search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Coovum River"

    • பாலத்தை சரிவர பராமரிப்பு செய்யாததால் பழுதடைந்த நிலையில் உள்ளது.
    • கூவத்தை கழிவுநீர் கால்வாயாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர்.

    சென்னை அண்ணா சாலையில் ஜிம்கானா கிளப் அருகில் கூவம் ஆற்றின் குறுக்கே பழமையான பெரியார் பாலம் அமைந்து உள்ளது. இந்த பாலம் செயின்ட் ஜார்ஜ் பாலம் என்றும் அழைக்கப்பட்டது.

    சென்னை தீவுத்திடலின் தெற்கு பகுதியை மாநகரின் சுற்றுப்புற பகுதிகளுடன் இணைப்பதற்காக கூவம் ஆற்றின் குறுக்கே இந்த பாலம் முதலில் 1805-ம் ஆண்டு புனித ஜார்ஜ் என்ற பெயரில் கட்டப்பட்டது.

    புனித ஜார்ஜ் கோட்டையில் இருந்து திருவல்லிக்கேணியின் சுற்றுப்புற பகுதிகளை இணைக்கும் வகையில் உருவாக்கப்பட்டது. இந்த பாலம் திருவல்லிக்கேணி பாலம் என்றும் முன்பு அழைக்கப்பட்டது.

    பெரியார் பாலம்

    1920-ம் ஆண்டில் மீண்டும் புதுப்பித்து கட்டப்பட்டது. சுதந்திரத்திற்கு பிறகு புனித ஜார்ஜ் பாலம், பெரியார் பாலம் எனவும் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இந்த பாலத்தின் வழியாக தினமும் பல ஆயிரக்கணக்கான பஸ், கார், வேன், மோட்டார் சைக்கிள்கள் சென்று வருகின்றன.

    ஏராளமான பொதுமக்களும் இந்த பாலத்தின் வழியாக நடந்து சென்று வருகிறார்கள். இந்த நிலையில் இப்பாலம் பழுதடைந்து உள்ளது. இந்த பாலத்தின் பக்கவாட்டு சுவர்களில், தூண்களில் மரம், செடி, கொடிகள் முளைத்து வளர்ந்து உள்ளன.

    பாலத்தை சரிவர பராமரிப்பு செய்யாததால் பழுதடைந்த நிலையில் உள்ளது. பாலத்துக்கு கேடு விளைவிக்கும் மரம், செடிகளை உடனடியாக அகற்ற வேண்டும். இதேபோல் கூவம் பாலத்தின் கரையோர பகுதிகளில் குப்பைகள் குவிந்து கிடக்கின்றன. இதன் அருகில் உள்ள புதர்களில் விஷ பூச்சிகள், பாம்புகள் நடமாட்டம் உள்ளன.

    மேலும் இந்த பாலத்தில் வாகன ஓட்டிகள் பயத்துடன் பயணம் செய்ய வேண்டிய அவலநிலை ஏற்பட்டு உள்ளது. இந்த பாலத்தின் கைப்பிடி சுவர் உயரம் குறைவானதாக உள்ளது. இதனால் இரவு நேரங்களில் இந்த பாலத்தின் வழியாக நடந்து செல்பவர்கள் தடுமாறி கூவம் ஆற்றில் விழுந்து விட வாய்ப்பு உள்ளது.

    எனவே கைப்பிடி சுவர்களின் உயரத்தை அதிகரித்து பாதுகாப்பு கம்பிகள், வேலிகள் அமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    சென்னை மாநகரில் பாயும் 3 ஆறுகளில் ஒன்று கூவம் ஆறு. ஒருகாலத்தில் தூய நீர் ஓடிய இந்த ஆற்றில் மீன் பிடிப்பும், படகு போட்டியும் நடந்தன.

    கூவம் ஆறு

    இந்த ஆறானது சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் உள்ள விவசாய நிலங்களுக்கு முக்கிய நீர் ஆதாரமாக விளங்கியது. 75 கி.மீ. ஓடும் இந்த கூவமானது, சென்னையின் புறநகரில் 40 கி.மீட்டரும், நகருக்குள் 18 கி.மீட்டரும் ஓடுகிறது. சென்னை மாநகர பகுதியில் கழிவுநீர் ஆறாக கூவம் ஆறு இப்போது ஒடுகிறது.

    கூவத்தை கழிவுநீர் கால்வாயாக மக்கள் பயன்படுத்தி வருகின்றனர். சென்னை நேப்பியர் பாலம் அருகே வங்கக்கடலில் இது கலக்கிறது. எழும்பூர், புதுப்பேட்டை கூவம் ஆற்றங்கரையோர பகுதிகளில் ஆக்கிரமிப்பு குடிசை வீடுகள், கார், டூவீலர் ஒர்க் ஷாப், ஆகியவை கடந்த 3 ஆண்டுகளுக்கு முன் அகற்றப்பட்டன.

    இந்த நிலையில் தற்போது இந்த கார்டன் பகுதிகளில் மீண்டும் ஆக்கிரமிப்புகள் செய்யப்பட்டு உள்ளன. அங்கு பழைய கார், வேன்கள், இருசக்கர வாகனங்கள் நிறுத்தப்பட்டு உள்ளன. இதனால் அந்த வழியாக வாகன போக்குவரத்து பாதிக்கப்பட்டு வருகிறது. பொதுமக்கள் செல்ல முடியாத அளவுக்கு பல்வேறு இடையூறுகள் ஏற்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அப்பகுதியில் கழிவுப் பொருட்கள் சாலையோரம் கொட்டப்பட்டு உள்ளதால் அங்கு துர்நாற்றம் வீசுகிறது. எனவே இதுகுறித்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்து உள்ளனர்.

    • ஒரு லிட்டர் தண்ணீரில் 2 முதல் 8 மில்லி கிராம் கரைந்த ஆக்சிஜன் இருக்க வேண்டும்.
    • நகர மயமாக்கல், மோசமான கண்காணிப்பில் இந்த ஆறுகளில் கழிவுகள், ரசாயன குப்பைகள் கொட்டப்பட்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது.

    சென்னை:

    சென்னை நகரில் பாயும் முக்கிய ஆறுகளாக கூவம், அடையாறு ஆறு, பக்கிங்காம் கால்வாய் உள்ளன. தற்போது இந்த ஆறுகளின் தண்ணீர் மாசு அடைந்து பயன்படுத்த முடியாத நிலையில் உள்ளன.

    இதனை சரி செய்ய அரசு தீவிர நடவடிக்கை எடுத்து வருகிறது.

    இந்த நிலையில் தமிழ்நாடு மாசுகட்டுப்பாடு வாரிய அதிகாரிகள் நடத்திய பரிசோதனையில் அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆகிய 3 நீர் நிலைகளும் பயன்படுத்த முடியாத அளவில் இருப்பது தெரிய வந்து இருப்பது அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.

    தேசிய நதிகள் பாதுகாப்பு திட்டத்தின் கீழ் மாநிலம் முழுவதும் உள்ள ஆறுகள் மற்றும் நீர்நிலைகளின் மாதிரிகள் சேகரிக்கப்பட்டன. இதில் அடையாற்றில் 23 இடங்களிலும், கூவம் ஆற்றில் 18 இடங்களிலும் பக்கிங்காம் கால்வாயிலும் மாதிரிகள் சேகரிக்கப்பட்டு ஆய்வுகள் செய்யப்பட்டது.

    இதில் அடையாறு மற்றும் கூவம் ஆற்றில் மாதிரி சேகரிக்கப்பட்ட 41 இடங்களில் எதிலும் கரைந்த ஆக்சிஜன் இல்லை என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகி இருக்கிறது.

    இதனால் இந்த நீரில் எந்த வகை உயிரினங்களும் வாழ தகுதி இல்லாதவையாக மாறி இருக்கிறது.

    ஒரு லிட்டர் தண்ணீரில் 2 முதல் 8 மில்லி கிராம் கரைந்த ஆக்சிஜன் இருக்க வேண்டும். இதேபோல் ரசாயன ஆக்சிஜன் 30 வரை இருக்கலாம்.

    சுத்திகரிக்கப்பட்ட தண்ணீரில் உயிரியல் ஆக்சிஜன் 20-க்கும் கீழ் இருக்க வேண்டும். ஆனால் நெசப்பாக்கம் மற்றும் பெருங்குடியில் உள்ள கழிவுநீர் சுத்திகரிப்பு நிலையங்களில் 56-க்கும் மேல் உள்ளது. நெசப்பாக்கத்தில் இருந்து சுத்திகரிக்கப்பட்ட தண்ணீர் கூவம் மற்றும் பெருங்குடியில் இருந்து அடையாற்றில் கலக்கிறது.

    இந்த தகவல்கள் தமிழ்நாடு மாசுகட்டுப்பாட்டு வாரியத்தின் நீர்பகுப்பாய்வு ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளதாக தெரிகிறது.

    இதுதொடர்பாக சமூக ஆர்வலர் ஒருவர் கூறும்போது, 'அடையாறு, கூவம், பக்கிங்காம் கால்வாய் ஆறுகள் பல ஆண்டுகளுக்கு முன்பே பயன்படுத்த முடியாத நிலைக்கு சென்று விட்டன.

    தற்போது மாசுக்கட்டுப்பாட்டு வாரியத்தின் அறிக்கை இதை உறுதிபடுத்தி உள்ளது.

    நகர மயமாக்கல், மோசமான கண்காணிப்பில் இந்த ஆறுகளில் கழிவுகள், ரசாயன குப்பைகள் கொட்டப்பட்டு பயன்படுத்த முடியாத அளவுக்கு மாறிவிட்டது. இனி அரசால் எதுவும் செய்ய முடியாது' என்றார்.

    ×