search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "construction of a"

    • 3 பாலங்களும் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.
    • கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    சென்னிமலை:

    சென்னிமலை அருகே கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே கட்டப்பட்டிருந்த பழமையான பாலங்களான மண்ணாங்காடு வாய்க்கால் பாலம், எல்லை குமார பாளையம் வாய்க்கால் பாலம் மற்றும் எக்கட்டாம் பாளையம் ஊராட்சியில் உள்ள புதுவலசு வாய்க்கால் பாலம் ஆகிய 3 பாலங்களும் மிகவும் பழுதடைந்து காணப்பட்டது.

    இதனால் கீழ்பவானி வாய்க்காலின் குறுக்கே இருந்த மண்ணாங்காடு வாய்க்கால் பாலம் மற்றும் எல்லை குமாரபாளையம் வாய்க்கால் பாலம் ஆகிய 2 பழுதடைந்த பாலங்களையும் அகற்றிவிட்டு நெடுஞ்சாலை துறையின் மூலம் கூடுதல் அகலத்துடன் புதிய பாலங்கள் கட்ட முடிவு செய்யப்பட்டு அதற்கான பணிகள் தற்போது நடைபெற்று வருகிறது.

    இதில் புதுவலசு வாய்க்கால் பாலம் மட்டும் ரூ.710 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்ட கீழ்பவானி வாய்க்கால் சீரமைப்பு திட்டத்தின் கீழ் புதிய பாலம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது.

    வருகிற ஆகஸ்ட் மாதம் 15-ந் தேதி பவானிசாகர் அணையில் இருந்து கீழ்பவானி வாய்க்காலில் தண்ணீர் திறந்து விடப்பதற்கு முன்பு புதிய பாலங்கள் கட்டும் பணி நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.

    • புதிதாக கல்குவாரி அமைப்பது குறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் டி.என்.பாளையத்தில் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.
    • கொங்கர்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கோவிலூர், வினோபாநகர் கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    டி.என்.பாளையம்:

    டி.என்.பாளையம் அருகே உள்ள கொங்கர்பாளையம் ஊராட்சிக்குட்பட்ட கவுண்டன்பாளையம் வனப்பகுதியையொட்டிய பகுதியில் தனியாருக்கு சொந்தமான இடத்தில் ஒருவர் புதிதாக கல்குவாரி அமைக்க அரசிடம் அனுமதி கேட்டு இருந்தார்.

    இது குறித்து அப்பகுதியை சேர்ந்த பொதுமக்களிடம் கருத்து கேட்பு கூட்டம் டி.என்.பாளையத்தில் உள்ள தனியார் மண்டபத்தில் கோபிசெட்டிபாளையம் ஆர்.டி.ஓ. திவ்ய பிரியதர்ஷினி தலைமையில் நடைபெற்றது.

    கோபி தாசில்தார் ஆசியா, மாவட்ட சுற்றுச்சூழல் துறை பொறியாளர் உதயகுமார், சத்தியமங்கலம் போலீஸ் துணை சூப்பிரண்டு ஜெயபாலன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

    விவசாயிகள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் புதிதாக அமைய உள்ள கல்குவாரி பற்றிய விபரங்களை அதிகாரிகள் எடுத்துரைத்தனர்.

    இந்த கருத்து கேட்பு கூட்டத்தில் பொதுமக்கள் பலர் கல்குவாரி அமைத்தால் நிலநடுக்கம் ஏற்படும், புலிகள் காப்பகம் என்பதால் வனவிலங்குகளுக்கு பாதிப்பு ஏற்படும் மற்றும் அணை பகுதிகள் பாதிக்கப்படும் என எதிர்ப்பு தெரிவித்தனர்.

    ஊராட்சி மன்றம் மற்றும் பொதுமக்கள் சிலர் கல்குவாரி அமைக்க ஆதரவும் தெரிவித்தனர். முடிவில் அதிகாரிகள் இதுகுறித்து பரிசீலனை செய்யப்படும் எனக் கூறினர்.

    குண்டேரிப்பள்ளம் பாசன விவசாயிகள் உள்பட கொங்கர்பாளையம் ஊராட்சியை சேர்ந்த கோவிலூர், வினோபாநகர் கிராமங்களை சேர்ந்த 100-க்கும் மேற்பட்டோர் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

    ×