என் மலர்
நீங்கள் தேடியது "ear pain"
- பனி காலங்களில் நோய்த்தொற்று பாதிப்பு அதிகமாக இருக்கும்.
- அழற்சியின் காரணமாக காதுகளின் உள்பகுதி பாதிக்கப்படும்.
பனிக்காலங்களில் பாக்டீரியா, வைரஸ் போன்ற நுண்ணுயிரிகள் செழித்து வளரும். இதனால் நோய்த் தொற்று ஏற்படும் வாய்ப்பு அதிகமாக இருக்கும். குளிர்காலங்களில் குழந்தைகள் மட்டுமில்லாமல். பெரியவர்களும் அடிக்கடி காதுகளில் ஏற்படும் நோய்த்தொற்றால் சிரமப்படுவார்கள். பாக்டீரியா மற்றும் வைரசால் ஏற்படும் அழற்சியின் காரணமாக காதுகளின் உள்பகுதி பாதிக்கப்படும்.
இதுமட்டுமில்லாமல் தொண்டைப்புண், சுவாச நோய்கள் காரணமாகவும் காதுகளில் நோய்த்தொற்று ஏற்படக்கூடும். இதனால் காது வலி, காதுகளில் அடைப்பு ஏற்பட்ட உணர்வு, காதுகளில் இருந்து திரவம் அல்லது சீழ் வடிதல் போன்ற பிரச்சினைகள் உண்டாகும்.
காது, மூக்கு, தொண்டை ஆகிய உறுப்புகள் மூன்றும் ஒருங்கிணைந்தவையாகும். யூஸ்டாசியன் என்ற குழாய் முக்கையும், காதையும் இணைக்கிறது. வறண்ட குளிர் காற்றானது மூக்கு வழியாக உள்ளே போகும்போது. யூஸ்டாசியன் குழாய் தானாகவே மூடிக்கொள்ளும். இதன் காரணமாக காது சவ்வு இழுக்கப்பட்டு காது வலி உண்டாகும்.

குழந்தைகளுக்கு இந்த குழாய் சிறியதாக இருக்கும் என்பதால், அவர்களுக்கு பாதிப்பு அதிகமாக இருக்கும். குளிர்காலத்தில் மென்திகக்கள் உள்ள காது பகுதிக்குள் ரத்த ஓட்டமும், அழுத்தமும் குறைவதாலும் காது வலி, காதில் சீழ் வடிதல் போன்ற தொந்தரவுகள் ஏற்படும்.
குழந்தைகளுக்கும், வயதானவர்களுக்கும் 40 வயதை கடந்த பெண்களுக்கும். சைனஸ் பாதிப்பு உள்ளவர்களுக்கும் இந்த பிரச்சினை அதிகமாக இருக்கும். அதுமட்டுமில்லாமல் காற்றில் உள்ள மாசுக்களும் அலர்ஜி, சைனஸ் போன்ற தொந்தரவுகளை அதிகப்படுத்தும்.
தமிழ்நாட்டில் அக்டோபர் முதல் பிப்ரவரி மாதம் வரை மழை மற்றும் குளிர் காலமாகும். இந்த சமயத்தில் போதுமான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு நம்மை நாமே பாதுகாத்துக் கொள்ள வேண்டும்.
வாகனங்களில் பயணிக்கும்போதும், வெளியிடங்களுக்கு செல்லும்போதும் தலை. கழுத்து மற்றும் காதுகளை நன்றாக மூடும் வகையில் குல்லா, ஸ்கார்ப் ஆகியவற்றை அணிந்து செல்ல வேண்டும்.
காது மாஸ்க், சுகாதாரமான பஞ்சு போன்றவற்றை பயன்படுத்தி காதுகளுக்குள் குளிர்ந்த காற்று செல்லாதவாறு தடுக்க வேண்டும்.
இஞ்சி, பூண்டு, தூதுவளை, துளசி, எலுமிச்சை, மஞ்சள் போன்ற மருத்துவ குணம் கொண்ட பொருட்களை அடிக்கடி உணவில் சேர்க்க வேண்டும்.
வெந்நீர் கொண்டு ஆவி பிடிப்பது, மூக்கடைப்பு போன்ற தொந்தரவுகளை குறைக்கும். அவ்வப்போது சூடான நீரில் உப்பு கலந்து தொண்டை நனையும் வகையில் வாய் கொப்பளிப்பது நல்லது.
குளித்து முடித்ததும் காதுகளை மென்மையான பருத்தி துணியைக் கொண்டு ஈரம் இல்லாமல் துடைக்க வேண்டும்.
காதுகளுக்குள் ஊக்கு. பறவைகளின் இறகு, சாவி என கையில் கிடைத்தவற்றை கொண்டு சுத்தப்படுத்துவது ஆபத்தானது. காது வலி ஏற்படும்போது நீங்களாகவே சொட்டு மருந்து வாங்கி காதுகளில் விடுவதையும், இயர்பட்ஸ் கொண்டு காதுகளை சுத்தம் செய்வதையும் தவிர்க்க வேண்டும்.
- சுமார் 15 சதவீதம் பேருக்கு இந்தபிரச்சினை இருக்கிறது.
- டாக்டரின் ஆலோசனை இல்லாமல் காதிற்குள் மருந்துகள் போடக்கூடாது.
நீங்கள் அவதிப்படுவதாக சொல்கின்ற 'பல்சடைல் டின்னிடஸ்' என்பது காதிற்குள் கேட்கும் ஒரு வகை சீரான தாளத்துடன் துடிக்கக்கூடிய சப்தத்தோடு சேர்ந்த காதிரைச்சல் என்பதேயாகும்.

அதாவது உங்களைச் சுற்றி எந்தவித சப்தமும் இல்லாதபோதும் உங்கள் காதிற்குள் மட்டும் உங்கள் இதயத்துடிப்பின் சப்தம் கேட்டுக் கொண்டே இருக்கும். இதை 'சீர்தாள துடிப்புக் காதிரைச்சல்' என்றும் அழைக்கலாம்.
இந்த சப்தம் ஒருபக்க காதிலோ அல்லது இருபக்க காதிலோ கேட்கலாம். சப்தம் காதிற்குள் அதுவாகவே ஏற்படும். பின் சில நிமிடங்களில் அதுவாகவே போய்விடும். சிலருக்கு தொடர்ந்து கேட்டுக் கொண்டே இருக்கும். மொத்த ஜனத்தொகையில் சுமார் 15 சதவீதம் பேருக்கு இந்தபிரச்சினை இருக்கிறது.
இந்த 'சீர்தாள துடிப்புக் காதிரைச்சல்' ஏற்படுவதற்கு பல காரணங்களைச் சொல்லலாம். வயதானவர்களிடம் தான் இந்த பிரச்சினை அதிகமாக இருக்கிறது.

ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் அதிக சப்தத்தை ஒரே நேரத்தில் ஒரேயடியாக கேட்பது, அதிக ரத்த அழுத்தம் உள்ளவர்கள், கழுத்து, தலை போன்ற இடங்களிலுள்ள ரத்தக்குழாய்களில் வீக்கம், காதிற்குள் அதிக அளவில் மெழுகு சேருவது, தலை கழுத்துப் பகுதியில் கட்டிகள், வைரஸ் மற்றும் பாக்டீரியாக்களின் தொற்று, இதய நோயுள்ளவர்கள், நரம்பு மண்டலத்தில் ஏற்படும் நோய்கள், ஹைப்பர்தைராயிடிசம் பிரச்சினை உள்ளவர்கள், ரத்தசோகை உள்ளவர்கள், இதுபோக இன்னும் பல காரணங்கள் காதிரைச்சலை உண்டாக்குகின்றன.
பதற்றம், மனச்சோர்வு, மனக்கவலை, எரிச்சலூட்டும் செயல்கள், சரியான தூக்கமின்மை, காது கேட்கும் திறன் குறைந்து போதல், போக்குவரத்து நெரிசல் மற்றும் மிக அதிக சப்தம் உள்ள இடங்களில் அதிக நேரம் நிற்பது இவைகள் எல்லாம் கூட காதிரைச்சலை உண்டுபண்ணும். காதிரைச்சல் உள்ள பலருக்கு காது கேளாமையும் லேசாக இருக்கக்கூடும்.
இந்த பிரச்சினை உள்ளவர்கள் ரத்த பரிசோதனை, ஆடியோகிராம், ஸ்கேன் முதலிய பரிசோதனைகளின் முடிவுகளுடன் காது மூக்கு தொண்டை சிறப்பு சிகிச்சை நிபுணரைச் சந்தித்து அவரது ஆலோசனையைப் பெற்றுக்கொள்ளவும்.
டாக்டரின் ஆலோசனை இல்லாமல் காதிற்குள் மருந்துகள் போடக்கூடாது. குச்சி, பென்சில், கோழி இறகு, பட்ஸ் போன்றவற்றை காதிற்குள் போட்டுக் குடையக் கூடாது.

மிக அதிக சப்தம் கேட்கும் இடங்களில் வேலை பார்ப்பவர்கள் காதிற்குள் கேட்கும் ஒலியைக் குறைக்க 'இயர் ப்ளக்' என்று சொல்லக்கூடிய ரப்பராலான காது செருகிகளை மாட்டிக் கொள்ளுதல் நல்லது.
பேச்சு சிகிச்சை, ஒலி சிகிச்சை, காது கேட்கும் கருவிகளை உபயோகப்படுத்துதல் போன்றவைகள் இந்த காதிரைச்சல் பிரச்சினைக்கு செய்யப்படும் ஆரம்ப சிகிச்சை ஆகும்.
காதிரைச்சல் என்பது ஒரு நோயினுடைய பிரச்சினையே தவிர இது நோயல்ல. என்ன நோயினால் இரைச்சல் ஏற்பட்டது என்பதைக் கண்டுபிடித்து அதை சரி செய்தால் காதிரைச்சல் சரியாகிவிடும்.






