search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Divij Sharan"

    மராட்டிய ஓபன் டென்னிஸ் போட்டியில் இந்தியாவின் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி சாம்பியன் பட்டத்தை வென்றது. #MaharashtraOpen #RohanBopanna #DivijSharan
    புனே:

    மராட்டிய ஓபன் சர்வதேச டென்னிஸ் போட்டி புனேயில் நடந்தது. இதில் நேற்று நடந்த இரட்டையர் இறுதி ஆட்டத்தில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி, இங்கிலாந்தின் லுக் பாம்பிரிட்ஜ்-ஜானி ஓமரா இணையை எதிர்கொண்டது. உள்ளூர் ரசிகர்களின் ஏகோபித்த ஆதரவுடன் ஆடிய போபண்ணா- திவிஜ் சரண் கூட்டணி 6-3, 6-4 என்ற நேர் செட் கணக்கில் எளிதில் வெற்றி பெற்று சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 38 வயதான போபண்ணா வென்ற 18-வது சர்வதேச இரட்டையர் பட்டம் இதுவாகும். திவிஜ் சரணுக்கு இது 4-வது பட்டமாக அமைந்தது.



    இருவரும் 2018-ம் ஆண்டில் எந்த கோப்பையும் வெல்லாத நிலையில், இந்த சீசனை வெற்றியுடன் தொடங்கி அசத்தி இருக்கிறார்கள். 32 வயதான திவிஜ் சரண் கூறும் போது, ‘நிச்சயம் எனக்கு இது சிறப்பான வெற்றி தான். உள்ளூரில் நான் வென்ற முதல் ஏ.டி.பி. பட்டம் இதுவாகும். இது, புதிய சீசனுக்கு எனக்கு நிறைய நம்பிக்கையை தந்துள்ளது’ என்று குறிப்பிட்டார். போபண்ணா- திவிஜ் சரண் இணைக்கு 250 தரவரிசை புள்ளிகளுடன், ரூ.20 லட்சம் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டது. ஆஸ்திரேலிய ஓபனிலும் இவர்கள் இணைந்து விளையாட இருக்கிறார்கள்.

    இதைத் தொடர்ந்து நடந்த ஒற்றையர் இறுதி ஆட்டத்தில் தரவரிசையில் 6-வது இடத்தில் உள்ள கெவின் ஆண்டர்சன் (தென்ஆப்பிரிக்கா), 100-ம் நிலை வீரரான இவா கார்லோவிச்சை (குரோஷியா) சந்தித்தார். இதில் ஆண்டர்சனுக்கு எல்லா வகையிலும் கார்லோவிச் கடும் நெருக்கடி கொடுத்ததால் ஆட்டம் நீயா-நானா என்று பரபரப்புடன் நகர்ந்தது. டைபிரேக்கர் வரை சென்ற முதல் இரு செட்டுகளில் இருவரும் தலா ஒன்றை வசப்படுத்தினர். இதே போல் கடைசி செட்டிலும் அனல் பறந்தது.

    இருவரும் தங்களது சர்வீஸ்களை புள்ளிகளாக மாற்றுவதில் மட்டும் கவனமாக இருந்தனர். ஆண்டர்சன் 6-5 என்று முன்னிலை பெற்று சாம்பியன் பட்டத்திற்குரிய புள்ளியை நெருங்கினார். ஆனால் எதிராளியின் இரண்டு சாம்பியன்ஷிப் புள்ளி வாய்ப்பில் இருந்து தன்னை காப்பாற்றி கொண்ட கார்லோவிச் இந்த செட்டையும் டைபிரேக்கருக்கு கொண்டு சென்றார். டைபிரேக்கரில் தொடக்கத்தில் கார்லோவிச்சின் (5-2) கை ஓங்கினாலும், அதன் பிறகு ஆண்டர்சன் சுதாரித்துக் கொண்டு மீண்டு வெற்றிக்கனியை பறித்தார்.

    2 மணி 44 நிமிடங்கள் நடந்த திரிலிங்கான இந்த மோதலில் ஆண்டர்சன் 7-6 (4), 6-7 (2), 7-6 (5) என்ற செட் கணக்கில் கார்லோவிச்சை சாய்த்து பட்டத்தை சொந்தமாக்கினார். இது அவரது 6-வது பட்டமாகும். 39 வயதான கார்லோவிச் இந்த ஆட்டத்தில் மொத்தம் 36 ஏஸ் சர்வீஸ்கள் வீசியது குறிப்பிடத்தக்கது. வாகை சூடிய ஆண்டர்சனுக்கு ரூ.62 லட்சமும், 2-வது இடம் பெற்ற கார்லோவிச்சுக்கு ரூ.33 லட்சமும் பரிசுத்தொகையாக வழங்கப்பட்டது. #MaharashtraOpen #RohanBopanna #DivijSharan
    செர்பியாவுக்கு எதிரான டேவிஸ் கோப்பை டென்னிஸ் போட்டிக்கான இந்திய அணியில் இருந்து யுகி பாம்ப்ரி, திவிஜ் சரண் விலகியுள்ளனர். #DavisCup #YukiBhambri #DivijSharan
    புதுடெல்லி:

    டேவிஸ் கோப்பை டென்னிசில் உலக குரூப் பிளே-ஆப் சுற்றில் இந்தியா-செர்பியா இடையிலான ஆட்டம் வருகிற 14-ந்தேதி முதல் 16-ந்தேதி வரை செர்பியாவின் கிரால்ஜிவோ நகரில் நடக்கிறது.

    இந்த போட்டிக்கான அணியில் இருந்து இந்திய முன்னணி ஒற்றையர் பிரிவு வீரர் யுகி பாம்ப்ரி மற்றும் சமீபத்தில் ஆசிய விளையாட்டில் இரட்டையரில் தங்கம் வென்ற திவிஜ் சரண் ஆகியோர் விலகியுள்ளனர். திவிஜ் சரண் தோள்பட்டை காயத்தாலும், அமெரிக்க ஓபனில் முதல் சுற்றுடன் நடையை கட்டிய யுகி பாம்ப்ரி கால் முட்டி காயத்தாலும் அவதிப்பட்டு வருகிறார்கள்.

    சகெத் மைனெனி, முதலில் மாற்று வீரராக இடம் பெற்று இருந்தார். இப்போது அவர் பாம்ப்ரிக்கு பதிலாக சேர்க்கப்பட்டு இருக்கிறார். இதே போல் திவிஜ் சரண் இடத்தில் தமிழகத்தின் ஸ்ரீராம் பாலாஜி ஆட உள்ளார்.

    ஆனால் மாற்று ஆட்டக்காரராக இடம் பெற 21 வயதான டெல்லியைச் சேர்ந்த சுமித் நாகல் மறுத்து விட்டார்.

    இதையடுத்து புனேயைச் சேர்ந்த அர்ஜூன் காதே மாற்று வீரராக தேர்வாகி உள்ளார்.

    இது குறித்து அகில இந்திய டென்னிஸ் சங்க செயலாளர் ஹிரோன்மோய் சட்டர்ஜீயிடம் கேட்ட போது, ‘நாங்கள் சுமித் நாகலை தொடர்பு கொண்டு, பாம்ப்ரிக்கு பதிலாக அணியில் இணையும்படி கேட்டுக் கொண்டோம். அதற்கு அவர், சேலஞ்சர்ஸ் கோப்பை போட்டிகளில் விளையாடப் போவதாக கூறி விட்டார். மேலும் அவர், ‘ராம்குமார், பிரஜ்னேஷ் ஆகியோர் ஒற்றையர் ஆட்டங்களில் விளையாடுவார்கள். அதனால் நான் மாற்று வீரர் இடத்தில் தான் இருக்க வேண்டி இருக்கும். அதனால் தான் சேலஞ்சர்ஸ் போட்டியில் ஆட முடிவு செய்துள்ளேன். ஆனால் மிகவும் அவசியம் என்று கருதினால் அணியில் சேருகிறேன்’ என்றும் கூறினார். நிபந்தனைகளின் அடிப்படையில் எந்த வீரரையும் நாங்கள் தேர்வு செய்ய முடியாது. அதனால் இந்த போட்டிக்கு உங்களது பெயரை பரிசீலிக்க மாட்டோம் என்று அவரிடம் கூறி விட்டோம்’ என்றார்.  #DavisCup #YukiBhambri #DivijSharan 
    ஆசிய விளையாட்டுப் போட்டியில் இந்தியாவின் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி தங்கம் வென்று சாதனை படைத்துள்ளது. #AsianGames2018 #RohanBopanna
    ஜகார்த்தா:

    இந்தோனேசியாவில் நடைபெற்று வரும் ஆசிய விளையாட்டுப் போட்டியில் இன்று ஆடவருக்கான இரட்டையர் டென்னிஸ் போட்டிகள் நடைபெற்றன. இதில் இந்தியாவின் ரோகன் போபண்ணா- திவிஜ் சரண் ஜோடி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

    இறுதிப்போட்டியில் ரோகன் போபண்ணா-திவிஜ் சரண் ஜோடி, கஜகஸ்தான் நாட்டின் பியூப்லிக்-யேவ்சயவ் ஜோடியை எதிர்கொண்டது. போட்டியின் துவக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய இந்திய ஜோடி, இறுதியில் 6-3, 6-4 என்ற செட்கணக்கில் வெற்றி பெற்று தங்கப் பதக்கத்தை தட்டிச் சென்றது.



    இதன்மூலம் ஆசிய போட்டியில் இந்தியா 6 தங்கப் பதக்கங்களை வென்றுள்ளது. இதுதவிர 4 வெள்ளி, 13 வெண்கலம் என மொத்தம் 23 பதக்கங்களுடன் பதக்க பட்டியலில் 7-வது இடத்திற்கு முன்னேறியது. #AsianGames2018 #RohanBopanna
    பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் தொடரில் யூகி பாம்ப்ரி - டிவிஜ் ஷரன் ஜோடி 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. #FrenchOpen
    பிரெஞ்ச் கிராண்ட் ஸ்லாம் டென்னிஸ் தொடர் பாரிஸில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் இரட்டையர் பிரிவில் யூகி பாம்ப்ரி - டிவிஜ் ஷரன் ஜோடி புரவ் ராஜா - பேப்ரிஸ் மார்ட்டின் ஜோடியை எதிர்கொண்டது. இதில் யூகி பாம்ப்ரி ஜோடி 6-3, 5-7, 6-4 என வெற்றி பெற்று 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது.

    ரோஹன் போபண்ணா - ரோஜர் வாஸலின் ஜோடி ஏற்கனவே 2-வது சுற்றுக்கு முன்னேறியுள்ளது. இந்த ஜோடி ஸ்பெயின் ஜோடியான பென்ஜமின் போன்ஸி - கிரேகோய்ர் ஜேக் ஜோடியை எதிர்கொள்கிறது.
    ×