search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "drinking water waste"

    கீழச்சிவல்பட்டியில் குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் வால்வு உடைந்ததால் குடிநீர் ரோட்டில் பாய்ந்து வீணாகி வருகிறது.
    திருப்பத்தூர்:

    கீழச்சிவல்பட்டி சந்தைப்பேட்டை அருகே உள்ள குடிநீர் மேல்நிலை நீர்த்தேக்கத் தொட்டியின் மூலம் ஊராட்சியின் பல பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்த குடிநீர் நீர்த்தேக்கத் தொட்டி நீண்ட நாட்களாக பராமரிப்பு இல்லாமலும், தொட்டியில் உள்ள குழாய்கள் பழுதடைந்தும் காணப்பட்டு வந்தன. இந்தநிலையில் நேற்று குடிநீர் வினியோகத்திற்காக தொட்டியில் நீர் ஏற்றப்பட்டது.

    அப்போது தொட்டியில் உள்ள கேட்வால்வு எனப்படும் குழாய் திடீரென உடைந்து அருவி போல் தண்ணீர் கொட்டியது. தொடர்ந்து கவனிப்பின்றி இருந்ததால் தண்ணீர் இளையாத்தங்குடி சாலை மற்றும் வாரச்சந்தைக்குள் புகுந்து வீணாகியது.

    நீண்ட நேரம் தண்ணீர் பாய்ந்து வீணாகியதால் மேல்நிலைத் தொட்டி முழுவதும் காலியானது. இதுகுறித்து ஊராட்சி அலுவலகத்தில் புகார் செய்யப்பட்டு கேட்வால்வு மாற்றும் பணி நடைபெற்றது. இந்த பணி தாமதமாக நடந்ததால் பல ஆயிரம் லிட்டர் தண்ணீர் வீணாகியது. இதுகுறித்து சண்முகம் என்பவர் கூறுகையில், உள்ளாட்சி நிர்வாகம் அமைவதற்கு தாமதம் ஆவதால் இதுபோன்ற தவறுகள் ஏற்படுகிறது.

    ஊராட்சி செயலாளர் அனைத்து வார்டு பகுதிகளையும் கண்காணிப்பது கடினம். இதே போல் தெருவிளக்கு மற்றும் சாலைப் பிரச்சினையும் மக்களை மிகவும் வேதனைக்குள்ளாக்கி வருகிறது என்றார். தற்போது அனைத்து பகுதிகளிலும் குடிநீர் பிரச்சினை ஏற்பட்டுள்ள நிலையில் கிடைக்கும் நீரும் வீணாகி வருவதை தடுக்க மாவட்ட நிர்வாகம் உடனடி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்த பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர். 
    ஏர்வால்வில் பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறதே என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.
    நொய்யல்:

    கரூர் மாவட்டம் புகளூர், வேலாயுதம்பாளையம், தவுட்டுப்பாளையம் மற்றும் சுற்று வட்டார பகுதி பொதுமக்களின் குடிநீர் தேவையை பூர்த்தி செய்யும் பொருட்டு தவுட்டுப்பாளையம் காவிரி ஆற்றில் ஆழ்துளை கிணறு அமைக்கப்பட்டு அதில் இருந்து குழாய்கள் மூலம் மேற்கண்ட பகுதிகளுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது.

    இந்த நிலையில் தவுட்டுப்பாளையம் -பாலத்துறை சாலையில் உள்ள ஒரு ஓட்டல் அருகே செல்லும் குடிநீர் குழாயில் அமைக்கப்பட்டுள்ள ஏர்வால்வில் பழுது ஏற்பட்டு குடிநீர் வீணாகி வருகிறது. கரூர் மாவட்டத்தின் பல பகுதிகளில் குடிநீர் தட்டுப்பாடு ஏற்பட்டு பொதுமக்கள் சாலை மறியல் நடத்தி வரும் நிலையில் இதுபோன்று குடிநீர் வீணாகி வருகிறதே என்று சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.

    இதுகுறித்து சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விரைந்து நடவடிக்கை எடுத்து ஏர்வால்வில் ஏற்பட்ட பழுதினை சரி செய்து குடிநீர் வீணாகுவதை தடுக்க வேண்டும் என்று அப்பகுதி பொதுமக்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

    ×