search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "coimbatore bharathiar university"

    கோவை பல்கலைக்கழக துணைவேந்தர் மீது 10 மாதங்களாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும் அவரை காப்பாற்ற சதி நடக்கிறது என்றும் ராமதாஸ் குற்றம்சாட்டியுள்ளார். #Ramadoss
    சென்னை:

    பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது:-

    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் பேராசிரியர் பணிக்கு ரூ.30 லட்சம் கையூட்டு வாங்கிய போது கையும், களவுமாக அப்பல்கலைக்கழகத்துணை வேந்தர் கணபதி கைது செய்யப்பட்ட வழக்கில், 10 மாதங்களாகியும் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை. உலக அளவில் தமிழகத்திற்கு அவப்பெயர் ஏற்படுத்திய இந்த வழக்கில் நீதியை நிலைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்படாதது கண்டிக்கத்தக்கது.

    பாரதியார் பல்கலைக்கழக பணி நியமன ஊழல் வழக்கு குற்றப்பத்திரிகை செய்ய முடியாத அளவுக்கு மிகவும் சிக்கலான வழக்கு அல்ல. பாரதியார் பல்கலைக் கழகத்தில் உதவிப்பேராசிரியராக நியமிக்கப்பட்ட சுரேஷ் என்பவரிடமிருந்து கையூட்டுப் பணத்தை துணை வேந்தர் கணபதி அவரது இல்லத்தில் வைத்து வாங்கிய போது தான் கையும் களவுமாக பிடிபட்டார்.

    அதுமட்டுமின்றி, பணி நியமன ஊழல் தொடர்பான ஆதாரங்களை அழிக்கும் நோக்குடன் துணைவேந்தரும், அவரது மனைவியும் கழிப்பறையில் வீசிய ஆவணங்களும் கண்டுபிடித்து எடுக்கப்பட்டுள்ளன. உதவிப்பேராசிரியர் பணிக்கு கையூட்டு தருவது பற்றி சிலரிடம் துணைவேந்தர் தொலைபேசியில் நடத்திய உரையாடலும் பதிவு செய்யப்பட்டிருக்கிறது. துணைவேந்தர் உள்ளிட்ட இவ்வழக்கின் எதிரிகளை விசாரித்து வாக்குமூலங்கள் பெறப்பட்டிருக்கின்றன. இத்தனை ஆதாரங்கள் இருந்தும் குற்றப்பத்திரிகை தாமதமாவது பல்வேறி ஐயங்களை எழுப்பியுள்ளது.

    வழக்கமாக கையூட்டு வாங்கியவர்களை காவல்துறையின் கையூட்டுத் தடுப்புப்பிரிவு கையும், களவுமாக பிடிக்கும் போது, அரசுத்தரப்பு சாட்சி ஒருவரும் உடனிருப்பார். அதன்பின் சந்தர்ப்ப சாட்சியங்களை சேகரிக்க வேண்டியது தான் அவர்களின் பணியாகும். இதையும் ஒரு சில நாட்களிலேயே கையூட்டுத் தடுப்புப்பிரிவு சேகரித்து விடும் என்பதால் இது போன்ற வழக்குகளில் குற்றப்பத்திரிகையை மிகவும் விரைவாக தாக்கல் செய்து விட முடியும். ஆனால், துணைவேந்தர் கைது செய்யப்பட்டு 310 நாட்கள் ஆகியும் அவர் மீது குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாதது தான் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

    கிரிமினல் வழக்குகளைப் போலவே கையூட்டு வழக்குகளிலும் 90 நாட்களுக்குள் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட வேண்டும். இல்லாவிட்டால் வழக்கு பெரும் பின்னடைவை சந்திக்க நேரிடும். இவ்வழக்கில் இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படாததைக் காரணம் காட்டி தமக்கு மீண்டும் துணை வேந்தர் பதவி வழங்க வேண்டும் என்று கோருவதற்குக் கூட கணபதிக்கு உரிமை உள்ளது.

    இதையெல்லாம் அறிந்திருந்தும் துணைவேந்தர் கணபதி கைது செய்யப்பட்ட வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்ய கையூட்டுத் தடுப்புப் பிரிவினர் தாமதம் செய்கிறார்கள் என்றால் அது இயல்பாக நடப்பதாகத் தெரியவில்லை. இதற்காக காவல்துறை தரப்பில் கூறப்படும் காரணங்களும் ஏற்கும்படியாக இல்லை.

    முன்னாள் துணைவேந்தர் கணபதியின் குரல் பதிவு ஆய்வுக்காக அனுப்பப்பட்டுள்ளது; ஆளுனர் மாளிகையில் இருந்து சில ஆவணங்களைப் பெறக்கால அவகாசம் தேவைப்படுகிறது என்று கையூட்டுத் தடுப்புப்பிரிவு விளக்கம் அளித்ததாக ஊடகங்களில் செய்தி வெளியுள்ளது.

    குரல் பதிவுகளை அதிகபட்சம் 10 நாட்களில் ஆய்வு செய்து விட முடியும்; அதனால் இக்காரணத்தை ஏற்க முடியாது. அதேபோல், தாம் மேற்கொண்ட நடவடிக்கைகளால் பல்கலைக் கழக நிர்வாகங்கள் தூய்மைப்படுத்தப்பட்டிருப்பதாக பெருமைப்பட்டுக் கொள்ளும் தமிழக ஆளுனர், இந்த வழக்கில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்வதற்கு தேவையான ஆவணங்களை இன்னும் வழங்கவில்லை என்பது உண்மையென்றால் அது பெரும் குற்றம்.

    கையூட்டு வாங்கிய போது கையும், களவுமாக கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட கணபதி அதிர்ச்சியூட்டும் பல உண்மைகளைக் கூறியுள்ளார். துணைவேந்தர் பதவிக்காக யாருக்கெல்லாம் பணம் கொடுக்கப்பட்டது, பணி நியமனங்கள், ஒப்பந்தங்கள் ஆகியவற்றின் மூலம் கிடைத்த பணத்தில் இப்போதுள்ள அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுக்கு எவ்வளவு பங்கு தரப்பட்டது என்பது உள்ளிட்ட விவரங்களை வெளியிடப்போவதாக கணபதி மிரட்டியதாகக் கூறப்படுகிறது.

    அதையடுத்து அவருக்கும், அமைச்சர் தரப்புக்கும் செய்து கொள்ளப்பட்ட எழுதப்படாத சமரச உடன்பாட்டின்படி தான் கணபதி மீதான வழக்கு நீர்த்துப் போகச் செய்யப்பட்டு வருவதாகவும், இவ்வழக்கில் ஊழல் குற்றவாளி கணபதி விடுதலை செய்யப்படுவது உறுதி என்றும் உயர்கல்வித் துறை வட்டாரங்களில் பேசப்பட்டு வருகிறது.

    பணி நியமனத்திற்காக கையூட்டு வாங்கி பிடிபட்ட கணபதி குற்றமற்றவர் என்று கூறி விடுவிக்கப்பட்டால் அந்த நாள் தான் நீதியும், நேர்மையும் படுகொலை செய்யப்பட்ட நாளாக இருக்கும். அதன்பின் ஊழலைப் பற்றி பேசுவதே அர்த்தமற்றதாகிவிடும். அப்படி ஒரு நிலை ஏற்படக்கூடாது. எனவே, கோவை பாரதியார் பல்கலைக்கழக பணி நியமன ஊழல் வழக்கில் உடனடியாக குற்றப்பத்திரிகை தாக்கல் செய்து, கணபதி உள்ளிட்டோருக்கு தண்டனைப் பெற்றுத் தர கையூட்டு தடுப்புப் பிரிவு நடவடிக்கை எடுக்க வேண்டும்.

    இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார். #Ramadoss
    கோவை பாரதியார் பல்கலைக்கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க மத்திய அரசின் ஒப்புதலை பெற்ற தமிழக அரசு ரூ.50 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.
    வடவள்ளி:

    கோவை பாரதியார் பல்கலைகழகத்தில் மத்திய, மாநில அரசு திட்டத்தின் கீழ் பல்வேறு வளர்ச்சி திட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. முதல் கட்டமாக தமிழக அரசு நிதி உதவியுடன் ரூ. 20 கோடி செலவில் பல்வேறு உள்கட்டமைப்பு வசதிகள் செய்யப்பட்டது.

    பல்கலைகழகத்தில் மொத்தம் 39 துறைகள் உள்ளது. இதில் 26 துறைகள் சேர்ந்து பல்கலை கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க வலியுறுத்தி தமிழக அரசுக்கு கோரிக்கை அனுப்பபட்டது.

    இதனை ஏற்ற தமிழக அரசு மத்திய அரசின் ஒப்புதலை பெற்று பாரதியார் பல்கலை கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்க ரூ. 50 கோடி நிதி ஒதுக்கி உள்ளது.

    பாரதியார் பல்கலை கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமையும் பட்சத்தில் புற்றுநோய்க்கான அனைத்து மருந்துகளும் இங்கு கண்டு பிடிக்கப்படும்.

    தாவரம் மற்றும் நுண்உயிரிகளிடம் இருந்து மருந்துகளை எடுத்து, அதனை விலங்குகள் மற்றும் தாவரங்களுக்கு செலுத்தி மருந்துகள் கண்டு பிடிக்கும் துறை. புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்களுக்கு கவுன்சிலிங் கொடுக்கும் துறை. மலைவாழ் மக்களின் மருத்துவ முறைகளை பெற்று புற்றுநோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் துறை. திருமூலரின் மருத்துவ குறிப்பில் இருந்து புற்று நோய்க்கு மருந்து கண்டுபிடிக்கும் துறை என பல்வேறு துறைகள் இங்கு அமைய வாய்ப்பு உள்ளது.

    பாரதியார் பல்கலை கழகத்தில் புற்றுநோய் ஆராய்ச்சி மையம் அமைக்கப்படுவதன் நோக்கம் புற்றுநோய் சிகிச்சைக்கு அதிகமான மருத்துவ செலவுகள் ஆகிறது, இதனை குறைப்பதற்கும், புற்றுநோய் பாதிப்பு உள்ளவர்கள் நோயின் பாதிப்பு தெரிவதற்கு முன்பே இறந்து போகும் சூழ்நிலை தற்போது உள்ளது.

    எனவே குறைந்த செலவில் ஏழை, எளிய மக்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கும் விரைவாக அவர்களுக்கு சிகிச்சை அளித்து குணமடைய செய்வதற்காகவும் ஆராய்ச்சி மையம் தொடங்கப்பட உள்ளது. விரைவில் இதற்கான பணிகள் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
    ×