search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "elder sister loved"

    திருச்சி அருகே அக்காவை காதலித்த ஆத்திரத்தில் கூட்டாளிகளுடன் சேர்ந்து வாலிபரை குத்திக்கொன்ற பிளஸ்-1 மாணவனை போலீசார் தேடி வருகிறார்கள்.

    திருச்சி:

    திருச்சி மாவட்டம் முத்தரசநல்லூர் அருகே உள்ள கணவனூர் பகுதியைச் சேர்ந்தவர் நடராஜன் மகன் விஜய் (வயது 23). பாலிடெக்னிக் படித்து விட்டு திருச்சியில் ரெயில் சிக்னல் பழுது பார்க்கும் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

    நேற்று மாலை ஜீயபுரம் அருகே பழூர் செல்லும் சாலையில் நரசிம்மன் கோவில் அருகில் உள்ள தோப்பில் விஜய் மார்பு, இடுப்பு உள்ளிட்ட பகுதிகளில் கத்திக்குத்து காயங்களுடன் ரத்த வெள்ளத்தில் உயிருக்கு போராடிக்கொண்டிருப்பதாக ஜீயபுரம் போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

    உடனே போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று விஜயை மீட்டு திருச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆம்புலன்ஸ் மூலம் அனுப்பி வைத்தனர். ஆனால் அதிக அளவில் ரத்தம் வெளியேறிய நிலையில் வழியிலேயே விஜய் பரிதாபமாக இறந்தார்.

    இது குறித்து ஜீயபுரம் போலீஸ் துணை சூப்பிரண்டு சிவசுப்பிரமணியம் மற்றும் சப்-இன்ஸ்பெக்டர் ராமரா ஜன், போலீசார் விசாரணை நடத்தினர். விஜயை கத்தியால் குத்தி கொலை செய்த நபர்கள் யார்? இதற்கு காரணம் என்ன? என விசாரணை நடத்தினர்.

    அப்போது காதல் பிரச்சனையில் விஜய் காதலித்த பிளஸ்-2 மாணவியின் தம்பியே கூட்டாளிகளுடன் சேர்ந்து கொலை செய்தது தெரியவந்தது. விஜய் திருச்சிக்கு வேலைக்கு வரும் போது பஸ்சில் தன்னுடன் வந்த பழூரைச் சேர்ந்த பிளஸ்-2 மாணவி ஒருவருடன் காதலில் விழுந்துள்ளார்.

    திருச்சி சத்திரம் பஸ் நிலையத்தில் உள்ள ஒரு தனியார் பள்ளியில் படிக்கும் அந்த மாணவியை தினமும் விஜய் அழைத்து செல்வது என இருந்துள்ளார். இது மாணவியின் பெற்றோருக்கு தெரியவந்துள்ளது.

    இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் காதலுக்கு கடும் எதிர்ப்பு கிளம்பியது. இரு குடும்பத்துக்கும் பிரச்சினை இருந்து வந்துள்ளது. இது விஜய் காதலித்த மாணவியின் தம்பி விஷ்வாவுக்கும் ஆத்திரத்தை ஏற்படுத்தியது. திருச்சியில் தனியார் பள்ளியில் பிளஸ்-1 படிக்கும் மாணவன் விஷ்வா விஜய் மீது ஆத்திரத்தில் இருந்துள்ளார்.

    இந்த நிலையில் நேற்று விஜய்யின் நண்பர் பிறந்த நாள் விழா பழூரில் நடந்துள்ளது. இதில் கலந்துகொண்டு விட்டு, காதலியையும் பார்த்து வரலாம் என விஜய் புறப்பட்டு சென்றுள்ளார்.

    அதன்பிறகு மாலையில் பழூர் சாலை வழியாக மீண்டும் தனது ஊரான கணவனூருக்கு திரும்பியுள்ளார். அப்போது பழூர் நரசிம்மன் கோவில் அருகில் உள்ள ஒரு தோப்பில் விஜய் காதலிக்கும் மாணவியின் தம்பி விஷ்வா நண்பர்களுடன் இருந்துள்ளார்.

    விஜய்யை பார்த்த விஷ்வாவிற்கு ஆத்திரம் ஏற்பட்டுள்ளது. அப்போது மது போதையில் இருந்த அவர்கள் தோட்டத்திற்குள் அழைத்து விஜயுடன் தகராறு செய்துள்ளனர். திடீரென விஜய்யை கத்தியால் குத்திக் கொலை செய்து விட்டு தப்பி ஓடியது முதல்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. விஷ்வா உள்ளிட்ட அவரது கூட்டாளிகளை போலீசார் தேடி வருகிறார்கள்.

    ×