search icon
என் மலர்tooltip icon

    நீங்கள் தேடியது "Cargo auto accident"

    புளியம்பட்டியில் ஆற்றில் கரைப்பதற்காக விநாயகர் சிலை ஏற்றி சென்ற சரக்கு ஆட்டோ கவிழ்ந்த விபத்தில் பெண் போலீஸ் உள்பட 13 பேர் காயமடைந்தனர்.
    பு.புளியம்பட்டி:

    விநாயகர் சதுர்த்தியை யொட்டி புஞ்சை புளியம் பட்டி பகுதியில் சுமார் 40 விநாயகர் சிலைகள் பூஜைக்கு வைக்கப்பட்டிருந்தன.

    அந்த சிலைகள் அனைத்தும் நேற்று ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்டு பகுடுதுறை பவானி ஆற்றில் கரைக்கப்பட்டன. புஞ்சை புளியம்பட்டி அவ்வை வீதியிலும் இந்து முன்னணி சார்பில் வைக்கப்பட்டிருந்த விநாயகர் சிலையை ஆற்றில் கரைக்க ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

    சிலையை ஊர்வலமாக கொண்டு செல்ல சரக்கு ஆட்டோ தயார்படுத்தப்பட்டது. அதில் விநாயகர் சிலையை ஏற்றி பவானி ஆற்றை நோக்கி எடுத்து சென்றனர்.

    சரக்கு ஆட்டோவை கார்த்தி (வயது 25) என்பவர் ஓட்டி சென்றார்.ஆட்டோவில் அந்த பகுதியை இளைஞர்கள் பலர் ஏறி இருந்தனர்.

    பாதுகாப்புக்காக பவானிசாகர் போலீஸ் நிலைய பெண் காவலர் லட்சுமியும் (32) அந்த ஆட்டோவில் இருந்தார். அவரது சொந்த ஊர் சேலம், வடுகம்பட்டி, பிச்சம்பாளையம் ஆகும்.

    நள்ளிரவில் கணக்கரசம் பாளையம் அருகே சென்ற சரக்கு ஆட்டோ அங்குள்ள வளைவில் திரும்பும்போது திடீரென விநாயகர் சிலையுடன் கவிழ்ந்தது.

    இந்த விபத்தில் சரக்கு ஆட்டோவின் முன்பகுதி பலத்த சேதம் அடைந்தது. ஆட்டோவில் இருந்த பெண் காவலர் லட்சுமி உள்பட 13 பேர் காயம் அடைந்தனர்.

    காயம் அடைந்தவர்கள் பெயர் விவரம் வருமாறு:-

    வசந்த் (29), அருண் (22), தினேஷ்குமார் (22), சஞ்சய் (15), சக்திவேல் (21), காசி (26), சூர்யா (17), பிரனீத் (16), பிரபஞ்ச் (17), சுரேஷ் கிருஷ்ணா (19), அருண் பிரசாத் (17), டிரைவர் கார்த்தி, பெண் காவலர் லட்சுமி.

    காயம் அடைந்தவர்களை அக்கம் பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சத்தியமங்கலம், கோவையில் உள்ள அரசு மற்றும் தனியார் ஆஸ்பத்திரிகளில் சேர்த்தனர். அங்குஅவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

    இது குறித்த புஞ்சை புளியம்பட்டி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். இந்த விபத்து அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது. #tamilnews
    ×