search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coonoor mettupalayam road"

    கோடை சீசனையொட்டி இன்று (திங்கட்கிழமை) முதல் குன்னூர்- மேட்டுப்பாளையம் சாலை ஒரு வழிப்பாதையாக மாற்றம் செய்யப்படுகிறது என்று போலீஸ் சூப்பிரண்டு தெரிவித்து உள்ளார்.
    ஊட்டி:

    நீலகிரி மாவட்டத்தில் ஆண்டுதோறும் ஏப்ரல், மே மாதங்களில் கோடை சீசன் நடைபெறுகிறது. இதையொட்டி சுற்றுலா பயணிகளை கவரும் வகையில் கோடை விழா நடத்தப்பட்டு வருகிறது.

    இந்த விழாவில் நடப்பாண்டில் ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் மலர் கண்காட்சி, குன்னூர் சிம்ஸ் பூங்காவில் பழக்கண்காட்சி நடைபெற உள்ளது. கோடை சீசனை அனுபவிக்க தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் வெளிமாநிலங்களில் இருந்து சுற்றுலா பயணிகள் அதிகளவில் ஊட்டிக்கு வாகனங்களில் வந்து கொண்டு இருக்கிறார்கள்.

    இதனால் தேசிய நெடுஞ்சாலைகள் மற்றும் நகரின் முக்கிய சந்திப்பு பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்படும். இதனை கருத்தில் கொண்டு கோடை சீசனையொட்டி நீலகிரி மாவட்டத்தில் போக்குவரத்து மாற்றம் செய்யப்பட்டு உள்ளது. இதுகுறித்து நீலகிரி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு சண்முகப்பிரியா வெளியிட்டு உள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு உள்ளதாவது:-

    நீலகிரி மாவட்டத்தில் மே மாதம் நடைபெற இருக்கும் கோடை விழாவிற்கு, வெளியிடங்களில் இருந்து அதிகப்படியாக வரும் சுற்றுலா பயணிகளின் வசதிக்கு ஏற்ப இன்று (திங்கட்கிழமை) முதல் வருகிற மே மாதம் 31-ந் தேதி வரை அனைத்து நாட்களிலும் 24 மணி நேரமும் காவல்துறையினரால் கீழ்க்கண்ட சாலைகள் ஒரு வழிப்பாதையாக மாற்றப்படுகிறது. மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி நோக்கி வரும் அனைத்து வாகனங்களும் குன்னூர் வழியாக அனுமதிக்கப்படும்.

    ஊட்டியில் இருந்து கோவை மற்றும் மேட்டுப்பாளையம் செல்லும் வாகனங்கள் கோத்தகிரி வழியாக மட்டுமே செல்ல அனுமதிக்கப்படும். எக்காரணத்தை கொண்டும் பர்லியார் வழியாக அனுமதிக்கப்பட மாட்டாது. குன்னூரில் இருந்து மேட்டுப்பாளையம் செல்ல வாகனங்கள் கோத்தகிரி வழியாக திருப்பி விடப்படும். மேட்டுப்பாளையத்தில் இருந்து ஊட்டி வரும் அனைத்து லாரிகளும் காலை 6 மணி முதல் இரவு 9 மணி வரை கோத்தகிரி வழியாகவும், பர்லியார் வழியாகவும் அனுமதிக்கப்பட மாட்டாது. லாரி ஓட்டுனர்கள் மற்றும் அதன் உரிமையாளர்கள், காவல்துறைக்கும், சுற்றுலா பயணிகளுக்கும் ஒத்துழைப்பு தரும்படி கேட்டுக்கொள்ளப்படுகிறது. இந்த போக்குவரத்து மாற்றங்கள் இன்று முதல் நடைமுறைக்கு வருகிறது.

    இவ்வாறு அதில் கூறப்பட்டு உள்ளது. 
    ×