search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "conducted"

    2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத்தமிழ் அமைப்புகள் மாநாடு நடத்தப்படும் என்று சட்டசபையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார். #EdappadiPalaniswamy
    சென்னை:

    2 ஆண்டுகளுக்கு ஒரு முறை உலகத்தமிழ் அமைப்புகள் மாநாடு நடத்தப்படும் என்றும், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலில், பக்தர்கள் தங்கும் விடுதி 30 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்படும் என்றும் எடப்பாடி பழனிசாமி அறிவித்தார்.



    சட்டசபையில் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி 110-விதியின் கீழ் அறிவிப்பை வெளியிட்டு பேசியதாவது:-

    முன்னாள் முதல்-அமைச்சர் எம்.ஜி.ஆரின் நூற்றாண்டைப்போற்றும் வகையிலும் மற்றும் சமூகத்தின் மீதான அவரின் ஆழ்ந்த அக்கறை, கலைத்தொண்டு, தமிழ் உணர்வு மற்றும் மக்கள் பணி ஆகியவற்றை நம் நாட்டு மக்களும், வெளிநாட்டவர்களும் அறிந்து கொள்ளும் வகையில் ஆய்வுகள் மேற்கொள்ளவும், உலகத் தமிழாராய்ச்சி நிறுவனத்தில் புரட்சித்தலைவர் எம்.ஜி.ஆர். கலை மற்றும் சமூகவியல் மேம்பாடு ஆய்வு இருக்கை ஒன்று ஒரு கோடி ரூபாய் வைப்புத் தொகையாக வைத்துத் தொடங்கப்படும்.

    லண்டனில் உள்ள ஆக்ஸ்போர்டு பல்கலைக்கழகம், தென்னாப்பிரிக்காவில் உள்ள ஜோகனஸ்பார்க் பல்கலைக்கழகம், மலேசியாவிலுள்ள மலேயா பல்கலைக்கழகம், இலங்கையில் உள்ள யாழ்ப்பாணம் பல்கலைக்கழகம் மற்றும் தமிழர்கள் அதிகமாக வாழும் வெளிநாடுகள் மற்றும் பிற மாநிலங்களில் உள்ள கல்வி நிறுவனங்களிலும் தமிழ் இருக்கைகள் தொடர்ந்து நிறுவப்படும். இதற்கென ஆண்டுதோறும் 5 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படும்.

    உலக நாடுகள் மற்றும் இந்திய மாநிலங்களில் வாழும் புலம் பெயர்ந்த தமிழர்கள், தாய்மொழியையும், கலையையும் பண்பாட்டையும் பேணிப்பாதுகாக்கும் நோக்கில், அங்குள்ள தமிழ் அமைப்புகளை ஒருங்கிணைத்து, அவர்கள் மேற்கொண்டு வரும் தமிழாய்வுகள், தமிழ் எழுத்தாளர்களின் படைப்புகள், மொழி பெயர்ப்புகள் போன்ற தமிழ் இலக்கியப் பணிகளை ஒன்றிணைக்கும் வகையில், ஆய்வரங்குகள், கருத்தரங்குகள், கவியரங்குகள், சொற்பொழிவு, பட்டிமன்றம், இலக்கியச்சுற்றுலா, உலகத்தமிழர் கலைத் திருவிழா உள்ளிட்ட நிகழ்வுகளை உள்ளடக்கிய உலகத் தமிழ் அமைப்புகள் மாநாடு 2 ஆண்டுகளுக்கு ஒருமுறை 5 கோடி ரூபாய் செலவில் நடத்தப்படும்.

    ஆங்கில மொழி அறிஞர்கள், ஆங்கில மொழிச்சொற்களை தொகுத்தல் முறையில் அணியமாக்கி, மொழி ஆராய்ச்சி செய்யும் அறிஞர்களுக்கு வழங்கி வருகின்றனர். அதுபோல், உலகின் பழமையான மொழிகளுள் மூத்த மொழியாகக் கருதப்படும் நம் தமிழ் மொழியிலும் அத்தகைய தொகுப்பு தேவை என்பதை உணர்ந்து, சொற்குவை என்ற திட்டம் தொடங்கப்படும்.

    இதில் தமிழில் உள்ள சொற்கள் அனைத்தையும் தொகுத்து நிரல்படுத்துதல், சொற்களின் இலக்கண வகைப்பாடுகளைப் பதிவு செய்தல், நிகரான சொற்களை பதிவு செய்தல், சொற்களின் தொடராக்கப் பரிமாணங்களைப் பதிவு செய்தல், சொற்களுக்கான பொருள் விளக்கத்தைத் தேடும் வசதியை அமைத்துக் கொடுத்தல், அடிக்கடி தேடப்படும் சொற்களுக்கு வண்ண அடையாளம் கொடுத்தல், வந்த சொல்லே மீளவும் வராமல் தடுத்தல் மற்றும் புதிய சொற்களைப் பதிவு செய்தல் போன்ற வசதிகள் உருவாக்கப்பட்டு, அவை இணையதளப் பொது வெளியில் உலகெங்கும் உள்ள தமிழ் அறிஞர்களும், தமிழ் ஆர்வலர்களும், மொழியியல் ஆராய்ச்சியாளர்களும் பயன்படுத்திக் கொள்ளும் வகையில் வடிவமைக்கப்பட்டு வெளியிடப்படும். இதற்கென ஆண்டுதோறும் 1 கோடி ரூபாய் தொடர் செலவினமாக ஒதுக்கீடு செய்யப்படும்.

    உலகத்தமிழாராய்ச்சி நிறுவனத்தில் முதுகலை தமிழ் பயிலும் மாணவர்களை ஊக்குவிக்கும் வகையில், இவ்வாண்டு முதல் ஆண்டுதோறும் தெரிவு அடிப்படையில் முதலாம் ஆண்டு பயிலும் 15 மாணவர்கள், இரண்டாம் ஆண்டு பயிலும் 15 மாணவர் கள் என மொத்தம் 30 மாணவர்களுக்கு மாதந்தோறும் கல்வி உதவித்தொகையாக தலா 2 ஆயிரம் ரூபாய் வழங் கப்படும். இதற்கென தொடர் செலவினமாக ஆண்டுக்கு 7 லட்சத்து 20 ஆயிரம் ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும்.

    தூத்துக்குடி மாவட்டம், திருச்செந்தூர் சுப்பிரமணியசாமி கோவிலுக்கு சொந்தமான இடத்தில் பக்தர்கள் வசதிக்காக பக்தர்கள் தங்கும் விடுதி 30 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் கோவில் நிதியிலிருந்து கட்டப்படும். இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டின் கீழ் உள்ள நிதி வசதி இல்லாத 1,000 கிராமப்புற திருக்கோவில்களில், நடப்பாண்டில் திருப்பணி மற்றும் புனரமைப்பு பணிகள் மேற்கொள்ள, கோவில் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம், 10 கோடி ரூபாய் கோவில் நிதியிலிருந்து வழங்கப்படும்.

    இந்து சமய அறநிலையத் துறை ஆளுகையின் கீழ் இல்லாத ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வசிக்கும் பகுதிகளில் உள்ள 1,000 கோவில்களில் நடப்பாண்டில் திருப்பணிகள் மேற்கொள்ள, கோவில் ஒன்றுக்கு ஒரு லட்சம் ரூபாய் வீதம், 10 கோடி ரூபாய் கோவில் நிதியிலிருந்து வழங்கப்படும்.

    இவ்வாறு அவர் தெரிவித்தார். 
    குழந்தைகளின் உரிமைகள், பாதுகாப்பை உறுதி செய்ய விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடத்த வேண்டும் என்று பெரம்பலூர் கலெக்டர் சாந்தா தெரிவித்தார்.
    பெரம்பலூர்:

    பெரம்பலூர் மாவட்ட குழந்தை பாதுகாப்பு குழுவின் காலாண்டு கூட்டம் மற்றும் பெண் குழந்தைகள், வளர்இளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி, இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் அரசின் வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்வதற்கான கண்காணிப்பு குழுக்கூட்டம் கலெக்டர் சாந்தா தலைமையில் நடந்தது.

    கூட்டத்தில் பாலியல் குற்றங்களிலிருந்து குழந்தைகளை பாதுகாப்பதற்கான சட்டத்தின் கீழ் பதிவு செய்யப்பட்ட வழக்குகள், பாதிக்கப்பட்ட குழந்தைகளின் நிலை, குழந்தை திருமணத்திலிருந்து மீட்கப்பட்ட குழந்தைகளின் தற்போதைய நிலை குறித்து விவாதிக்கப்பட்டது.

    மேலும் பெண் குழந்தைகள், வளர்இளம் பெண்கள் மற்றும் பெண்கள் விடுதி, இல்லங்களை நடத்தும் நிறுவனங்கள் சமூக நலம் மற்றும் சத்துணவுத்திட்டத்துறை அரசாணை எண்.31-ல் குறிப்பிட்டுள்ள வழிகாட்டு நெறிமுறைகள் பின்பற்றுவதை உறுதி செய்தல் மற்றும் இவ்வகை விடுதிகளை உரிய சட்டத்தின் கீழ் பதிவு செய்தல், விடுதிகள் முறையாக செயல்படுவதை உறுதி செய்ய மாவட்டத்திலுள்ள பல்வேறு வகை துறையினர் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள், சைல்டு லைன் அமைப்பின் செயல்பாடுகள் குறித்தும் விவாதிக்கப்பட்டது.

    இதையடுத்து கலெக்டர் சாந்தா பேசியதாவது:-

    குழந்தை திருமணத்தை தடுத்தல் மற்றும் வளர் இளம் பருவத்திலுள்ள மாணவ-மாணவிகள் இடையே தற்கொலை எண்ணத்தை தடுத்து நிறுத்தவும், வட்டார மற்றும் கிராம அளவில் குழுக்கள் அமைக்கப்பட வேண்டும். இது தொடர்பாக பள்ளி ஆசிரியர்களுக்கு திறன் வளர்ப்பு பயிற்சி நடத்தப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு ஆற்றுப்படுத்துதல் வழங்கவும், குழந்தை உரிமைகள் மற்றும் பாதுகாப்பினை உறுதி செய்ய மாவட்ட குழந்தை பாதுகாப்பு அலகு, குழந்தை நலக்குழு, சைல்டு லைன் மற்றும் கல்வித்துறை இணைந்து விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்த வேண்டும்.

    இவ்வாறு அவர் பேசினார்.

    கூட்டத்தில் முதன்மை நீதிபதி (இளைஞர் நீதிக்குழுமம்) அசோக்பிரசாத், மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷாமித்தல், வருவாய் கோட்டாட்சியர் விஸ்வநாதன், உதவி இயக்குனர்(ஊராட்சிகள் மற்றும் தணிக்கை) பாரதிதாசன், மாவட்ட சமூக நல அதிகாரி தமீமுன்னிசா, ஒருங்கிணைந்த குழந்தை வளர்ச்சி திட்ட அதிகாரி பூங்கொடி, மாவட்ட குழந்தை பாதுகாப்பு அதிகாரி அருள்செல்வி உள்பட பலர் கலந்து கொண்டனர். 
    ×