search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Disadvantages of Using Earphones"

    • தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது.
    • இயர்போன் பயன்படுத்துவதால் காது, கண், மூளை என மூன்றுமே பாதிப்படைகிறது.

    ஒவ்வொரு நாளும் நம்முடைய தொழில்நுட்பத்தின் வளர்ச்சி அதிகரித்துக் கொண்டே தான் இருக்கிறது. அதற்கான முக்கியக் காரணம் `ஸ்மார்ட் ஃபோன்கள்'. ஆம்...! இன்று சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை நம் அனைவருடைய கைகளிலுமே புகுந்து விளையாடுகிறது இந்த `ஸ்மார்ட்' போன்கள்.

    செல்போன் உடன், அதன் இணைபிரியா நண்பனாக காதில் மாட்டிக்கொள்ள இயர்போன் கட்டாயம் கையில் வைத்துக்கொள்ள வேண்டிய நிலை வேறு. இதன் பயன்பாடு காரணமாக 1.1 பில்லியன் இளைய தலைமுறையினர் காது கேளாத அபாயத்தில் இருப்பதாக உலக சுகாதர நிறுவனம் தெரிவித்துள்ளது.

    கதிர்வீச்சு காது கேளாமைக்கு காரணமா...?

    செல்ஃபோனை பார்த்துக்கொண்டே இருப்பதால் கண் பார்வை பாதிப்படைகிறது. ஆனால் அதேநேரத்தில் அதிக நேரம் இயர்போன் பயன்படுத்துவதால் காது, கண் மற்றும் மூளை என மூன்றுமே பாதிப்படைகிறது. செல்ஃபோன் அழைப்புகளின் போது `ரேடியோ ஃப்ரீக்வன்ஸி' எனப்படும் கதிர்வீச்சு அதிர்வெண் வெளிப்படும். இது அதிகளவிலான பாதிப்பை உண்டாக்கும். அதாவது, ஒருவரின் மூளை வரை சென்று பாதிப்பை உண்டாக்கக் கூடியது. இந்த கதிர்வீச்சுகளின் வேகமானது குறையவும் செய்யலாம், கூடவும் செய்யலாம் அது முழுக்க முழுக்க அவரவர் பயன்படுத்தும் நேரத்தைப் பொறுத்தது.

     தொடர்ந்து பாடல் கேட்பது தவறா...?

    காதுகளில் இயர்போன்களை மாட்டிக்கொண்டு பேசுவதைக் காட்டிலும் சத்தமாக பாட்டு கேட்பதையே பலரும் விரும்புகிறார்கள். தொடர்ந்து அதிக நேரம் பாடல்கள் கேட்கும் போது நம்முடைய காதுகள் செவித்திறனை இழப்பதற்கான வாய்ப்புகள் உள்ளன.

    மேலும் இது தொடர்ந்து நீடிக்கும்பட்சத்தில் காதுகளின் உயிரணுக்களின் உணர்ச்சி நிரந்தர சேதத்திற்கு வழிவகுக்கும். இதனை மீண்டும் சரிசெய்ய சாத்தியமே இல்லை. இதனால் நிரந்தர காது கேளாமை கூட ஏற்படலாம்.

    மன அழுத்தம் மற்றும் கவனச்சிதறலுக்கு என்ன காரணம்...?

    இயர்போன்களை பயன்படுத்துவதை ஒரு அன்றாட பழக்கமாகக் கொள்வது ஒருவரது சமூக வாழ்க்கை மற்றும் மன ஆரோக்கியத்தை பாதிக்கும். சில சமயங்களில் அதிகப்படியான பதட்டம் மற்றும் மன அழுத்தத்தையும் ஏற்படுத்தும். இறுதியாக நம்முடைய மனஅமைதி கெடும். அதுபோக, இயர்போன்களில் தொடர்ந்து பாடல்களைக் கேட்பதால் சாதாரணமாக கவனம் செலுத்துவதில்கூட குறைபாடு ஏற்படுகிறது. இது படிப்பு, வேலை அல்லது பிற செயல்பாடுகளில் தவறுகள் ஏற்பட வழிவகுக்கும்.

    இயர்போன்களைப் பயன்படுத்துவதால் இதய நோய் வருமா...?

    இயர்போன்களை அதிகநேரம் காதில் மாட்டிக்கொண்டு இசையைக் கேட்பதால் காதுகளுக்கு மட்டுமின்றி இதயத்திற்கும் நல்லதல்ல என்கிறார்கள் ஆய்வாளர்கள். இதனால் இதயம் வேகமாக துடிக்கும். அதோடு இதயம் சார்ந்த அதிக பாதிப்புகள் ஏற்படலாம்.

     பாதிப்பைக் குறைப்பதற்கான வழிமுறைகள்:

    சத்தங்கள் டெசிபல் என்ற அளவீடுகளில் அளக்கப்படுகின்றன. அதாவது 60 டெசிபல்களுக்கு குறைவாகக் கேட்டால் காதுகள் பாதிப்பு அடைவதில் இருந்து பாதுகாக்கப்படும். ஆனால், 85 டெசிபலுக்கு மேல் இருக்கக்கூடிய சத்தங்களை மீண்டும் மீண்டும் கேட்டால் செவித்திறன் பாதிக்கப்படும். எனவே, 60 டெசிபலுக்கு குறைவாக பயன்படுத்துவது நல்லது. ஒரு நாளைக்கு ஒரு மணி நேரத்துக்கும் குறைவாக இயர்போன் பயன்படுத்துவது பாதுகாப்பானது.

    இயர்போன்களுக்கு பதில் ஹெட்போன்களை பயன்படுத்தலாம். ஹெட்போனை காதுகளுக்குமேல் வைத்துக் கேட்பதால் அதில் இருந்து வெளியாகும் சத்தம் செவிப்பறையில் நேரடியாகப் பாதிப்பை உண்டாக்காது.

    ஹெட்போனோ அல்லது இயர்போனோ... தொடர்ந்து கேட்காமல் இடைவெளிவிட்டு கேட்பது நல்லது. அதாவது அரை மணி நேரம் கேட்டால் 5 நிமிட ஓய்வும் அதே நேரத்தில் ஒரு மணி நேரம் கேட்டால் 10 நிமிட ஓய்வும் கொடுக்க வேண்டும். இயர்போனை மற்றவர்களோடு பகிர்ந்துகொள்வது நல்லதல்ல. காதில் தொற்று ஏற்படாமல் இருக்க தினமும் இயர்போனை சுத்தம் செய்ய வேண்டும்.

    ×