என் மலர்
நீங்கள் தேடியது "Erode VUC vegetable market"
- பச்சை மிளகாய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது.
- விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து விட்டது.
ஈரோடு:
ஈரோடு வ.உ.சி. மைதானத்தில் நேதாஜி பெரிய காய்கறி மார்க்கெட் செயல்பட்டு வருகிறது. 700 -க்கும் மேற்பட்ட கடைகள் செயல்பட்டு வருகிறது.
இங்கு உள் மாவட்டம், வெளி மாவட்டம், வெளி மாநிலங்களில் இருந்து காய்கறிகள் விற்பனைக்கு கொண்டுவரப்படுகிறது. கடந்த சில நாட்களாக காய்கறிகள் விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்தும் குறைந்துள்ளதால் பல்வேறு காய்கறிகள் விலை அதிரடியாக உயர்ந்து வருகிறது.
குறிப்பாக தக்காளி விலை புதிய உச்சத்தை தொட்டது. கடந்த மாதம் ஒரு கிலோ தக்காளி ரூ.30 -க்கு விற்கப்பட்ட நிலையில் நேற்று ஒரு கிலோ தக்காளி ரூ.100-க்கு விற்கப்பட்டது. இந்நிலையில் இன்று தக்காளி வரத்து சற்று அதிகரித்துள்ளது.
நேற்று ஆயிரம் கிலோ பெட்டி தக்காளி வரத்தான நிலையில் இன்று 3 ஆயிரம் கிலோ தக்காளி பெட்டிகள் வரத்தாகின. இதனால் இன்று ஒரு கிலோ தக்காளி ரூ.70 முதல் 80 வரை குறைந்து விற்கப்பட்டது.
ஆனால் அதே நேரம் பெல்ட் அவரை, பீன்ஸ், இஞ்சி, பச்சை மிளகாய் தொடர்ந்து புதிய உச்சத்தை நோக்கி செல்கிறது. குறிப்பாக பச்சை மிளகாய் இன்று ஒரு கிலோ ரூ.120 முதல் 130 வரை உயர்ந்து விற்கப்பட்டது. கடந்த மாதம் ரூ.70-க்கு விற்கப்பட்ட நிலையில் இன்று உயர்ந்துள்ளது.
ஒட்டன்சத்திரம், தாளவாடி, பெங்களூர் போன்ற பகுதியில் இருந்து பச்சை மிளகாய் விற்பனைக்கு கொண்டு வரப்படுகிறது. கடந்து சில நாட்களாக விளைச்சல் பாதிக்கப்பட்டு வரத்து குறைந்து விட்டது.
இதனால் பச்சை மிளகாய் விலை கிடு கிடுவென உயர்ந்துள்ளது.
இன்று வ.உ.சி. மார்க்கெட்டில் விற்கப்பட்ட காய்கறி விலை கிலோவில் வருமாறு:-
பீட்ரூட்-60, கேரட்-80, பெல்ட் அவரை-100, பட்ட அவரை-90, கருப்பு அவரை-120, வெண்டைக் காய்-40, கத்திரிக்காய்-50, பாவக்காய்-65, பீர்க்கங் காய்-70, புடலங்காய்-50, கொத்தவரங்காய்-60, சுரக்காய்-20, இஞ்சி-220, உருளைக்கிழங்கு-30, முருங்கைக்காய்-50-60, முட்டைகோஸ்-25, காலிப்ளவர்-40, சின்ன வெங்காயம்-70, பெரிய வெங்காயம்-30, பச்சை மிளகாய்-120-130.






