் தங்களுக்கு மத்திய அரசில் வேலை வாங்கி தருவதாக ஆசை காட்டியதாலேயே அவருடன் சென்றதாகவும் கூறினர்.

    ஆறுமுகம் கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு கன்னியாகுமரியில் உள்ள கல்லூரியில் பேரிடர் ஒத்திகை நடத்திய போது, பயிற்சியில் பங்கேற்ற மாணவி ஒருவர் மீது காதல் வயப்பட்டார். தனது மாயஜால வார்த்தைகளால் மாணவியை வீழ்த்தி உள்ளார். பின்னர் அடிக்கடி மாணவியுடன் செல்போனில் பேசி காதலை வளர்த்து வந்துள்ளார். தற்போது அந்த மாணவி கோவையில் உள்ள ஆஸ்பத்திரி ஒன்றில் நர்சாக வேலை பார்த்து வருகிறார். அவரிடம் போலீசார் விசாரித்த போது ஆறுமுகத்தை பற்றி தெரியாமல் அவருடன் பழகி விட்டேன் என கூறி கண்ணீர் வடித்துள்ளார். விசாரணைக்கு பின்னர் போலீசார் அவரை விடுவித்தனர்.

    ஆறுமுகத்தை காவலில் எடுத்து விசாரிக்கும் போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது. #coimbatorestudentdeath
    மாணவியை 2-வது மாடியில் இருந்து தள்ளி விட்டதாக கைது செய்யப்பட்ட பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகத்தை போலீசார் இன்று கோவை கோர்ட்டில் ஆஜர்படுத்தினர்.
    கோவை:

    கோவை தொண்டாமுத்தூர் அருகே உள்ள நாதே கவுண்டன் புதூரை சேர்ந்தவர் நல்லாகவுண்டர். இவரது மகள் லோகேஸ்வரி (19).

    இவர் நரசீபுரத்தில் உள்ள கலைமகள் கலை அறிவியல் கல்லூரியில் பி.பி.ஏ. 2-ம் ஆண்டு படித்து வந்தார். நேற்று முன்தினம் கல்லூரியில் பேரிடர் மேலாண்மை பயிற்சி அளிக்கப்பட்டது.

    அப்போது மாணவியை 2-வது மாடியில் இருந்து தள்ளி விட்டதாக பேரிடர் மேலாண்மை பயிற்சியாளர் ஆறுமுகம் கைது செய்யப்பட்டார். அவரிடம் கடந்த 2 நாட்களாக ஆலாந்துறை போலீசார் விசாரணை நடத்தி வந்தனர்.

    இன்று மதியம் விசாரணை முடிந்து அவரை கோவை ஜே.எம். எண்-5 கோர்ட்டில் மாஜிஸ்திரேட்டு இனியா கருணாகரன் முன்னிலையில் ஆஜர்படுத்தினர். இதனை தொடர்ந்து ஆறுமுகம் கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். அவரை காவலில் எடுத்து விசாரணை நடத்த போலீசார் திட்டமிட்டு உள்ளனர்.

    இதற்காக கோர்ட்டில் போலீசார் மனு தாக்கல் செய்ய உள்ளனர். இந்த விசாரணையின் போது மேலும் பல தகவல்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.



    ×