search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Echinochloa frumentacea"

    • அவசர வாழ்க்கை முறைக்கு சிறுதானிய உணவு மிகவும் ஏற்றது.
    • நமது சிறுதானியங்கள் நீரின்றி விளைபவை.

    ஒவ்வொரு அரிசியிலும் யார் பெயர் எழுதப்பட்டிருக்கிறதோ இல்லையோ, நமது உடல் திசுக்கள் ஒவ்வொன்றிலும் நாம் பாரம்பரியமாக உண்டு வந்த தானியங்களின் மூலக்கூறுகள் பதியப்பட்டிருக்கும். நமது நிலத்தில் விளையும் கிழங்கு, காய், கனி, தானியங்கள், இதில் உலவும் விலங்குகளின் பால், ஊண் ஆகியவற்றை ஏற்கும் விதத்திலேயே நமது செல்கள் வடிவமைந்திருக்கும்.

    சந்தை தாராளமயமாதலுக்கு முன்னர்வரை நாம் உண்டுவந்த உணவுப் பொருட்கள் நமது சுற்றுவட்டாரத்தில் மட்டுமே விளைந்தவை.

    இன்றைக்கு நம் கண்ணெதிரில் விளையாத கோதுமை, ஓட்ஸ், சோயா போன்ற பலவும் நம் உணவுப்பட்டியலில் இடம்பிடித்துக்கொண்டு விட்டன. இவற்றை உண்பதா, வேண்டாமா என்பது ஒருபுறம் இருக்கட்டும். காலங்காலமாக உண்டுவந்த தானிய வகைகளை ஏன் திடுமென நாம் கைவிட்டோம்?

    ஆற்றுப்பாசனம் அல்லாத மானாவாரிப் பயிர்கள் விளையும் தமிழக நிலப்பகுதிகளில் விவசாயிகள் சிறிதளவே நெல்லை விளைவித்தார்கள். பெரும்பாலான நிலப்பகுதிகளில் கம்பு, கேழ்வரகு, சாமை, தினை, வரகு, குதிரைவாலி, சோளம் போன்ற தானியங்களையே விளைவித்து வந்தார்கள். நமது சிறுதானியங்கள் நீரின்றி விளைபவை.

    'பசுமை புரட்சி' என்ற பெயரில் அன்றாட பயன்பாட்டு விளைபொருளுக்கு மாறாக பணப்பயிர் விளைச்சலுக்கு மத்திய, மாநில அரசுகள் ஊக்கம் அளித்தன. பணப்பயிர் உற்பத்தி தொடங்கியதும் மக்களுக்கும், மண்ணுக்கும் இடையில் இருந்த உயிர்ப்புமிக்க பிணைப்பு அறுபட்டு விட்டது.

    குறுகிய காலப்பயிர் வகைகளை விவசாயிகள் விளைவிக்க தொடங்கினார்கள். இதன் விளைவாக இந்த மண்ணில் நெல் ஏகபோகமானது போலவே, நமது உணவிலும் அரிசி ஏகபோகமானது. பல தானிய, பலவகை உணவு என்றிருந்த நமது உணவுக்கலாசாரம் சிதைந்து போனது.

    இன்றைய அவசர வாழ்க்கை முறைக்கு சிறுதானிய உணவு மிகவும் ஏற்றது. இன்றைய வேலை முறையில் உடலுழைப்பு குறைந்துவிட்டது என்றாலும், பல்திறன் தேவைப்படும் காலம் இது. பல்திறனை ஈடுசெய்யும் வகையில் குறைந்த அளவில் அதிக ஆற்றலை வழங்கும் உணவே நம்முடைய தேவை. அதற்கு பொருத்தமானவை சிறுதானியங்களே. அதேபோல் சிறுதானிய சமையலும் சட்டென்று முடிந்துவிடக்கூடியது.

    அரிசியும், உளுந்தும் ஊறவைத்து, அரை மணி நேரம் ஆட்டி, எட்டு மணி நேரம் புளிக்க வைத்து இட்லி தட்டிலோ, தோசைக் கல்லிலோ வார்த்து, துணையாக சட்னியோ சாம்பாரோ செய்ய ஏக தடபுடல்களை மேற்கொள்ள வேண்டியிருக்கிறது. அரிசி, உளுந்து போட்டு மாவாட்டி ஒரு வாரத்துக்கு பிரிஜ்ஜில் வைக்கிறார்கள். ஆனால் இந்த மாவு, அரைத்த மறுநாளே தன் உயிராற்றலை இழந்துவிடுகிறது.

    இதை பலர் உணர்வதில்லை. சிறுதானியங்கள் நெருப்புச்சத்து கொண்டவை என்பதால், உடலுக்கு பல நன்மை அளிப்பவை.

    ×