search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Case Adjournment"

    காவிரியில் கழிவுகள் கலப்பதை தடை செய்யக்கோரும் தமிழக அரசின் வழக்கில், விசாரணையை சுப்ரீம் கோர்ட்டு ஒரு வாரத் துக்கு ஒத்திவைத்தது. #TNGovernment #SupremeCourt #Cauverywater
    புதுடெல்லி:

    கர்நாடக மாநிலத்தில் காவிரிக்கரையில் உள்ள சில நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் கழிவுகள் காவிரி ஆற்றில் அதிக அளவில் கலக்கின்றன. குறிப்பாக பெங்களூரு மாநகரத்தின் 80 சதவீத கழிவுகளும், கழிவுநீரும் காவிரியில்தான் கலக்கின்றன. ஆண்டுக்கு சுமார் 5 லட்சத்து 40 ஆயிரத்து 200 மில்லியன் லிட்டர் கழிவுகள் கர்நாடகத்தில் இருந்து காவிரி மூலம் தமிழகத்துக்கு வருகிறது.

    அபாயகரமான கழிவுகளோடு தமிழகத்துக்கு வரும் காவிரி நீரில் விளையும் பயிர்களில் துத்தநாகம், ஈயம், காட்மியம், செம்பு போன்ற வேதிப்பொருள்களின் தன்மை அதிகம் இருப்பதாக ஆய்வில் தெரியவருகிறது. இதனால் காவிரி கரையோரங்களில் வாழ்கிற மக்கள் பலவிதமான நோய்களுக்கு ஆளாகிறார்கள். மாசு கலந்த ஆற்றுநீரில் வாழ்கிற உயிரினங்களுக்கும் பாதிப்பு ஏற்படுகிறது.

    இந்த நிலையில், கர்நாடக மாநிலத்தில் காவிரிக்கரையில் அமைந்து உள்ள நகரங்கள் மற்றும் தொழிற்சாலைகள் வெளியேற்றும் பல்வகையான கழிவுகளை நேரடியாக ஆற்றில் கலக்கவிடாமல், சுத்திகரித்து மீண்டும் ஆற்றில் கலக்கும் வகையில் நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்; காவிரியில் கழிவுகளை விடுவதற்கு நிரந்தர தடை விதிக்க வேண்டும் என்றும் சுப்ரீம் கோர்ட்டில் தமிழக அரசு ஒரு வழக்கு தாக்கல் செய்து உள்ளது.

    இந்த வழக்கை ஏற்கனவே ஏப்ரல் 13-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டு விசாரித்து, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டுக்குழு கர்நாடக பகுதியின் நீர்த்தேக்கத்தில் இருந்து தமிழ்நாட்டுக்கு அனுப்பப்படும் தண்ணீரின் தரத்தை மே மாதம் வரை முறையாக ஆய்வு செய்து ஜூலை மாதத்தில் விரிவான அறிக்கை தாக்கல் செய்ய உத்தரவிட்டது.

    அதன்படி, மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியத்தின் கூட்டுக்குழு ஆய்வு செய்து, அந்த அறிக்கை கடந்த 16-ந்தேதி சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யப்பட்டது.



    அதில், “காவிரி உருவாகும் இடத்தில் கழிவுகள் எதுவும் கலப்பது இல்லை; கர்நாடக பகுதியில் ஓடும் நதியில் எங்கும் கழிவுநீர் கலக்கப்படவில்லை; காவிரி நீர் செல்லும் வழியில் கழிவுநீர் கலக்கப்படுகிறது; தென் பெண்ணையாறு, அக்ராவதி ஆகிய காவிரியின் கிளை நதிகள் மாசு அடைந்த நிலையில் தமிழ்நாட்டுக்குள் நுழைகின்றன” என்று கூறப்பட்டு உள்ளது.

    இந்த அறிக்கையின் மீது தமிழக அரசு மற்றும் கர்நாடக அரசு 2 வாரங்களில் பதில் மனு தாக்கல் செய்ய வேண்டும் என்று நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

    அதையடுத்து கடந்த 27-ந்தேதியன்று தமிழக அரசு தரப்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது.

    இந்த நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நீதிபதிகள் எஸ்.ஏ.பாப்டே, எல்.நாகேஸ்வரராவ் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்பு நேற்று இந்த வழக்கு விசாரணைக்கு வந்தது.

    அப்போது மத்திய மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் தாக்கல் செய்த அறிக்கையின் மீதான பதில் மனுவை தாக்கல் செய்ய ஒருவாரம் அவகாசம் கோரி கர்நாடக அரசு ஒரு மனு தாக்கல் செய்தது.

    அந்த மனுவை ஏற்று, வழக்கின் மீதான விசாரணையை ஒருவாரம் ஒத்திவைத்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். #TNGovernment #SupremeCourt #Cauverywater
    இரட்டை இலை சின்னம் ஒதுக்கீடு தொடர்பாக டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணையை 21-ந் தேதிக்கு டெல்லி ஐகோர்ட்டு ஒத்திவைத்தது. #DoubleLeafSymbol #DelhiHighCourt
    புதுடெல்லி:

    தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் ஒருங்கிணைந்த அ.தி.மு.க. அணிக்கு இரட்டை இலை சின்னத்தை ஒதுக்கீடு செய்து தேர்தல் கமிஷன் உத்தரவிட்டது. இதை எதிர்த்து சசிகலா, டி.டி.வி.தினகரன் சார்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை டெல்லி ஐகோர்ட்டில் நடைபெற்று வருகிறது.



    இந்த வழக்கு நேற்று விசாரணைக்கு வந்தபோது எடப்பாடி பழனிசாமி, ஓ.பன்னீர்செல்வம் தரப்பு வாதம் தொடங்கியது. அவர்களின் சார்பில் மூத்த வக்கீல் முகுல் ரோத்தகி ஆஜராகி வாதிட்டார். அவர் தனது வாதத்தின் போது கூறியதாவது:-

    அ.தி.மு.க.வில் முறையாக பொதுக்குழு கூட்டப்பட்டு பெரும்பான்மை உறுப்பினர்கள் ஆதரவின் அடிப்படையில் பொதுச்செயலாளர் பதவி நீக்கப்பட்டது. இதனையடுத்து பொதுக்குழு உறுப்பினர்களின் பெரும்பான்மை ஆதரவுடன் ஒருங்கிணைப்பாளர், துணை ஒருங்கிணைப்பாளர் ஆகிய பதவிகள் உருவாக்கப்பட்டன.

    குறிப்பாக 2128 பொதுக்குழு உறுப்பினர்களில் 1741 பேர் எங்களுக்கு ஆதரவாக வாக்களித்தனர். சுமார் 10 சதவிகிதம் மட்டுமே எதிராக வாக்களித்துள்ளனர். 90 சதவீதத்துக்கும் அதிகமான பொதுக்குழு உறுப்பினர்களின் பிரமாண பத்திரங்கள் தேர்தல் கமிஷனில் தாக்கல் செய்யப்பட்டது.

    எனவே, காரண காரியங்களை ஆராய்ந்து பெரும்பான்மை அடிப்படையிலேயே தேர்தல் ஆணையம் இரட்டை இலை சின்னத்தை எங்கள் அணிக்கு ஒதுக்கி உள்ளது.

    தேர்தல் ஆணையத்தில் இந்த வழக்கு நடைபெற்ற போது சசிகலா தரப்பினர், ‘பெரும்பான்மை அடிப்படையிலேயே இந்த வழக்கை அணுக வேண்டும்’ என்று கோரிக்கை வைத்துவிட்டு, தற்போது அதனை எதிர்த்து வாதாடுவது எந்த வகையில் நியாயம்?

    மேலும் தேர்தல் கமிஷனில் பிரமாண பத்திரத்தில் கையெழுத்திட்டவர்களிடம் குறுக்கு விசாரணை நடத்தியிருக்க வேண்டும் என்றும் சசிகலா தரப்பில் தெரிவிக்கின்றனர். ஆனால் 90 சதவிகித பொதுக்குழு உறுப்பினர்கள் எங்களுக்கு ஆதரவாக இருக்கும்போது இதுபோன்ற குறுக்கு விசாரணையால் என்ன பயன் இருக்க முடியும்?

    இவ்வாறு முகுல் ரோத்தகி வாதிட்டார்.

    இந்த வாதத்தை கேட்ட நீதிபதிகள் வழக்கின் மீதான விசாரணையை 21-ந் தேதிக்கு ஒத்திவைத்தனர். 
    ×